Reviews

தண்டகாரண்யம் ; விமர்சனம்


மலை கிராமத்து இளைஞனான கலையரசன் வனக்காவலராக 9 வருடங்களுக்கு மேல் தற்காலிக பணியில் வேலை பார்த்து வருகிறார். எப்படியாவது பணி நிரந்தரம் ஆகி தனது காதலியை திருமணம் செய்து கொள்ளலாம் என பொறுமையாக வேலை பார்க்கிறார். அவரது அண்ணன் அட்டகத்தி தினேஷ் விவசாயம் செய்து கொண்டு ஊர் மக்களின் நல்லது கெட்டது விஷயங்களை முன் நின்று கவனித்து கொள்கிறார்.

இந்த நிலையில் வன அதிகாரி அருள்தாஸ் மரம், யானை தந்தம் போன்றவற்றை கடத்தி தொழில் செய்யும் லோக்கல் அரசியல்வாதி பேட்டை முத்துக்குமாருக்கு உறுதுணையாக முறைகேடான செயல்களில் ஈடுபடுகிறார், இதைக் கண்டு பொறுக்க முடியாத கலையரசன் தனது அண்ணன் தினேஷிடம் சொல்ல அவர் அவற்றையெல்லாம் வீடியோ ஆதாரங்களாக மீடியாவில் கொடுக்க சட்டம் அவர்களுக்கு தண்டனை கொடுக்கிறது, அதே சமயம் கலையரசன் தற்காலிக வனக்காவலர் பணியில் இருந்து நீக்கப்படுகிறார்..

அப்போது சில லட்சம் ரூபாய் கொடுத்தால் ஜார்க்கன்டில் நடக்கும் ராணுவ வீரர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி எடுத்து விரைவில் அரசாங்க வேலை வாங்கி விடலாம் என ஒருவர் சொல்ல, தினேஷ் தனது தோட்டம், நிலத்தை விற்று அந்த பணத்தை கொடுத்து கலையரசனை பயிற்சிக்கு அனுப்பி வைக்கிறார். அங்கே சென்ற பிறகுதான் நக்சலைட்டுகளை சரணடைய சொல்லி அவர்களுக்கு மறுவாழ்வு தரும் விதமாக அந்த ராணுவ பயிற்சி முகாமில் பயிற்சி கொடுத்து அவர்களின் சிலரை ராணுவ வீரர்களாக பணி எடுக்கும் அரசாங்க திட்டத்தின்படி அங்கே பயிற்சி கொடுக்கப்படுகிறது என்று கலையரசனுக்கு தெரிய வருகிறது.

வேலையில்லாமல் ஊருக்கு திரும்ப முடியாது என்பதால் வேறு வழியின்றி தானும் ஒரு நக்சலைட் தான் என்று சொல்ல வேண்டிய சூழல் கலையரசனுக்கு ஏற்படுகிறது., இதனை தொடர்ந்து அவரும் ஊரில் இருக்கும் அவரது குடும்பமும் என்னென்ன சிரமங்களை அனுபவிக்கிறார்கள், அதை தாண்டி கலையரசன் தன்னுடைய கனவான அரசு பணியை அடைந்தாரா, தனது காதலியை திருமணம் செய்தாரா என்பது மீதிக்கதை.

கலையரசனின் வேடமும் அதில் அவருடைய நடிப்பும் பார்ப்போரை படபடக்க வைத்திருக்கின்றன. தன் உயிர் போகப்போகிறது என்பதை தெரிந்து பதற்றம் அடையும் போதும், அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கும் போதும், நடிப்பின் மூலம் படம் பார்ப்பவர்களை பதற்றமடைய செய்துவிடுகிறார்.

பழங்குடி மக்களுக்கு நீதி கேட்டு போராடும் குணம், தம்பிக்கு ராணுவ வேலையை வாங்கி கொடுத்து தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற வைராக்கியம் என கிராமத்து ஆக்ரோஷ இளைஞனாக, போராட்ட மனப்பான்மையுடன் அதிரடி ஆக்ஷன், காட்டி நடித்துள்ளார்.

அட்டகத்தி தினேஷின் மனைவியாக ரித்விகா வழக்கம் போல பாந்தமான நடிப்பு. அதே சமயம் கலையரசனுக்கு ஜோடியாக நடித்துள்ள நாயகி வின்சு சாம் யதார்த்த அழகில் நம்மை அப்படியே மயக்குகிறார். குறிப்பாக கலையரசனுடனான அவரது காதல் காட்சிகள் மீண்டும் ஒருமுறை காதலித்து பார்க்கலாமா என்கிற உணர்வை ஏற்படுத்துகிறது.

டான்சிங் ரோஸ் சபீர் கல்லரக்கல் இதில் மிக முக்கியமான பாத்திரத்தில் அபாரமாக நடித்திருக்கிறார். நகைச்சுவை மற்றும் வலிமையான கதாபாத்திரங்களால் பாலசரவணனும் அருள்தாஸும் சிறப்பாக கவனம் ஈர்க்கிறார்கள்.. அந்த பயிற்சி ஆபிசர் கொடூரம் கலந்த கெத்து காட்டியுள்ளார் நடிப்பில்.

ஜஸ்டின் பிரபாகரன், பின்னணி இசை மூலம், “இத்தனை நாளா எங்க பிரதர் இருந்தீங்க…” என்று கேட்க வைத்திருக்கிறார். இடையிடையே இளையராஜாவின் ”ஓ…ப்ரியா…ப்ரியா…” மற்றும் “மனிதா…மனித…” பாடல்களையும் மிக சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள்..

ஒளிப்பதிவாளர் பிரதீப் கலைராஜா, அடர்ந்த வனப்பகுதிகளையும், அப்பகுதி பழங்குடி மக்களின் வாழ்வியலையும் அழகியலோடு நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்

படத்தில் ஆங்காங்கே வரும் ட்விஸ்ட்கள் எல்லாம் ரசிக்கும் படியாக இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க திரில்லர் பாணியில் இயக்குனர் அதியன் ஆதிரை கொடுத்திருக்கிறார். கதைக்களத்தை கொண்டு சென்ற இயக்குனர் இயக்குனர் எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுக்குரிய ஒன்று. மந்திரி மற்றும் அரசியல் துறை அதிகாரிகளால் அப்பாவி இளைஞர்கள் எப்படி நக்சலைட்களாக மாற்றப்பட்டு கொல்லப்படுகிறார்கள் என்ற ஒரு உண்மையை துணிச்சலாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.