Reviews

லீடர் ; விமர்சனம்

லெஜெண்ட் சரவணா நடிப்பில் வெளியாகி இருக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படம் லீடர்,

தூத்துக்குடியில் கார் மெக்கானிக் வேலை பார்த்துக் கொண்டு தனது மகளுடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர் லெஜன்ட் சரவணா. அதே சமயம் தூத்துக்குடி துறைமுகத்தில் கண்டெய்னர்களை வைத்து நாச வேலை செய்ய தயார்படுத்திக் கொண்டிருக்கும் மிகப்பெரிய வில்லனின் அடியாள் காளகேயா பிரபாகர். துறைமுகத்திற்கு வரும் கார்களை லெஜன்ட் சரவணா தனது மெக்கானிக் ஷாப்பில் பழுது பார்த்து கொண்டு போய் விடுகிறார்.

பிரபாகரின் நடவடிக்கைகளை மோப்பம் பிடிக்க லெஜன்ட் சரவணாவையும் அவரது மகளையும் பயன்படுத்துகிறார் போலீஸ் அதிகாரியான ஆன்ட்ரியா. அதில் அவருக்கே எதிர்பாராமல் சிக்கல் ஏற்படுகிறது. அப்போது புதிய உயர் அதிகாரியாக வரும் ஷாம் இது குறித்த பின்னணியை விசாரிக்கிறார். அப்போது துறைமுகம் குறித்தும் லெஜன்ட் சரவணா குறித்தும் பல அதிரடி தகவல்கள் தெரிய வருகின்றன.

தூத்துக்குடி துறைமுகத்தில் என்ன நடக்கிறது ? லெஜெண்ட் சரவணா இங்கே தனது மகளுடன் என்ன செய்கிறார் ? அவரது உண்மையான பின்னணி என்ன என்பதற்கு மீதிக்கதை விடை சொல்கிறது.

முதல் படத்தில் நடித்தபோது நடிப்பிலும் கதை தேர்விலும் சில விஷயங்களை கோட்டை விட்டிருந்த லெஜென்ட் சரவணா இந்த லீடர் படத்தில் படம் ஆரம்பம் முதல் இறுதிவரை கன கச்சிதமாக இருக்கும் விதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அதற்கு ஏற்ற பொருத்தமான கதையை இயக்குனர் துரை செந்தில்குமார் அவருக்காக வடிவமைத்துள்ளார். ஆரம்பம் முதல் இறுதி வரை படம் போரடிக்காமல் செல்வதற்காக இவர்கள் இருவருக்குமே பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளலாம்.

ஜிப்ரான் பாடல்களை குறைத்துக்கொண்டு பின்னணி இசையில் அதிரவிட்டிருக்கிறார். படத்தின் விறுவிறுப்புக்கு அவரது பின்னணி இசை மிகப் பெரிய பலம். அவர் மட்டுமல்ல படம் முழுக்க பெரும் பகுதி கண்டெய்னர் களத்திலும் பாதிக்கதை வெளிநாட்டில் நடப்பதையும் வெகு நேர்த்தியாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் எஸ். குறிப்பாக கிளைமாக்ஸில் வந்தே பாரத் டிரெயினில் சண்டைக் காட்சியை படமாக்கிய விதம் மிரட்டல்.

ஒரு பக்கம் அதிரடியாக செயல்பட துடிக்கும் போலீஸ் அதிகாரியாக ஆண்ட்ரியா, நேர்மையாக செயல்பட்டு உண்மையை கண்டுபிடிக்க முயற்சி செய்யும் போலீஸ் அதிகாரியாக ஷாம், மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் ஓய்வு பெற்ற அதிகாரியாக லால், இவர்கள் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் வில்லனாக சந்தோஷ் பிரதாப்.. இவரது கதாபாத்திரத்தில் ஒரு மிகப்பெரிய சஸ்பென்ஸ் உண்டு. அது படம் பார்க்கும்போது தெரிந்து கொண்டால் தான் சுவாரஸ்யம் இருக்கும்.

அந்த வகையில் தனது இரண்டாவது படத்தை ரசிகர்கள் விரும்பும் ஒரு அக்மார்க் பொழுது போக்கு படமாக துரை செந்தில்குமார் உடன் இணைந்து கொடுத்திருக்கிறார் லெஜன்ட் சரவணா.