சொப்பன சுந்தரி ; விமர்சனம்

இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், தீபா வெங்கட், கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சொப்பன சுந்தரி.

படுத்த படுக்கையாக இருக்கும் அப்பா, பேராசை கொண்ட அம்மா லட்சுமி (தீபா சங்கர்), பேச இயலாத அக்கா தேன்மொழி (லட்சுமிப் பிரியா), ஆகியோருடன் வறுமை வாழ்க்கை வாழ்ந்து வருகிறார், அகல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்). இந்நிலையில் அவருக்கு நகைக்கடை மூலம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்று பரிசாகக் கிடைக்கிறது. இதை வைத்து தனது சகோதரி திருமணத்தை நடத்தி விட நினைக்கிறார் அகல்யா. அதற்கான ஏற்பாட்டில் இருக்கும்போது, வீட்டை விட்டு வெளியேறிய அண்ணன் துரை (கருணாகரன்), கார் தனக்கே சொந்தம் என்று வருகிறார். விவகாரம் காவல் நிலையம் செல்கிறது. காரின் உண்மையான உரிமையாளர் யார்? கருணாகரன் ஏன் அதை உரிமை கொண்டாடினார்? காவல் துறை என்ன நடவடிக்கை எடுத்தது என்பது மீதி கதை.

ஒரு படத்தில் ஹீரோ இருந்தால் என்னவெல்லாம் செய்வாரோ அதை அனைத்தையும் ஐஸ்வர்யா ராஜேஷ் செய்கிறார். அப்பாவியாக ஆரம்பித்து அதிரடியாக மாறும் ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது. குடும்பத்தின் ஏழ்மையை கண்களால் கடத்துவதாகட்டும், ஆஸ்பத்திரியில் அப்பாவி போல் முகத்தை வைத்துகொண்டு பண்ணும் காமெடியாகட்டும், வம்பு பண்ணுபவர்களை வெளுத்துக்கட்டுவதாகட்டும் எல்லா இடங்களிலும் அசத்தியிருக்கிறார். அக்காவாக வரும் லஷ்மி பிரியா சிறப்பாக நடித்துள்ளார்.

அம்மாவாக வரும் தீபா சங்கர் வெகுளித்தனமான கேரக்டரில் பிரமாதம். மிக்ஸிக்காக ஏங்குவது, மகளின் வீரத்தை எண்ணி பெருமைப்படுவது என்று எல்லா இடங்களிலும் நிறைவான நடிப்பைக் கொடுத்துள்ளார்.

அண்ணனாக வரும் கருணாகரன் வழக்கம்போல் யதார்த்த நடிப்பை மிகையில்லாமல் வழங்கியிருக்கிறார். அடாவடி கேரக்டருக்கு மைம்கோபி கச்சிதம். போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சுனில், மாப்பிள்ளையாக வரும் சாரா, உதவி இயக்குனராக வரும் சதீஷ் கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லீ என அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

அஜ்மல் தஹ்ஸின் இசையில் பாடல்களும், விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் படத்துக்கு பலம். ஒளிப்பதிவாளர்கள் பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் யதார்த்தமாக ஒளிப்பதிவு செய்து கதையை விறுவிறுப்பாக நகர்த்த உதவியிருக்கிறார்கள்.

எல்லா தரப்பு மக்களும் விரும்பி பார்க்கும் படமாக சொப்பன சுந்தரி அமைந்துள்ளது.