திரைப்படங்களில் எத்தனையோ விலங்குகளைப் பார்த்திருக்கிறோம் . புராணங்களில் நம்மால் அறியப்பட்ட யாளி என்கிற விலங்கை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. நாகமலை என்ற பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகாலத்துக்கு முன்னர் ராஜாக்கள் வாழ்ந்திருந்த இடத்தில் புதைந்துள்ள ஏராளமான பொக்கிஷங்கள் புதையல் இருப்பதாக சொல்லப்பட்டது உண்மை செய்தி,
அதனை டைனோசர் காலங்களில் வாழ்ந்த யாளி என்ற விலங்கு பாதுகாத்து வருவதாக சொல்லப்பட்டுள்ளதுஇனிகோ பிரபாகர் தலைமையில் ஒரு குழு, வேதிகா தலைமையில் இன்னொரு குழு. இவர்களைத் தாண்டி சாந்தினி ஒரு பக்கம். இவர்கள் எல்லோரும் அந்த பொக்கிசத்துக்குக் குறி வைக்கிறார்கள், அதை கைப்பற்ற முயற்சிக்கும் இவர்களின் நிலை என்ன ஆனது?, அதனை பாதுகாக்கும் யாளி உண்மையா?, நாகமலையை சுற்றியிருக்கும் மாய உலகத்தின் பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமான கற்பனை மூலம் பதில் அளிகிறது மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் இனிகோ பிரபாகர், அட்வெஞ்சர் காட்சிகளில் அசத்தியிருப்பதோடு, ஆப்ஜெக்ட்டே இல்லாமல் அனிமேஷன் காட்சிகளுக்கு ஏற்ப கச்சிதமாக நடித்திருப்பதும், அதற்காக அதிகம் மெனக்கெட்டிருப்பதும் திரையில் தெரிகிறது.
தொல்பொருள் ஆய்வாளராக வேதிகா தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார், மேலும் அவரிடமிருந்து எதிர்பார்த்ததை வழங்கியுள்ளார். வில்லத்தனம் கலந்த வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார் சாந்தினி. அவருடைய தோற்றமும் நடிப்பும் பயமுறுத்தும் வகையில் அமைந்திருக்கிறது..
இந்தக் கதையில் அபாயங்கள் நிறைந்த வனப்பகுதியில் அசால்டாக வலம் வரும் யோகி பாபு மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் கூட்டணி செய்யும் காமெடிகள் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது.
அச்சு ராஜாமணியின் இசையில்,போலாம் போலாம் ரைட் மற்றும் சிவன் பாடல் முன்னணி வகிக்கின்றன. மற்ற பாடல்களும் கேட்கலாம். பின்னணி இசை படத்தின் விறுவிறுப்புக்குப் பயன்பட்டிருக்கிறது. ஒளிப்பதிவாளர்கள் கோபி துரைசாமி மற்றும் வினோத்.ஜே.பி ,அடர்ந்த வனப்பகுதியின் ஆபத்தையும் அமானுஷ்யத்தையும் தனது காட்சிகளின் மூலம் ரசிகர்களை உணர வைக்கிறார்கள்.
படத்தின் ஆரம்பத்திலேயே திடுக்கிடும் காட்சிகள் மூலம் சீட் நுணியில் உட்கார வைக்கும் இயக்குநர் அடுத்தடுத்த காட்சிகளில் யானை, புலி, குரங்குகளுடனான சண்டைக்காட்சி, பாம்பு என பலவித விலங்குகளை வி.எப்.எக்ஸ் மூலம் மிரட்டலாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, இறுதியில் யாளி விலங்கை திரையில் தோன்ற வைத்து வியக்க வைத்திருக்கிறார்கள்.
படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பலவிதமான விலங்குகள் மற்றும் அவற்றிடம் இருந்து தப்பிக்கும் காட்சிகளை அட்வெஞ்சராக காட்டி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறார் எழுதி இயக்கியிருக்கும் பிரபதீஸ் சாம்ஸ்..









