
அபர்ணதிக்கு சிறுவயதிலிருந்தே தான் எப்படியாவது மற்றவர்கள் மத்தியில் புகழப்பட வேண்டும், பேசப்பட்டு கொண்டே இருக்க வேண்டும், கவனம் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர். அப்படிப்பட்டவர் தந்தை காளி வெங்கட் இழந்த பிறகு ஐஏஎஸ் படித்து கலெக்டராகவும் ஆகிறார். தனது பதவியை வைத்து பல நல்ல காரியங்களை செய்யும் அவர் சில நேரங்களில் தனது பெயர் பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்பதற்காக சில திரை மறைவு காரியங்களையும் செய்கிறார்.
அதனால் ஒரு கட்டத்தில் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அரசியலில் நுழைய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியிடம் சிக்கிக்கொண்டு அவர்களை எப்படி டீல் செய்கிறார், அதனால் என்னென்ன சவால்களையும் சங்கடங்களையும் சந்திக்கிறார், அதையெல்லாம் அவர் சமாளித்தார் என்பது மீதிக்கதை,
ஒரு புகழ் விரும்பி கலெக்டர் எப்படி இருப்பார் என்பதற்கு உதாரணமாக அவ்வளவு கெத்தான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அபர்ணதி. அவர் தப்பு செய்பவர்களை தட்டிக் கேட்பதாகட்டும், அதே சமயம் தன் பெயர் வெளியில் பேசப்பட வேண்டும் என்பதற்காக சில திரைமறைவு விஷயங்களை செய்யும் போதும் இவர் நல்லவரா கெட்டவரா என்கிற எண்ணத்தை கடைசி வரை நம் மனதில் நிலைத்து நிற்க வைத்து விடுகிறார். அரசியல் ஆலோசகராக மாறிய பிறகு இவர் எடுக்கும் நடவடிக்கைகளும் அதில் கிடைக்கும் பலன்களும் பதிலடிகளும் என படம் முழுவதும் இவர் ஓடிக்கொண்டே இருக்கிறார். நிச்சயமாக இவருக்கு இது ஒரு பெயர் சொல்லும் படம் தான்.
படத்தில் மத்திய அமைச்சராக வரும் ஜான் விஜய் மற்ற படங்களை ஒப்பிடும்போது இதில் அழகான பாடி லாங்குவேஜ், நிறுத்தி நிதானமாக பேசும் வசனங்கள், அரசியல் சாணக்கியத்தனம் என ஒரு டெல்லி அரசியல் பிரதிநிதியை அழகாக பிரதிபலித்திருக்கிறார். அவரது நடிப்பை ரசிக்கலாம்.
உள்ளூர் அரசியல்வாதிகளாக இளவரசு, லிவிங்ஸ்டன், ஒய்.ஜி மகேந்திரன், சரவண சுப்பையா, சுரேஷ் சக்கரவர்த்தி என பலரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்து கதையை நகர்த்தி செல்ல உதவி இருக்கிறார்கள்.
அதிகார வர்க்கம், அரசியல் இரண்டையும் ஒன்றாக கலந்து அதற்குள் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் பயணம் எப்படி இருக்கிறது என்பதை வைத்து விறுவிறுப்பாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராகுல் அசோக். படம் ஆகா ஓகோ என்று சொல்ல முடியாவிட்டாலும் போரடிக்காத ஒரு நல்ல படம் என்று தாராளமாக சொல்லலாம்.









