
பத்திரிகையில் தொடர்கதைகளை எழுதி வரும் பிரபல எழுத்தாளர் வாசன் (நாகராஜன் கண்ணன்). அவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது, தன்னுடைய படைப்பு வெற்றி பெற்ற இருமாப்பால் தான் நினைத்து எழுதுவது தான் வேதவாக்கு என்று கடவுளுக்கு இணையானவனாக நினைத்து கர்வத்துடன் இருக்கிறார். ஆனால், அவரது யோசனைகள் தவறு என்று அவரது நண்பர்கள் எடுத்து கூறுகிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள அவரது எழுத்தாளர் ஈகோ மறுக்கிறது.
ஒரு நாள் இவர் கதையில் உருவாக்கிய நான்கு கதாபாத்திரங்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தங்களுக்கு நியாயம் வேண்டும் என்று கேட்கிறார்கள். எங்கே சென்றாலும் எழுத்தாளர் நாகராஜனை பின் தொடர்கிறார்கள். இது உண்மையா இல்லையா என்று குழம்பும் நாகராஜன், தன் கதை மூலமாகவே இந்த சிக்கலுக்கு தீர்வு காண முயற்சிக்கிறார். அதன் பிறகு நடப்பவைகளை சுவாரஸ்யமான திரைக்கதையோடு சொல்வது தான் ‘மாயக்கூத்து.
எழுத்தாளர் வாசன் வேடத்தில் நாகராஜன் கண்ணன் ஒரு எழுத்தாளனுக்கு உரிய மனநிலையில் கச்சிதமாக பொருந்தியுள்ளார். தான் உருவாக்கிய கதாபாத்திரங்கள் தனக்கு எதிராக வந்து மன உளைச்சல் கொடுக்கும்போது, அதை அவர் எதிர் கொள்ளும் விதத்தை சிறப்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்..
வாசனின் மனைவி இந்துவாக நடித்துள்ள S.K.காயத்ரி இன்னொரு இயல்பான நடிப்புக்கு சொந்தக்காரர். மருத்துவ கனவை சுமக்கும் ராஜியாக மிருதுளா, தனபாலாக நடித்திருக்கும் சாய் தீனா ஆகியோர் பொருத்தமான பாத்திரத் தேர்வு. செல்வியாக பிரபல தொகுப்பாளினி ஐஸ்வர்யா அந்த கேரக்டரில் தன்னை அழகாக பொருத்திக் கொள்கிறார்.
படத்தின் இன்னும் பிற கதாபாத்திரங்கள் அனைத்துமே சாதாரண இயல்பான ஒரு தோற்றத்தைக் கொடுத்து கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். அனுபவம் மிக்க நடிப்பினை வழங்கிய டெல்லி கணேஷ் , மு. ராமசாமி, காயத்ரி ஆகியோர்களும் பாராட்டுக்குரியவர்களே.
இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் அஞ்சனா ராஜகோபாலன், முதல் படத்திலேயே கவனம் ஈர்க்கும் இசையை கொடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சுந்தர் ராம் கிருஷ்ணன், தனது கேமராவை கதாபாத்திரங்களில் ஒன்றாக பயணிக்க வைத்திருக்கிறார். கதை மாந்தர்களின் இயல்பு தன்மையையும், எதார்த்தமான நடிப்பையும் எவ்வித கலப்படம் இன்றி காட்சிப்படுத்தி பாராட்டுப் பெறுகிறார்.
கதையில் உள்ள கதாபாத்திரங்கள் நேரில் தோன்றினால் என்ன நடக்கும், என்ற வித்தியாசமான மற்றும் புதிய முயற்சியை மிக நேர்த்தியாக கையாண்டிருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.ராகவேந்திரா, படத்துடன் பார்வையாளர்களையும் பயணிக்க வைத்திருக்கிறார், எழுத்தாளர்கள் நல்லதை விதைத்தால் வரும் சமுதாயம் பொறுப்புடன் நடந்த கொள்ள வழி வகுக்கும் என்ற கருத்தை வலியுறுத்தி, அதில் கொஞ்சம் கலகலப்பை கலந்து விறுவிறுப்பாகவும் தோய்வில்லாமல் இயக்கியுள்ளார் ஏ.ஆர். ராகவேந்திரா.
.
.









