Reviews

கெணத்த காணோம் ; விமர்சனம்


தண்ணீர் வசதியே இல்லாத கிராமத்தில் ஒரு சிறிய வீடு, தாத்தா, அக்கா என்கிற சிறிய குடும்பம், வீட்டின் அருகில் ஒரு கோயில் பூசாரி ஆக இருப்பவர் யோகி பாபு. தண்ணீர் இல்லாத ஊர் என்பதால் அவர் காதலிக்கும் பெண்ணையே கொடுக்க யோசிக்கிறார் பெண்ணின் தந்தை. இந்த சமயத்தில் தான் ஊரார் எல்லாம் சேர்ந்து யோகி பாபு வீட்டிற்கு அருகிலேயே நிலத்தடி நீர் இருப்பதை கண்டுபிடித்து அங்கே கிணறு வெட்டுகிறார்கள்.
ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல கொஞ்சம் ஆழம் தோன்றியதுமே அங்கே பழங்காலத்து டைனோசர் ஒன்றின் எலும்புக்கூடு கிடைக்கிறது. இதனை தொடர்ந்து தொல்லியல் ஆராய்ச்சி துறை அந்த ஊரை தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்கிறது.
இதன்பிறகு அந்த ஊருக்கு அவர்கள் கனவான தண்ணீர் வசதி கிடைத்ததா அல்லது தொல்லியல் ஆராய்ச்சி காரணமாக அவர்களை எல்லாம் ஊரை விட்டு காலி செய்ய நினைக்கும் அரசின் முயற்சி பலித்ததா ? யோகி பாபு திருமணம் என்ன ஆனது என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு மீதிப்படம் விடை சொல்கிறது.

யோகி பாபு எப்போதுமே காமெடியனாக இருந்தால் ஒன்லைன் பஞ்ச்சாக அடித்துக் கொண்டே இருப்பார். ஆனால் இதில் கதாநாயகன் என்பதால் மற்றவர்களை சிரிக்க வைத்து விட்டு தான் யதார்த்த நடிப்புக்குள் புகுந்து கொண்டுள்ளார். அதனால் அவரிடம் காமெடியை எதிர்பார்த்து சென்றால் கொஞ்சம் ஏமாற்றமே மிஞ்சுகிறது. காரணம் கதை அப்படி.

அவருக்கு ஏற்ற ஜோடியாக லவ்லின். அந்த கிராமத்து மண்ணுக்கேற்ற பெண்ணாக இந்த படத்தில் தன்னை பிரதிபலித்திருக்கிறார். தொல்லியல் ஆராய்ச்சி துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரேக்செல் ரெபாகாவின் மிடுக்கும் துடுக்கும் அவரது நடிப்பை ரசிக்க வைக்கின்றன. அவரது உதவியாளராக வரும் ராமகிருஷ்ணன் கிராமத்திற்கு நல்லது செய்ய போராடும் அவரது குணம் பாராட்ட வைக்கிறது. ஹலோ கந்தசாமி உள்ளிட்ட ஊர்க்காரர்களின் குசும்புகளும் பேச்சுக்களும் படத்தை தொய்வின்றி நகர்த்த உதவி இருக்கின்றன.

நிவாஸ் கே பிரசன்னாவின் இசை படத்தின் தேவையான இடங்களில் பாடல்களை பயன்படுத்தி பின்னணி இசையால் கதையின் கணத்தை நமக்கு கடத்தி இருக்கிறது..

சின்ன கிராமம் என்றாலும் அந்த கிராமம் சந்திக்கும் பிரச்சினைகளை ஒளிப்பதிவாளர் தியாகராஜன் நம் கண் முன்னே நிறுத்தி இருக்கிறார்.

ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆனால் துரதிஷ்டம் என்னவென்றால் இந்த படம் வெளிவரும் போது அவர் உயிருடன் இல்லை. அதே சமயம் ஒரு நல்ல கதையை ஒரு நல்ல படத்தை கொடுத்த திருப்தியுடன் அவர் மறைந்திருக்கிறார் என்று தாராளமாக சொல்லலாம்.