கிராமத்து இளைஞரான கலையரசன் பக்கத்து கிராமத்தை சேர்ந்த தீபா பாலுவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். வெளியூரில் வசித்து வந்த அவர்கள் ஒரு கட்டத்தில் சொந்த ஊருக்கே குடி வருகிறார்கள். கர்ப்பிணியாக இருக்கும் தீபா பாலுவிற்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக கலையரசனின் குலதெய்வமான நிறைசூலி தெய்வத்திற்கு சேவல் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்த செல்கிறார்கள்.
தன் மகள் ஓடிச் சென்றதால் ஏற்பட்ட அவமானத்தில் இருக்கும் கஜராஜ் தனது சிறு வயது மகனையும் அழைத்துக் கொண்டு மகளை ஆணவக்கொலை செய்வதற்காக தேடி வருகிறார். ஒரு பக்கம் தாய்மாமன் ஆட்களுடன் இந்த தம்பதியை சூழ்கிறார்கள் குலதெய்வம் இவர்களை காப்பாற்றியதா அல்லது ஜாதி பெருமை இவர்களை காவு வாங்கியதா என்பது மீதி படம்.
கலையரசனின் எதார்த்தமான நடிப்பும் கட்டிய மனைவியை பாந்தமாக பார்த்துக் கொள்ளும் விதமும் ஒரு சராசரி கணவராக அவரை கண் முன் நிறுத்துகிறது.
ஜாடிக்கேத்த மூடி போல அவருக்கு சரியான ஜோடியாக தீபா பாலுவும் படம் முழுவதும் தனது அழகான அமைதியான முகத்தாலும் நடிப்பாலும் நம்மை வசீகரிக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் நட்பும் போன் உரையாடல் காதலும் சினிமாவுக்கு புதுசு.
படத்தின் கலகலப்புக்கு ஓரளவு உத்தரவாதம் தந்து குணச்சித்திர கதாபாத்திரமாகவும் தன்னை வெளிப்படுத்தியுள்ளார் பால சரவணன். ஆணவ கொலை என்றாலே கஜராஜா தான் என்பது போல அவரை ஆக்கிவிட்டார்கள். இந்த படத்திலும் அந்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் மற்றும் கலையரசனின் குடும்பத்தினராக வருவார்கள் அனைவரின் நடிப்பும் மெச்சத்தக்கது..
காடு, மலை, அருவி என அந்த கதைக்களமே பார்ப்பதற்கு திகில் ஊட்டுவதாக இருக்கிறது. அதற்குள் கோவில் வழிபாடு, கொடூர மனிதர்கள் கூட்டம் என என்ன நடக்குமோ என்று படம் முழுக்க நம்மை திக் திக் என திகைப்பிலேயே வைத்திருக்கிறார்கள்/ ஆணவக் கொலைகளை வைத்து பல படங்கள் ஏற்கனவே வந்திருந்தாலும் அவற்றுகெல்லாம் மிக உச்சமாக இருக்கிறது இந்த கொலைச்சேவல்
காரணம் அந்த கடைசி கால் மணி நேர கிளைமாக்ஸ் காட்சி நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. என்னதான் நிதர்சனம் என்றாலும் அதை இவ்வளவு தீவிரமாக காட்டி இருக்க தேவையில்லை. கொஞ்சம் பாசிட்டிவாக முடித்து இருந்தால் குலதெய்வ வழிபாட்டில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு இன்னும் அதிக நம்பிக்கை ஏற்பட்டிருக்கும் என்பது நம் நம் கருத்து.









