
தமிழகத்தில் அதுவும் கேரளா அருகில் உள்ள தேனி மாவட்டத்தில் நடைபெறும் கதையாக இந்த வெப்சீரிஸ் உருவாகியுள்ளது. அங்கே உள்ள சிறைச்சாலையில் கண்காணிப்பாளராக பணியாற்றுகிறார் முனிஸ்காந்த். புதிய போலீஸ்காரராக அங்கே பணிக்கு சேர்கிறார் சுபாஷ் செல்வம். அங்கே சிறைச்சாலையில் இருக்கும் உண்டியலை வெளியிலிருந்து யாரோ ஒரு நபர் வந்து திருடி கொண்டு சென்றுவிட அந்த விஷயத்தை வெளியே தெரியாமல் அமுக்கி அதே சமயம் அதை திருடியது யார் என்று கண்டுபிடிக்கும் பணியில் முனிஸ் காந்தும் சுபாஷ் செல்வமும் இறங்குகிறார்கள்.
இதற்கிடையே உண்டியல் திருடு போன விஷயம் வெளியே தெரியவர அதை சரி செய்வதற்காக லோன் போட்டு பணம் வாங்குகிறார் சுபாஷ் செல்வம். இந்த பணமும் களவாதப்படுகிறது. இதனால் ஆவேசத்துடன் திருடனை தேடுகிறார்கள். ஒரு கட்டத்தில் இவன்தான் திருடன் என்று தெரிய வந்தாலும் அவனை ஆதாரத்துடன் மடக்க முடியாமல் தடுமாறுகிறார் சுபாஷ் செல்வம்.
கடைசியில் அந்த திருடன் பிடிபட்டானா ? வெளியிலிருந்து ஜெயிலுக்குள் வந்து உண்டியலை திருடும் அளவிற்கு அப்படி என்ன நோக்கம் அவனுக்கு ? என்பது எல்லாம் மீதிக்கதை.
காதல், பலவீனம், புத்திசாலித்தனம், ஆக்ஷன் என அர்ஜுன் கதாபாத்திரம் மூலம் முக்கிய தருணங்களை நடிப்பில் நன்றாகவே கொண்டு வந்திருக்கிறார் சுபாஷ் செல்வம்.
சிறை கண்காணிப்பாளர் கதாபாத்திரத்தில், முனீஷ்காந்த் தனது வழக்கமான நகைச்சுவை நடிப்பினை கொடுத்திருக்கிறார்.
பஸ்கண்டக்டராகவும், திருடனாகவும் நடித்திருக்கும் ராஜேஷ் மாதவன், அவரது காதலியாக நடித்திருக்கும் கௌதமி நாயர் இருவரும் பொருத்தமான நடிப்பினை கொடுத்துள்ளனர்.
சாவித்ரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ், உசர், விக்னேஷ்வர், அருண்குமார் உள்ளிட்ட தொடரில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக பயணித்து பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் நீரஜ் ரவி, சிறைச்சாலையின் இயல்பான சூழலை நம்பகமாக பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர்கள் சேவியர் மற்றும் விபின் பாஸ்கர், கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப பின்னணி இசையை வழங்கியுள்ளனர்.
ஒரு சிறைக் காவலருக்கும் உண்டியல் திருடனுக்கும் இடையிலான கண்ணாமூச்சி ஆட்டம் அத்துடன் இரண்டு காதல் கதைகளை விசாரணைக் களத்துக்குள்ளேயே பொருத்தமாக இணைத்து அசத்தியிருக்கிறார் இயக்குநர் அமீன். சிறைச்சாலைக்குள் எப்படி திருட்டு நடக்கும் என்கிற கேள்வியை வைத்துக்கொண்டு, தொடரின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்வதோடு, திருடன் எப்போது, எப்படி சிக்குவார் என்ற கேள்வியோடு, அடுத்தடுத்த அத்தியாயங்களை ஆர்வத்தோடு பார்க்க வைக்கிறது..









