
சமீப காலமாக லாக்கப் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதை மையப்படுத்திய ஒரு பழிவாங்கல் கதையாக வெளியாகி இருக்கும் படம்தான் போலீஸ் ஃபேமிலி. நள்ளிரவு சோதனையின் போது காதல் சுகுமார் ராஜா மலைச்சாமி உள்ளிட்ட போலீஸ் குழுவினர் டூவீலரில் வரும் ஒரு இளைஞனை கஞ்சா கடத்தியதன் பேரில் சந்தேகப்பட்டு ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று தாக்குகின்றனர்.
விசாரணையில் அந்த இளைஞன் குற்றுயிரும் கொலை உயிருமாய் கிடக்க அவனை ஒரு காட்டுப் பகுதியில் வீசுகின்றனர்., மறுநாள் அவன் இறந்துவிட்டார் என்கிற தகவல் கிடைக்கிறது.. அவன் தந்தையான பிரபல தாதா சரவணன் மகனுக்காக தன்னுடைய ரவுடித்தனத்தை எல்லாம் விட்டு ஒதுங்கி வாழ்ந்து வரும் நிலையில் இப்படி தன் மகனை கொன்றவர்கள் யார் என கண்டுபிடிக்க களம் இறங்குகிறார்.
இதன் பின்னணியில் நான்கு போலீஸ்காரர்கள் இருப்பதை அறிந்து அவர்களை விட்டுவிட்டு அவர்களது குடும்பத்தை எல்லாம் விரட்டி விரட்டி காவு வாங்குகிறார் முக்கிய போலீஸ அதிகாரியான ராஜா மலைச்சாமி தனது இரண்டு மகள்களையும் காப்பாற்ற தப்பிப் பிழைக்க ஓடுகிறார். சரவணனிடமிருந்து அவரால் தப்பிக்க முடிந்ததா ? மகள்களை காப்பாற்ற முடிந்ததா ? சரவணன் மகன் சாவின் உண்மையான குற்றவாளி யார் என்பதற்கு மீதிக்கதை விடை சொல்கிறது.
கதையின் நாயகனாக ராஜா மலைச்சாமி ஒரு நடுத்தர வயது போலீஸ் அதிகாரியின் மனநிலையையும் குடும்ப பாசத்தையும் அழகாக வெளிப்படுத்துகிறார். தனது மகள்களை காப்பாற்ற தப்பி ஓடும் போராட்டத்தில் அவருடன் சேர்ந்து நாமும் சிக்கிக் கொண்டு சிரமப்படுவது போன்ற உணர்வை தத்ரூபமாக நமக்குள் கொண்டு வந்து விடுகிறார்.
தாதாவாக சரவணன் அவருக்கு இந்த கதாபாத்திரம் அல்வா சாப்பிட்டது போல.. திரும்பி வாழ நினைத்தாலும் தனது மகன் சாவுக்கு காரணமானவர்களை பழி வாங்க மீண்டும் அவர் தனது பழைய பாதைக்கு திரும்புவதும் அதனால் மற்றவர்களுக்கு ஏற்படும் அழிவும் தவறுதான் என்றாலும் கூட சரிதானே என்று சொல்ல வைக்கிறது.
காதல் சுகுமார் தனது ஈகோவால் ஒரு பிரச்சனையை உருவாக்கி விட்டு அதன் பிறகு அதை சமாளிக்க முடியாமல் திணறும் ஒரு இளநிலை போலீஸ்காரரை அழகாக பிரதிபலித்திருக்கிறார்.
மற்ற கதாபாத்திரங்கள் நடித்திருக்கும் நிஷா துபே, ரோஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம்எஸ் செல்வா உள்ளிட்ட பலரும் தங்களது கதாபாத்திரங்களை அழகாக செய்திருக்கிறார்கள். தேவையற்ற காட்சிகள் என எதுவும் இல்லாமல் படம் ஆரம்பித்த நொடியில் இருந்தே கதைக்குள் பயணிக்க ஆரம்பித்து விடுவதால் படம் முழுவதும் நம்மால் காட்சிகளுடன் ஒன்றி பார்க்க முடிகிறது.
போலீஸ் ஃபேமிலி என்கிற டைட்டிலுக்கு ஏற்ற மாதிரி போலீசார் தங்கள் ஈகோ காரணமாக லாக்கப் மரணங்களை ஏற்படுத்தும்போது அது அவர்களது குடும்பத்தை எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பதை அழுத்தமாக இந்த கதையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாலு. எங்கேயும் தொய்வு இல்லாமல் ஓரளவுக்கு படத்தை விறுவிறுப்பாகவே கொடுத்திருக்கிறார்கள். தாராளமாக போலீஸ் ஃபேமிலி படத்தை தியேட்டரில் பார்க்கலாம்.









