
ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஸ்ரீகாந்த், பிளாக் பாண்டி, விஜே பப்பு உள்ளிட்ட நண்பர்கள் நால்வர் வாராவாரம் விடுமுறையை சந்தோஷமாக கொண்டாடுபவர்கள். ஒரு முறை கால் கேர்ள் பெண்ணான சிருஷ்டி டாங்கேவை அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு என்ஜாய் பண்ண செல்கிறார்கள். முதல் இரண்டு நாட்கள் அதிகப்படியான மதுவை அருந்தியதால் அவர்கள் நினைத்து வந்த விஷயம் நடைபெறாமல் தள்ளிப் போகிறது.
ஆனால் மூன்றாம் நாள் திடீரென சிருஷ்டி டாங்கே காணாமல் போகிறார். அவரை நண்பர்கள் குழு தேடி அலையும்போது நண்பர்களில் ஒருவரும் எதிர்பாராத விதமாக கொல்லப்பட்டு கிடக்கிறார். போலீஸ் அதிகாரியான ஜான் விஜய் இந்த வழக்கை விசாரிக்கும் போது சிருஷ்டி டாங்கே எப்படி காணாமல் போனார் ? அவருக்கு என்ன ஆனது ? நண்பர்களில் ஒருவர் கொல்லப்பட என்ன காரணம் என்கிற உண்மைகளை கண்டுபிடிக்கிறார்.
படம் பார்க்கும் நமக்கும் அந்த காரணம் அதிர்ச்சி தருகிறது ? என்ன நடந்தது என்பதற்கு தி பெட் படத்தை பாருங்கள்.
கொண்டாட்ட உணர்விலும், காதலை வெளிப்படுத்துவதிலும் யதார்த்தமாக நடித்துள்ள ஸ்ரீகாந்த், இளைஞனின் படுகொலைக்கு பிறகு நடுங்குவது பரிதாபத்தை வரவழைக்கிறது.
விலைமாது கிறிஸ்டியாக சிருஷ்டி டாங்கே அழகாகவும், நேர்த்தியாகவும், விரசமில்லாத காட்சிகள், லாவகமாக அனைவரையும் கையாண்டு மறைந்து போகும் கதாபாத்திரத்தில் சிறப்பாக செய்துள்ளார்.
ஸ்ரீகாந்தின் நண்பர்களாக நடித்திருக்கும் பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் காட்சிகள் பெரியதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜான் விஜய், நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் திவ்யா, போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் தேவி பிரியா ஆகியோர் அளவாக நடித்து கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
கோகுலின் ஒளிப்பதிவும், தாஜ்நூரின் பின்னணி இசையும் ஓகே. ஒரு விடுதியின் படுக்கை, கதை சொல்வது போல் எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.மணிபாரதி. விலை மாதுவை நாயகியாக மையப்படுத்திய சற்று தடம் மாறினாலும் படத்திற்கு மலிவான பார்வை வந்துவிடும் வாய்ப்புள்ள கதையில் இந்த விபத்து நேராமல் எச்சரிக்கையுடன் திரைக்கதை அமைத்துள்ளார். காதல் கதை திடீரென்று கிரைம் திரில்லருக்கு மாறினாலும், நிறைய காட்சிகள் மெதுவாக நகர்வதை இயக்குனர் எஸ்.மணிபாரதி கவனித்திருந்தால் விறுவிறுப்பு அதிகரித்திருக்கும்.









