கண்ணை நம்பாதே ; விமர்சனம்

அருள்நிதி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற “இரவுக்கு ஆயிரம் கண்கள்” திரைப்படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் கண்ணை நம்பாதே

குடியேருவதற்காக உதயநிதி ஸ்டாலின் தனது நண்பருடன் வீடு தேடி வருகிறார், இந்த சமயத்தில் வாடகைக்கு வீடு கிடைக்கிறது. ஆனால் இந்த வீட்டில் ஏற்கனவே பிரசன்னா தங்கியிருக்கிறார். அவருடன் சேர்ந்து அதே வீட்டில் தங்க முடிவெடுத்து குடியேறுகிறார் உதயநிதி. வீட்டிற்கு வந்த அதே நாள் இரவில் பிரசன்னா, உதயநிதியை சரக்கு அடிக்க வாருங்கள் என அழைக்கிறார். தனக்கு சரக்கு அடிக்கும் பழக்கம் இல்லை என உதயநிதி கூற சரக்கடிக்கும் பழக்கம் இருக்கும் உதயநிதி நண்பன் சதீஸ் இவர்களுடன் இணைகிறார்.

மூவரும் பாருக்கு சென்ற நேரத்தில், நடிகை பூமிகா தள்ளாடி கொண்டே தன்னுடை காரை கொண்டு வந்து ஓரு இடத்தில் மோதுகிறார். இதை பார்க்கும் உதயநிதி அவருக்கு என்ன ஆனது என பார்க்க காரின் அருகே செல்கிறார். அவர் நலமுடன் இருக்கிறார் ஆனால், அவரால் காரை ஒட்டி செல்ல முடியாது என்பதினால் உதயநிதியே பூமிகாவை அவருடைய வீட்டிற்கு காரை ஒட்டி செல்கிறார்.

தன்னை வீட்டில் இறக்கி விட்டதனால் தன்னுடைய காரை எடுத்து செல்லுங்கள் என பூமிகா கூறுகிறார். இதனால் பூமிகாவின் காரை எடுத்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு செல்கிறார் உதயநிதி.
அடுத்த நாள் காலையில் காரை பூமிகாவிடம் திருப்பி கொடுக்க செல்லும் பொழுது காரின் டிக்கியில் இறந்துப்போய் பிணமாக கிடக்கிறார் பூமிகா. இதனால் உதயநிதியும் அதிர்ச்சியடைக்கிறார்.

பூமிகா எப்படி இறந்தார்? ஒரே இரவில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை

ஒரு திரில்லர் படத்திற்கு தேவையான கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் உதயநிதி. கொலையை யார் செய்தது, இதன் பின்னணி என்ன என்று தேடும் உதயநிதியின் நடிப்பு படத்திற்கு பலம்.

கதையின் முக்கிய கதாப்பாத்திரமாக வரும் பூமிகா பிரமாதம். பிரசன்னா, ஸ்ரீகாந்த், ஆத்மிகா, வசுந்தரா, என அனைவரும் அவரவர் கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

திரில்லர் ரசிகர்களுக்கு பிடித்தமான நல்ல கதைக்களத்தை அமைத்து அசத்தியிருக்கிறார் இயக்குனர். பல இடங்களில் வரும் எதிர்பாராத திருப்பங்கள் படத்தின் திரைக்கதைக்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘கண்ணை நம்பாதே’ கண்டிப்பாக பார்க்கலாம்