
விஜித் – கண்மணி தம்பதியர்க்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தையை பார்த்துக்கொள்ள தேவயானியை வேலைக்குச் சேர்க்கிறார்கள். தேவயானியின் அன்பு மற்றும் அக்கறையால் குழந்தையும் அவரிடம் பாசத்தோடு இருக்கிறாள். அமெரிக்காவில் குடியேற முயலும் விஜித் – கண்மணி தம்பதிக்கு அதற்கான அனுமதி கிடைத்துவிடுகிறது. இதனால் குழந்தையைப் பிரியவேண்டிய கட்டாயம் தேவயானிக்கு. அவர் தவித்துப் போகிறார். இந்நிலையில் குழந்தை காணாமல் போகிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் மீதிப்படம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேவயானி, தற்போதைய இளம் தலைமுறை தம்பதியினருக்கு பாடம் எடுக்கும் வகையில் நடித்திருக்கிறார். குழந்தை மீது அவர் காட்டும் அன்பும், அக்கறையும் பணம் சம்பாதிப்பது, வசதியாக வாழ்வது என்றே பயணிக்கும் பெற்றோர்களுகு சவுக்கடியாக உள்ளது. இலங்கைவாழ் தமிழ் பெண்மணியாக தன்னுடைய நடை, உடை, பாவனை, உச்சரிப்பு என்று அனுபவ நடிப்பை மீண்டும் கொடுத்திருக்கிறார் தேவயானி.
ஐ.டி. காதல் தம்பதிகளாக விஜித் – கண்மணி இருவரும் தங்களது வேலை தான் முக்கியம், வசதிக்கு குறைவில்லை என்றாலும் குழந்தையிடம் நேரத்தை செல்லவிடாமல் அமெரிக்க செல்ல வேண்டும் என்ற லட்சியத்தோடு ஒடுவதும், பெற்றோர்களை அலட்சியப்படுத்தும், இழிவுபடுத்தும் மனோபாவம் என்று பணத்தை குறிக்கோளாக வாழும் இக்கால நவீன தம்பதிகளின் எண்ணங்களையும், மனோபாவங்களையும் நன்றாக பிரதிபலித்துள்ளனர்.
இவர்களது குழந்தையாக நடித்திருக்கும் சிறுமி அஹானா அஸ்னி மற்றும் நிஹாரிகா இவர்களது நடிப்பு மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ராஜ்கபூர், இளவரசு, வடிவுக்கரசி, நீலிமா ராணி ஆகியோரின்அனுபவம் மிக்க நடிப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது.
குருதேவின் ஒளிப்பதிவில் சில காட்சிகள் அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளன. நரேன் பாலகுமாரின் இசை மற்றும் பின்னணி இசை, சோக காட்சிகளில் உணர்வுகளை சிறப்பாக தந்துள்ளது.
முதியோர் இல்லங்கள் அதிகரிக்கும் இத்தகைய சூழலில், குழந்தை வளர்ப்பிலும் கவனம் செலுத்தாத இந்த தலைமுறையினருக்கு பாடம் சொல்லும்படி படம் பயணித்தாலும், அவ்வபோது திரைக்கதையில் சில திருப்பங்களை வைத்து படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குநர் சிவா ஆறுமுகம். மேலும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் நிழற்குடையாக இருந்து வளர்த்து ஆளாக்குவது போல், பிள்ளைகளும் அதே பாணியில் பெற்றோர்களை புறக்கணிக்காமல் இறுதி வரை நிழற்குடையாக இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.









