“நாங்கள் பட்ட கஷ்டத்திற்குப் பலன் கிடைக்கும்” – ‘கா’ படம் பற்றி ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்‌ஷன் படம் ‘கா’. இயக்குநர் நாஞ்சில் இயக்கியிருக்கும் இப்படத்தை சசிகலா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வழங்க, ஜான் மேக்ஸ் தயாரித்திருக்கிறார். காட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள திரில்லர் ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், கே.பாக்யராஜ், கே.ராஜன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டார்கள்.

படம் குறித்து பேசிய நடிகை ஆண்ட்ரியா, “நாஞ்சில் மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு இப்படத்தை முடித்துள்ளார். கொரோனாவிற்கு முன்னதாக கேட்ட கதை இப்போது திரைக்கு வந்துள்ளது. ஒரு படம் குழந்தை என்றால் இயக்குநரும் தயாரிப்பாளரும் அம்மா அப்பா மாதிரி. அவர்கள் இருவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே படம் நன்றாக வரும். இப்படத்தில் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளனர். காடு எனக்குக் கடவுளை விட மிகவும் பிடிக்கும். நிஜமான சிக்னலே இல்லாத பல இடங்களில் காட்டின் உள்ளே போய் படம் எடுத்துள்ளோம். நாங்கள் பட்ட கஷ்டத்திற்குப் பலன் கிடைக்கும். இப்படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

சசிகலா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஆண்டனி தாஸ் பேசுகையில், “கா ல்லோரும் ஈஸியா ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி சிம்பிளான டைட்டிலாக வைத்து விட்டார் இயக்குநர். படம் எடுத்து 2 வருடங்கள் ஆகிவிட்டது சில கரக்சன்கள் இருந்தது அதனால் தான் இந்த தாமதம். எல்லோரும் என்ன பிரச்சனை எனக் கேட்டார்கள். சினிமாவைப் பொறுத்தவரை அது நம் கையில் இல்லை. எல்லாம் மேலே உள்ளவன் மனசு வைக்க வேண்டும், இறுதியாக உங்கள் முன் திரைக்குக் கொண்டு வந்துள்ளோம். நாஞ்சில் மிக அட்டகாசமாக எடுத்துள்ளார். நானே ஆரம்பத்தில் நம்பவில்லை திரைக்கதையை அத்தனை ஸ்பீடாக கொண்டு போயுள்ளார். மும்பையில் படம் பார்த்த அனைவரும் படத்தை பாராட்டினார்கள். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் பேசுகையில், “கா படம் பிரம்மாதமாக வந்துள்ளது. ஆண்டனி ராஜ் எங்கள் படத்தை வாங்கி நல்ல வகையில் மக்களிடம் சேர்த்து வருகிறார் அவருக்கு என் நன்றி. இங்கு வாழ்த்த வந்த ஆளுமைகள் பாக்யராஜ், கே ராஜன் சார், உதயகுமார் சார் அனைவருக்கும் நன்றி. ஆண்ட்ரியா கடின உழைப்பைத் தந்துள்ளார். நாஞ்சில் அருமையான படத்தைத் தந்துள்ளார் உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும். ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

இயக்குநர் நாஞ்சில் பேசுகையில், “மெசேஜ் சொல்வது என்பது சினிமா இல்லை என்பதை நான் நம்புகிறேன். சினிமா என்பது அனுபவம் அதிலிருந்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். நடிகை ஆண்ட்ரியாவிற்கு நன்றி. படம் ஆரம்பித்தலிருந்து இன்று வரை உடன் நிற்கிறார். சலீம் கௌஸ் சார் அவரை நிறையப் போராடித்தான் வர வைத்தேன். கதையைக் கடைசி வரை கேட்கவேயில்லை. என்னைப்பற்றிக் கேட்டார் எனக்குப் பிடித்த இயக்குநர் பற்றி கேட்டார் பின் எனக்காக வந்தார். இனிமேலும் கதை கேட்க மாட்டேன் எப்போது வேண்டுமானாலும் கூப்பிடு வருகிறேன் என்றார். இப்போது அவர் இல்லாததது வருத்தம். என் படக்குழுவினர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் எல்லோருக்கும் நன்றி. இப்படத்தினை தயாரித்த என் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் அவர்களுக்கு நன்றி. இந்தப்படம் உங்கள் மனதை ஆக்கிரமிக்கும் ஒரு படமாக இருக்கும். நன்றி.” என்றார்.

