
நெடுஞ்சாலை ஓரத்தில் நுங்கு வியாபாரம் செய்யும் செல்வராகவன், குஷி ரவியை திருமணம் செய்கிறார். தனது மனைவியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கடன் வாங்கி அதே நெடுஞ்சாலை ஓரத்தில் ஒரு ஹோட்டல் ஒன்றை ஆரம்பிக்கிறார்.
நன்றாக போய்க் கொண்டிருந்த அவரது வாழ்வில் அவருக்கு வேண்டியவர்கள் சிலர் ஒவ்வொருவராக இறக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். இதன் பின்னணியில் இருக்கும் விஷயங்களை ஆராயும் செல்வராகவனுக்கு அதிர்ச்சிகரமான பல உண்மைகள் தெரிய வருகின்றன.
அதன் பிறகு அவர் எடுக்கும் பல அதிரடி நடவடிக்கைகள், அந்த ஊருக்கே அவரை தெய்வமாக பார்க்கும் அளவிற்கு உயர்த்துகிறது. அப்படி என்ன நடந்தது ? பாருங்கள்.. மனிதனும் தெய்வமாகலாம்
செல்வராகவன் மிகவும் சாதுவான மனிதராக மனைவி மீதான அன்பு, இழப்பின் வலி, அதன் பிறகு வரும் கோபம் ஆகியவற்றை இயல்பாக காட்டி தனது கதாபாத்திரத்தை நன்றாக வெளிப்படுத்த முயற்சித்துள்ளார். . ஆனால் சில இடங்களில் அவரது நடிப்பில் செயற்கைத்தனம் தெரிகிறது.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை குஷி ரவி, அழகில் மட்டும் இன்றி நடிப்பிலும் கவர்கிறார். கணவர் மீதான காதலை வெளிப்படுத்தும் காட்சிகளில் மிக இயல்பாக நடித்து பாராட்டு பெறுகிறார்.
கெளசல்யாவின் கதாபாத்திரமும் வலுவானது தான். அதையும் சரியாகவே கையாண்டிருக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ஒய் ஜி மகேந்திரன் சதீஷும் இயல்பான நடிப்பைக் கொடுத்துள்ளனர்.
இன்ப ராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் மைம் கோபி – தன் வழக்கமான வில்லத்தனமான நடிப்பை வழங்கி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார்.
ஏ கே பிரியன் இசை காட்சிகளோடு ஒத்துப் போயிருக்கிறது. ரவி வர்மா கேமரா எளிமையை படமாக்கியிருக்கிறது.
ஒரு உண்மைச் சம்பவத்தை வாழ்க்கை நடைமுறை எதார்த்தத்தோடு இயக்கி இருக்கிறார் டென்னிஸ் மஞ்சுநாத்.
இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத், அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழும் கிராம மக்களின் பிரச்சனைகள் மற்றும் கந்துவட்டி கொடுமைகளை உணர்ச்சிகரமாக பதிவு செய்துள்ளார். திரைக்கதை மெதுவாக பயணித்தாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்தும் வேலையை மிக சரியாக செய்திருப்பவர், ஒரு சாதாரண மனிதன் எப்படி மற்றவர்களுக்கு தெய்வமாகிறார் என சரியாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.









