
பாழடைந்த தொழிற்சாலை ஒன்றில் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக கொடுத்த கோடிக்கணக்கான பணத்தை பதுக்கி வைத்திருக்கும் காளி வெங்கட், அந்த தகவலை நாயகன் தமனின் நண்பர்களிடம் தெரிவித்துவிட்டு, பணத்தை எடுத்துக் கொண்டு உயிருக்கு போராடும் தனது பெண் குழந்தையை காப்பாற்றுமாறு கூறிவிட்டு இறந்து போகிறார்.
நாயகன் தமனின் மனைவி மால்வி மல்ஹோத்ரா கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வருவதோடு, சில பயங்கரமான உருவங்களும் கனவில் வந்து போகிறது , இந்த சமயத்தில் தான் பணத்தை எடுப்பதற்காக தமன், மால்வி மல்ஹோத்ரா மற்றும் அவர்களது நண்பர்கள் அந்த இடத்திற்கு செல்ல, மால்வி மல்ஹோத்ரா தன் கனவில் பார்க்கும் பயங்கரமான உருவங்களை அந்த இடத்தில் பார்க்கிறார்
பணம் வைக்கப்பட்டிருக்கும் பங்களாவில் பேய் நடமாட்டம் இருப்பது தெரிகிறது. அத்துடன் அடுத்தடுத்து ஒவ்வொருவராக கொலையாக… மறைத்து வைக்கப்பட்ட பணத்தைக் கைப்பற்ற முடிந்ததா..? அது குழந்தையின் மருத்துவ செலவுக்கு உதவியதா? என்பது மீதிக்கதை. .
கதையின் நாயகனாக நடித்திருக்கும் தமன், அவரது மனைவியாக நடித்திருக்கும் மால்வி மல்ஹோத்ரா இருவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
காளி வெங்கட் தனது பணியை நிறைவாகச் செய்துள்ளார். வேல.ராமமூர்த்தி வழக்கம் போல டெரர் காட்ட முயற்சித்துள்ளார். முனிஷ்காந்த் காமெடி துளியும் எடுபடவில்லை.
தலைவாசல் விஜய், சந்தான பாரதி, நக்கலைட்ஸ் நிவேதிதா, யாசர் என ஒரு சில காட்சிகளில் முகம் காட்டியிருப்பவர்களும் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
கேஜியின் ஒளிப்பதிவு இரவைக் கூட பகல் வெளிச்சத்தில் பளிச்சென்று காட்டுகிறது. இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம், சாம் சி எஸ் க்கு போட்டியாக பின்னணி இசையில் அடித்து நொறுக்குகிறார்.
மனிதர்கள் உருவத்தில் கடவுளை பார்ப்பது போல், சாத்தானையும், அதன் செயலையும், மனிதர்கள் உருவத்திலும், அவர்களது செயலிலும் வெளிக்காட்டியிருக்கிறார். இயக்குநர் பி.மணிவர்மன்பதட்டமும், திகிலும், மன அழுத்தமும் கலந்து சொல்லப்பட்ட ஒரு புதிய முயற்சியாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் அதிர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் திருப்பங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளன.
.









