
கண்டிப்பான காவல்துறை அதிகாரியான நானி ஜம்மு காஷ்மீரில் இருந்து ஆந்திராவுக்கு மாற்றப்படுகிறார்.அவர் பொறுப்பேற்ற நேரத்தில் பல கொடூர கொலைகள் குறித்த வழக்கு வருகிறது. அதுகுறித்து தனது விசாரணையின் மூலம், ஒரு ரகசிய மற்றும் தீவிரமாக செயல்படும் கும்பலை அவர் கண்டறியும் சமயத்தில் சில காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார் நானி, நானி எதற்காக சிறையில் அடைக்கப்படுகிறார. நானி கண்டுபிடித்தடஹு என்ன ? இந்த சிக்கலில் இருந்து அவர் எப்படி வெளியே வருகிறார் என்பது மீதிக்கதை.
நானி இந்த படத்தின் மிகப்பெரிய ஹைலைட். தனது ரசிகர்களுக்கு தேவையான மாஸ் காட்சிகளையும் படத்தில் வைக்கத் தவறவில்லை. அவரது புதிய ஆக்ஷன் அவதாரம் ரசிகர்களை அதிர வைத்துவிடும். அவரது தோற்றம், வசன டெலிவரி எல்லாமே மிகச்சிறப்பாக இருக்கின்றன. மென்மையான ரோலிலும், நேச்சுரலாக தன்னுடைய நடிப்பில் கொடுத்தவருக்கு இந்தப் படம் பெரிய மாஸ் ஹீரோ லெவலுக்கு முன்னேறி எடுத்து சென்று விட்டது.
ஸ்ரீநிதிஷெட்டி நாயகியாக நடித்திருக்கிறார்.காதல், பாடல்கள்,நடனம் ஆகியனவற்றோடு நிறுத்திவிடாமல் கதையோடு இணைந்து பயணிக்கும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.அதற்கேற்ப நடித்திருக்கிறார்.
பெண் போலீஸ் அதிகாரியாக வரும் கோமளி பிரசாத் கவனிக்க வைக்கிறார். நானி தான் கொலையாளி என்று கண்டுபிடிக்கும் காட்சிகள் பரபரப்பு.
பிரதீக் பப்பர் தனது முதல் தெலுங்கு படத்தில் மனநிலை குன்றிய வில்லனாக மிளிர்கிறார். சமுத்திரக்கனி கவனம் ஈர்க்கும் கதாபாத்திரம் ஏற்று அதை நிறைவாகச் செய்திருக்கிறார். சூர்யா ஸ்ரீநிவாஸ், பாலா, ராவ் ரமேஷ், சமுத்திரகனி, மகந்தி ஸ்ரீநாத், ரவீந்திர விஜய், அமித் சர்மா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக பயணித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ் படத்திற்கு மிகப்பெரிய பலம். சண்டைக்காட்சிகளும், வன்முறை காட்சிகளும் படத்தில் அதிகமாக இருந்தாலும், அதை உறுத்தாத வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயரின் பின்னணி இசை திரைக்கதையின் வேகத்தையும், விறுவிறுப்பையும் பல மடங்கு அதிகரிக்கச் செய்வதோடு, நானி என்ற கதாபாத்திரத்தின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்துவதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. .
2.30 மணி நேரம் படம் ஓடும் நேரம் தெரியாத அளவிற்கு மிகவும் வேகமான திரைக்கதை அமைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சைலேஷ் கோலானு. படம் முழுவதும் ஆக்ஷன் மற்றும் வன்முறை காட்சிகள் நிரம்பியிருந்தாலும், அவற்றை திரைக்கதையோடு ஒன்றி பயணிக்க வைத்திருக்கிறார். ஆக்ஷன் ரசிகர்களுக்கு இது ஒரு பரபரப்பான அனுபவமாக இருக்கும்.. .
..









