
படங்களைச் சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்துவரும் சந்தானத்திற்கு, ஒரு நபரிடமிருந்து படம் பார்த்துப் புரமோஷன் செய்யச் சொல்லி ஒரு அழைப்பு வருகிறது. சந்தானம் தன் குடும்பத்தோடு அங்கு செல்கிறார். ஆனால் அந்தத் தியேட்டர் பேயாக இருக்கும் செல்வராகவனால் இயங்குகிறது. சந்தானம் மற்றும் அவரது குடும்பத்தாரும், அந்த திரையரங்கில் திரையிடப்படும் திரைப்படத்தின் கதாபாத்திரங்களாக சிக்கிக் கொள்கிறார்கள் சந்தானம் தன் குடும்பத்தினரை அந்த சிக்கலில் இருந்து காப்பாற்றினாரா என்பது தான் படத்தின் கதை.
உருவம், உடை, பேச்சு ஆகியவற்றில் மாற்றத்தை காட்டியிருக்கும் சந்தானம் நடிப்பில் எந்தவித மாற்றத்தையும் காட்டவில்லை. தனது வழக்கமான அணியினர் உடன், வழக்கமான காமெடிகளை கொண்டு படத்தை தாங்கி பிடித்திருக்கும் சந்தானம், உடன் நடித்தவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து பார்வையாளர்களை சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். ஆனால் ”வாட் ப்ரோ… என்ன ப்ரோ” என டையலாக்கை நிறுத்தி நிறுத்தி கூறி பொறுமையை அதிகமாகவே சோதித்து விட்டார் சந்தானம் .
நாயகியாக நடித்திருக்கும் கீதிகா திவாரிக்குக் காதல் காட்சிகள் மட்டுமின்றி பேயாக வந்து மிரட்டும் காட்சிகளும் வைக்கப்பட்டிருக்கின்றன.அழகான பேய்.
இதில் செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் இருவருமே ‘இயக்குநர்களாக’வே இதில் நடித்திருக்கின்றனர். அவர்கள் ஏற்கனவே இயக்கிய படங்களை ‘ஸ்பூஃப்’ செய்து வசனம் பேசியிருக்கின்றனர். அதையும் தாண்டி, அவர்கள் கதாபாத்திரங்களாகத் தெரிவது அழகு.
மொட்டை ராஜேந்திரன், மாறன் மற்றும் நிழல்கள் ரவியின் காமெடிகள் ஓரளவு ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. சந்தானத்தின் அம்மாவாக வரும் நடிகை கஸ்தூரியும், யாஷிகா ஆனந்துக்கு போட்டியாக அநியாயத்துக்கு கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஆப்ரோ இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப அமைந்திருந்தாலும், ஈர்க்கவில்லை. ஒளிப்பதிவாளர் தீபக் குமார்பதி காட்சிகளை வண்ணமயமாகவும், கமர்ஷியலாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இயக்குனர் பிரேம் ஆனந்த்..எடுத்துக் கொண்ட விசயத்தை சுவாரசியமாகச் சொல்ல மெனக்கெட்டிருக்கிறார். இருப்பினும் அல்வா மாதிரி கையில் கன்டென்ட் இருந்தும் சரியாக பயன்படுத்தவில்லை. இருந்தாலும் நல்ல சினிமாவ நல்லபடியா விமர்சனம் பண்ணுங்க’ என்ற திரையுலக வேண்டுகோள்களைக் கடந்து, வழக்கத்திற்கு மாறான ’ஐடியா’வை சுமக்கிற காரணத்தால் வித்தியாசப்படுகிறது இப்படம்.
.
.









