Reviews

மாமன் ; விமர்சனம்


தனது அக்கா சுவாசிகா தான் உலகமே என்று தம்பி சூரி மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார். சுவாசிகாவிற்கு திருமணமாகி பத்து வருடங்களாகியும் குழந்தை இல்லை. ஒரு கட்டத்தில், சுவாசிகா கர்ப்பமாக, மாமனாக சூரிக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. குழந்தை பிறந்ததும் முதலில் சூரியே கையில் ஏந்துகிறார். அதிலிருந்து அந்த சிறுவனை சூரியே வளர்த்தும் வருகிறார்.

இந்த கட்டத்தில், குழந்தை பிறக்கும் மருத்துவமனையில் மருத்துவராக வரும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மியுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவருக்கும் காதல் மலர்ந்து விடுகிறது. அவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் சூரியின் இல்லற வாழ்வில், அக்கா மகனால் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் சூரி குடும்பத்தை விட்டு பிரிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா இல்லையா என்பது மீதிக்கதை.

படத்திற்கு பிளஸ் என்றால் கதாபாத்திர தேர்வு தான். சூரி கணக்கச்சிதமாக நடித்து இருக்கிறார்.. அன்புக்கும் பாசத்துக்கும் கட்டுப்பட்ட இளைஞர் வேடமேற்று அதற்குத் தக்க நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் இன்னும் முன்னேற வேண்டும்.

ஐஸ்வர்யா லெட்சுமி சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். மனைவிகளின் எதிர்பார்ப்பையும், ஏமாற்றத்தையும் தனது நடிப்பில் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார் சில இடங்களில் ஓவர் எமோஷ்னல் எட்டிப்பார்க்கிறது.

படத்தில் நடித்த அனைவரின் நடிப்பையும் மிஞ்சும் அளவிற்கு அவர்களையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போன்று, தனது கேரக்டரை உச்சிக்கு எடுத்துச் சென்று விட்டார் நடிகை சுவாசிகா.

வயதான உறவினர் தம்பதியராக ராஜ்கிரண் மற்றும் அவரது மனைவி விஜி சந்திரசேகர் இரண்டாம் பாதியில் முதிர்ந்த காதலை அழகாக பிரதிபலித்து க்ளைமேக்ஸ் காட்சியில் கண் கலங்க வைத்து விடுகின்றனர்.

சுவாசிகாவின் கணவராக நடித்திருக்கும் பாபா பாஸ்கருக்கு முக்கிய வேடம்.அதை உணர்ந்து நடித்திருக்கிறார் பாலசரவணன், ஜெயப்பிரகாஷ், கீதா கைலாசம், சாயா தேவி,நிகிலா சங்கர் ஆகியோரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வாகப் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசை அதிகம் சத்தம் இல்லாமல் அளவாக பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் கேமரா கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்தும் பணியை சிறப்பாக செய்திருக்கிறது.

வகைவகையான பாசத்தை சென்டிமெண்ட் கலந்து சூரி கதை எழுத அதை திறம்பட இயக்கியுள்ளார் பிரசாந்த் பாண்டியராஜ் உணர்ச்சி பூர்வமான கதை என்பதால் ரசிகர்கள் சிரிக்கும்படியான காட்சிகள் அமையவில்லை என்பது படத்திற்கு மைனஸ். ஒரு சில காட்சிகள் சலிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது..அதேசமயம் குடும்பம் சார்ந்து உருவாகியிருக்கும் இப்படத்தை குடும்பமாகவே சென்று பார்க்கலாம்.
.