
இலங்கை பின்னணியில் 1988 காலகட்டத்தில் நடக்கும் கதை. போர் மும்முரமாக இருக்கும் சூழலில் இந்திய ராணுவத்தில் இருந்து ஒரு அமைதிப்படை இலங்கைக்கு அனுப்பப்பட்ட சமயத்தில் நடக்கும் நிகழ்வு தான் இந்த மொத்த படம்.
மறுநாள் திருமணம் என்கிற நிலையில் முதல் நாள் இரவில் பெண் வீட்டினர் திருமணத்திற்கு தயாராகி வரும் நிலையில் திடீரென இந்திய அதிரடிப்படை அந்த வீட்டில் முன் பகுதியில் முகாமிடுகிறது. பின்னர் தான் தவறான இடத்திற்கு வந்து விட்டோம் என அவர்களுக்கு தெரிந்கிறது.
ஆனாலும் அவர்களைப் போல் இரண்டு திசைகளில் அனுப்பப்பட்ட மற்ற இரண்டு பிரிவு படைகளை தமிழ் ஈழ படை நிர்மூலம் ஆக்கிவிட்ட நிலையில் இந்த குடும்பத்தில் இருப்பவர்களை பணயமாக வைத்து மறுநாள் காலை தங்களை காப்பாற்ற பாதுகாப்பு படை வரும் வரை நேரத்தை கடத்த முயற்சி எடுக்கிறார் அதிரடிப்படையின் தலைவரான நவீன் சந்திரா.
ஆனால் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினர்களின் உணர்வுகளும் திடீரென அங்கே எதிர்பாராமல் ஏற்படும் போராளிகளின் தாக்குதலும் என நிலைமை மாறுகிறது. அந்த இரவு எப்படி கடந்தது ? உயிர் சேதம் ஏற்பட்டதா ? மறுநாள் காலை திருமணம் நடைபெற்றதா ? என்பது மீதி கதை.
இதற்கு முன்பு இலங்கை தமிழர்களின் பின்னணியில் வெளியாகி உள்ள பல படங்களை பார்த்திருப்போம். பெரும்பாலும் போரின் கொடூரம், ரத்தம், சதை என்றுதான் இடம்பெற்றிருக்கும். ஆனால் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தில் இந்த கதையை யோசித்து இருக்கிறார் இயக்குனர் சோமிதரன்.
இப்படிப்பட்ட போர் சூழலில் ஒரு திருமண வீடு ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தால் அதில் இருப்பவர்களின் உணர்வு எப்படி இருக்கும் என்பதை அந்த ஓர் இரவு நகரும் காட்சிகளில் மிக துல்லியமாக படம் பிடித்து காட்டி இருக்கிறார் அதிரடிப்பரை கேப்டனாக வரும் நவீன் சந்திரா படத்தின் முக்கிய தூணாக இந்த கதையை தாங்கி பிடிக்கிறார்.
தன்னுடைய வீரர்கள் அனைவரும் பொங்கி எழும்போது அவர்களை அமைதிப்படுத்தி சரியான முடிவை சரியான நேரத்தில் எடுப்பதை பார்க்கும்போது இப்படி பல வீரர்கள் பொறுப்புடன் செயல்பட்டு இருந்தால் பெருமளவு சேதங்களை தவிர்த்திருக்கலாமோ என்கிற ஏக்கமும் எழுகிறது.
வித்தியாசமான ஒரு கிளைமாக்ஸ் கொடுத்து மன நிம்மதியுடன் நம்மை அனுப்புகிறார் சோமிதரன். படத்தில் நவீன் சந்திரா தவிர கயல் டேவிட், நடிகை சித்து குமரேசன் ஆகியோர் மட்டுமே தெரிந்த முகம். மற்றபடி பெரும்பாலும் அனைவரும் புதுமுகங்கள் என்றாலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இயல்பான முறையில் அனைவருமே வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
குறிப்பாக அந்த வீட்டில் மணப்பெண்ணின் தாயாக நடித்திருக்கும் கபிலா வேணுவும் அந்த வீட்டின் மனிதராக இருந்து அவர்களை வழிநடத்திச் செல்லும் அந்த கதாபாத்திரமும் அதேபோல போராளி கதாபாத்திரங்களும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அதிரடி பாதையில் இருந்து கோபத்தில் பொங்கி எழுந்து அடிக்கடி படம் பார்ப்பவர்களுக்கு திகில் ஏற்படுத்த அந்த வீரர் கதாபாத்திரமும் பாராட்டுக்குரியது.
இலங்கையிலேயே நாமும் இருப்பது போன்ற, அந்த திருமண வீட்டிற்குள் நாமும் கலந்து கொண்டதைப் போன்ற ஒரு உணர்வை ஒளிப்பதிவாளர் செல்வரத்தினம் பிரதீபன் கொடுத்திருக்கிறார். கே-யின் இசையும் திருமண வீட்டின் மகிழ்ச்சியையும் மற்றும் அந்த நீண்ட இரவின் திகிலையும் மாற்றி மாற்றி நமக்கு கடத்துகிறது.
கமர்சியல் அம்சங்கள் நிறைந்த இந்த படத்தை தமிழ் ஈழப் படம் தானே என ஒதுக்காமல் எல்லோரும் தாராளமாக சென்று பார்க்கலாம்









