Reviews

மைலாஞ்சி ; விமர்சனம்


சாரு (கிரிஷா குருப்) ஊட்டியின் லவ்டேல் பகுதியில் வசிக்கும் ஓர் அழகான, அப்பாவிப் பெண். சாருவின் அத்தை தனது பொறுப்பற்ற மகனுக்கு அவரைத் திருமணம் செய்து வைக்கத் திட்டமிடுகிறார். தனது முறைமாமனை திருமணம் செய்ய விருப்பமில்லாமல் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சென்னையை சேர்ந்த கதிர் என்ற வாலிபரை ஒருதலையாக காதலிக்கிறார் ஆனால் திடீரென ஊரை காலி செய்துவிட்டு சென்னைக்குச் சென்றுவிடுகிறார் கதிர்.

இந்த இக்கட்டான நேரத்தில், சென்னைலிருந்து ஊட்டிக்கு அபூர்வ பறவை ஒன்றை படம் பிடிப்பதற்காக வந்த சூர்யாவை (ஸ்ரீராம் கார்த்திக்) சாரு சந்திக்கிறார். சூர்யா சாருவின் மீது ஈர்க்கப்படுகிறார். ஆனால், சாரு தனது காதலன் கதிரைத் தேடிக் கண்டுபிடிக்க சூர்யாவின் உதவியை நாடுகிறார்.

சூர்யாவும் தனது காதலை மறைத்துக்கொண்டு கதிருக்கு ஈமெயில் மூலமாக தகவல் அனுப்பி சாருவிற்கு உதவ முன்வருகிறார்.. சூர்யாவுடன் பழகும்போது, சாருவின் காதல் மெல்ல மெல்ல சூர்யாவின் பக்கம் திரும்புகிறது. எதிர்பாரதவிதமாக கதிர் மீண்டும் ஊட்டிக்கு வந்து நிற்கிறார்.. இறுதியில் சாருவின் முடிவு என்ன என்பதே படத்தின் கதை.

நாயகன் ஸ்ரீராம் கார்த்திக்: காதலுக்கும் தியாகத்திற்கும் இடையே தவிக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான இளைஞனாக இவர் தனது நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். தனது கண்கள் மற்றும் உடல் மொழி மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்

கிரிஷா குருப்: அப்பாவித்தனமான மற்றும் மனப்போராட்டம் நிறைந்த சாரு என்ற கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த மற்றும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு குழப்பமான நிலையில் இருந்து முதிர்ச்சியடைந்த பெண்ணாக மாறும் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்துள்ளார்

இப்படத்தில் சிங்கம்புலி, முனிஷ்காந்த் மற்றும் தங்கதுரை ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்..

இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய பலமே அதன் பிரமிக்க வைக்கும் காட்சிகள் தான். ஒளிப்பதிவாளர் செழியனின் பணி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது ஊட்டியில் உள்ள லவ்டேல் போன்ற மலைப்பிரதேசங்களின் இயற்கை அழகை ஒளிப்பதிவு மிகச் சிறப்பாகப் படம்பிடித்துள்ளது.

இளையராஜாவின் இசையில் பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும், பின்னணி இசை இனிமை..

இயக்குநர் அஜயன் பாலா 80 மற்றும் 90-களின் உணர்வுப்பூர்வமான திரைக்கதை பாணியில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அதேசமயம் தான் காதலித்த பெண்ணின் காதலை சேர்த்து வைக்க முயற்சிக்கும் நாயகனின் ஒரு பழமையான காதல் கதையை எப்படி தேர்ந்தெடுத்தார் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது.