கலகத் தலைவன் ; திரைவிமர்சனம்

ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் கலகத் தலைவன்.

ட்ருபேடார் எனும் கார்ப்ரேட் நிறுவனம் அளவான பெட்ரோலில் மைலேஜ் அதிகமாக தரும் வாகனத்தை கண்டுபிடித்து அதனை மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய தயாராகிறது. ஆனால், இந்த வாகனத்தில் இருந்து வெளியேறும் புகை அதிகமான காற்று மாசுவை உண்டாக்கும் என்று அதன்பின் தெரியவருகிறது.

இந்த விஷயம் வெளியே கசியக்கூடாது என்று ட்ருபேடார் நிறுவனத்தின் உரிமையாளர் இந்த விஷயத்தை தெரிந்தவர்களிடம் கூறுகிறார். ஆனால், எப்படியோ இந்த விஷயம் ட்ருபேடாரின் எதிரி நிறுவனத்திடம் கசிந்து விடுகிறது. இதனால், ட்ருபேடார் அறிமுகம் செய்த இந்த வாகனத்தின் மேல் பல விமர்சனங்களும், ட்ருபேடார் நிறுவனத்தின் ஷேரும் பங்குச்சந்தையில் குறைய துவங்குகிறது.

ஏற்கனவே நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ட்ருபேடார் நிறுவனத்திற்கு மேலும் இந்த அடி விழுகிறது. தன்னுடைய போட்டி நிறுவனத்திற்கு இந்த விஷயத்தை கசிய வைத்தது யார் என்று கண்டுபிடிக்க ட்ருபேடார் நிறுவனத்தின் உரிமையாளர் மூலம் நியமனம் செய்யப்படுகிறார் ஆரவ்.

அடிமட்டத்தில் இருந்து இதை கொடூரமான முறையில் விசாரித்து ஒவ்வொருவரிடமும் இருந்து பல உண்மைகளை வாங்கி வரும் ஆரவ், இறுதியில் இந்த அனைத்து கலகத்திற்கும் காரணம் யார், இந்த ரகசியங்களை வைத்து அந்த மர்ம நபர் என்ன செய்கிறார்? ஏன் செய்கிறார்? இதற்கும் கதாநாயகன் உதயநிதிக்கும் என்ன சம்மந்தம்? என்பதே படத்தின் மீதி கதை..

சுவாரஸ்யமான திரைக்கதையுடன் திருப்பங்களுடன் கதையைக் கொண்டு சென்ற விதத்தில் படம் கவனம் பெறுகிறது.

கதாநாயகனாக உதயநிதிக்கு இந்தப் படம் செம மைலேஜ். அதிகம் பேசாமல் தன் அடையாளங்களை மறைத்து வாழும் அந்த திருமாறன் பாத்திரத்தில் கோபம், அழுகை, காதல், ஆக்‌ஷன் எனப் பல பரிமாணங்களில் மிளிர்கிறார். அவருக்குத் தகுந்தாற்போன்ற மிக இயல்பான ஆக்‌ஷன் காட்சிகளைக் கதையில் வடிவமைத்திருப்பது அந்தப் பாத்திரத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.

கதாநாயகியாக வரும் நிதி அகர்வால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

படம் நெடுகிலும் ஹீரோவைவிட பவர்ஃபுல் வில்லனாக ‘பிக் பாஸ் புகழ்’ ஆரவ், மிரட்டி எடுத்திருக்கிறார். உதயநிதியைத் தேடித்தேடி நெருங்கும் காட்சிகள் சீட் நுனிக்கு நம்மை வரவழைக்கின்றன.

மிக முக்கியமான, ஆனால் ‘வழக்கமான’ ரோலில் கலையரசன் நன்கு நடித்திருக்கிறார். இவருக்கு என்ன நிகழும் என்பதை முன்கூட்டியே நம்மால் உணர முடிவது மட்டும் சின்ன சறுக்கல்.

தில்ராஜின் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.

கார்ப்பரேட் அத்துமீறலையும் அதற்குத் துணை நிற்கும் அரசாங்கத்தையும், அதனால் பாதிக்கப்படும் ஓர் அப்பாவிக் குடும்பத்தையும் ஒரு புள்ளியில் நேர்த்தியாக இணைத்துக் கதை சொன்னதற்கே மகிழ்திருமேனிக்கு அழுத்தமாகக் கைகுலுக்கலாம்.

கலகத் தலைவன் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் உள்ளது.