
கொடைக்கானல் அருகில் உள்ள மலைப்பகுதியில் போக்குவரத்து வசதி இல்லாத வெள்ளக்கெவி என்கிற கிராமத்தில் சில குடும்பங்கள் வசிக்கின்றன. எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் மருத்துவ சிகிச்சைக்கும் கல்விக்காகவும் பல மைல்கள் நடந்து செல்லும் அவலத்தை சந்திக்கின்றனர். அங்கே வசிப்பவர்கள் தான் ஆதவன் ஷீலா தம்பதி. ஷீலா கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு வளைகாப்பு நடத்த நகரத்திற்கு சென்று பொருட்கள் வாங்கிகொண்டு திரும்பி வருகிறார் ஆதவன்.
.
ஆனால் அதற்கு முன்னதாக அங்கே ஓட்டுக் கேட்டு வந்த எம்எல்ஏவையும் இன்ஸ்பெக்டரையும் பேச்சுவாக்கில் ஆதவன் அவமானப்படுத்திவிட அந்த கொந்தளிப்பில் இருக்கும் இன்ஸ்பெக்டர் நகரத்திலிருந்து திரும்பி வரும் ஆதவனை கொலை செய்ய திட்டமிட்டு காட்டுக்குள் தனது பட்டாளத்துடன் அவரை விரட்டுகிறார்..
அதே நேரத்தில் திடீரென ஷீலாவுக்கு பிரசவ வலி ஏற்படுகிறது. நகரத்தில் இருக்கும் மருத்துவருக்கு போன் செய்தால் அவர் வர மறுத்து விடுகிறார். அதனால் வேறு வழியின்றி அவரை மூங்கில் கம்புகளில் துணியை கட்டி டோலி மூலம் கிராமத்தினர் சிகிச்சைக்காக நகரத்திற்கு எடுத்துச் செல்கின்றனர். ஷீலாவின் பிரசவம் என்ன ஆனது ? போலீஸ் பிடியில் ஆதவன் சிக்கினாரா > என இந்த இரண்டுக்கும் சேர்த்து விடை சொல்கிறது கெவி.
கதையின் நாயகனாக மலையன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதவன், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, சிறப்பாகவும் நடித்திருக்கிறார். வனத்துறை காவலர்களிடம் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடும் காட்சியில் கலங்கடித்து விடுகிறார்.
மலையன் மனைவி நிறைமாத கர்ப்;பிணி மந்தாரையாக ஷீலா பிரசவ வலி ஏற்படும் போது துடிக்கும் துடிப்பு, படும் வேதனை என்று தத்ரூபமான நடிப்பில் பதற வைத்து விடுகிறார்.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வாக வரும் காமன்மேன் கணேஷ், பொறுப்பற்ற சீஃப் டாக்டராக வரும் காயத்ரி, பொறுப்புள்ள ஜுனியர் டாக்டராக வரும் ஜாக்குலின் லிடியா, கம்பவுண்டராக வரும் ஜெகத் ராமன், மந்தாரையின் தம்பி கடுக்காவாக வரும் விவேக் மோகன், போஸ்ட்மேனாக வரும் உமர் ஃபாருக், செவிலியர் ஜீவாவாக வரும் தர்மதுரை ஜீவா உள்ளிட்டோர் நிறைவாக நடித்து தங்களது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்..
இசையமைப்பாளர் பாலசுப்ரமணியன்.ஜி-யின் பின்னணி இசை படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே கதைக்களத்தில் இருக்கும் ஆபத்தை பார்வையாளர்கள் உணரச் செய்து, இறுதி வரை பதற்றத்துடன் பயணிக்க வைக்கிறது. ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு மலை,காட்டு, இரவு நேரம் என அனைத்தையும் அழகாக காட்டியிருக்கிறார்.
அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் மலைகிராம மக்களின் வாழ்வியலை, உண்மைக் கதையை மையமாகக் கொண்டு, எவ்வித சமரசமும் இல்லாமல், பொழுதுபோக்கு அம்சங்களைத் திணிக்காமல், கசப்பான உண்மைகளை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் தமிழ் தயாளன்.









