
விஷ்ணு விஷால் நடிகர் விஷ்ணு விஷாலாகவும் மிஸ்கின் இயக்குனர் மிஸ்கினாகவுமே நடிக்க , கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, கஸ்தூரி, விஜய் சாரதி நடிப்பில் ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்களில் நடித்தவரும் நிறைய விளம்பரப்படங்களின் இயக்குனருமான கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்கும் படம்.
இயக்குனராக வேண்டும் என்ற கனவுடன் ஹீரோ ருத்ரா விஷ்ணு விஷாலிடம் கதை சொல்ல செல்கிறார். ஆனால் அவர் சொல்லும் கதை பிடிக்காததால் காதல் கதை வேண்டும் என கேட்கிறார் விஷ்ணு. உடனே ஹீரோ தன்னுடைய கதையை அவருக்கு சொல்கிறார். அது பிடித்து போக உடனே நடிக்க சம்மதிக்கிறார் விஷ்ணு விஷால். ஆனால் அதில் ஒரு சிக்கல் வருகிறது. அதை ஹீரோ எப்படி சமாளித்தார்? அவருடைய இயக்குனர் கனவு என்ன ஆனது? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது படம்.
நாயகனாக அறிமுகமாகியிருக்கும் விஷ்ணுவிஷாலின் பெரியப்பா மகன் ருத்ரா, அறிமுக நடிகர் போல் இல்லாமல் அனுபவ நடிகர் போல் நடித்திருக்கிறார்.காதல்,.கோபம், மற்றும் சோக உணர்வுகளையும் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகி மிதிலா பால்கர் தமிழ் சினிமாவுக்கு நல்லதொரு அறிமுகம்… அன்பிற்கு ஏங்கும் பெண்ணாக, காதலனின் உதாசீனம், கோபம், காதல், அழுகை, ஏமாற்றம் எல்லா உணர்வுகளையுமே சிறப்பாக கொடுத்திருக்கார்..
விஷ்ணு விஷால் மற்றும் ரெடின் கிங்ஸ்லி இருவரின் நடிப்பும் படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம். மிஷ்கின் இயக்குநராகவே தோன்றி தன் பங்களிப்பை நிறைவு செய்து இருக்கிறார் ருத்ராவின் அப்பாவாக நடிகர் விஜயசாரதி..அம்மாவாக கஸ்தூரி… சண்டையிட்டுக் கொண்டாலும் சரியான ஜோடி..
சிறிய கதாபாத்திரம் என்றாலும் சித்தப்பாவாக வரும் கருணாகரனும் நல்ல தேர்வு. காமெடிதான் என்று இல்லை… நல்ல குணசித்திர பாத்திரமும் தனக்கு ஒத்துவரும் என்று நிரூபித்து இருக்கிறார் கருணாகரன்.
ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவில் காட்சிகள் வண்ணமயமாகவும் இளமைத் துள்ளலோடும் அமைந்திருக்கின்றன.
ஜென் மார்ட்டினின் இசையில் பாடல்கள் கதையின் போக்கை வெளிப்படுத்தக் கூடிய வகையில் அமைந்திருக்கின்றன.பின்னணி இசை காட்சிகளுக்குப் பலம் சேர்க்கிறது.
காதல் கதை என்றாலும், அதை ஒரு திரைப்படத்தின் பின்னணியில் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார், தற்போதைய தலைமுறையினர் காதல் உணர்வுகளை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள், என்பதை ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார்.