நடிகர் கமலேஷ் பேசுகையில், “30 வருடங்களாக இந்த துறையில் இருக்கிறேன். என் மீது சின்னத்திரை என்ற முத்திரை வைக்காமல் எனக்கு வாய்ப்புத்தந்த ஜான் மேக்ஸ் சார், இயக்குநர் நாஞ்சில் ஆகியோருக்கு நன்றி. கண்டிப்பாக இது வெற்றிப்படமாக இருக்கும். இப்படத்தில் ஆண்ட் ரியா மேடத்தை சூப்பர் ஹீரோவாகப் பார்க்கலாம். அட்டகாசமாக நடித்துள்ளார். எனக்குக் கிடைத்த வாய்ப்பு மிகப்பெரியது. இயக்குநர் நாஞ்சில் மிகப்பெரிய இயக்குநராக வலம் வருவார். இப்படம் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும் நன்றி.” என்றார்.

’கா’ பட இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு பேசுகையில், ”கா என்பது அட்சரம் ஒரு வார்த்தை என்றும் மாறாதது. பாடல்கள் அத்தனையும் அட்டகாசமாக எழுதியுள்ளார். கா என்பது இறைவன், இந்த படத்தில் ஆண்ட்ரியா மேடமே வன துர்க்கை போன்று தான் இருப்பார். மரங்கள் வெட்டாதீர்கள் என்பதை ஒரு அழகான கமர்ஷியல் திரில்லராக எடுத்துள்ளார். ஜான் மேக்ஸ் ஆண்டனி தாஸ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். என் முழு உழைப்பைத் தந்துள்ளேன். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் நன்றி.” என்றார்.

இயக்குநர் தயாரிப்பாளர் திருமலை பேசுகையில், “கா படத் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸுக்கு சினிமாவைத் தவிர எதுவும் தெரியாது. எவ்வளவு பணம் தந்தாலும் அவர் சினிமா தான் எடுப்பார். அவருக்கு சினிமா மீது அவ்வளவு காதல். தான் எடுத்த படம் வெளிவர வேண்டும் என்று இன்று வரை உழைத்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் நாஞ்சில். மிக உயிரோட்டமுள்ள படமாக இப்படத்தை எடுத்துள்ளார். நல்ல படம் எடுப்பது காஷ்டம் அதை வெளியிடுவது இன்னும் கஷ்டம். ஆனால் இப்படம் எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும்.” என்றார்.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசுகையில், “கா, காட்டைக்குறிக்கும் தலைப்பு. காட்டை வைத்து படம் எடுப்பது கடினமானது. நான் அந்த மாதிரி கஷ்டப்பட்டிருக்கிறேன். காடு என்பது தனி சொர்க்கம் அதை வைத்து படம் இயக்கியுள்ள நாஞ்சில் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் அற்புதமான தயாரிப்பாளர். அவரது தயாரிப்பான மைனா படம் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப்படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும். ஆண்ட்ரியா மற்ற நடிகைகள் போல் இல்லாமல் பட விழாவிற்கு வந்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். படத்தில் உழைத்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். வித்தியாசமான களத்தில் வித்தியாசமான படத்தை எடுத்துள்ள படக்குழுவினருக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசுகையில், “ஜான் மேக்ஸ் ஒரு வரமாகத் தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளார். ஒரு அருமையான படத்தினை எடுத்துள்ளனர். இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும். எந்த ஒரு படமும் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தைத் தர வேண்டும் அப்போது தான் தமிழ் சினிமா பிழைத்திருக்கும். ஆண்ட்ரியா தமிழ்ப்பெண் என்பது எனக்குத் தெரியவே தெரியாது. இப்போது கேட்ட போது தான் தெரிகிறது அவர் இன்னும் பெரிய வெற்றி பெற வேண்டும். ஜான் மேக்ஸ் ஆண்டனி இருவருக்காகவும் கா படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.” என்றார்.

இயக்குநர் பாக்யராஜ் பேசுகையில், “சசிகலா புரொடக்‌ஷன்ஸ் எனக்குத் தெரிந்தவர்கள். அதனால் அவர்கள் அழைத்தால் உடனே வந்துவிடுவேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஆண்ட்ரியா இப்படத்தில் எந்தளவு கடினமாக உழைத்துள்ளார் என இயக்குநர் கூறினார் அவருக்கு வாழ்த்துக்கள். இயக்குநர் சினிமா என்பது அனுபவம் என்றார். அவர் சொன்னது படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியது. அந்த காலத்தில், வெளிவரும் ரிவால்வர் ரீட்டா போன்ற பெண்கள் நடிக்கும் ஆக்சன் படங்கள் எனக்குப் பிடிக்கும். விஜயசாந்தி இது போல் படங்கள் செய்தார். இப்போது ஆண்ட்ரியா ஆக்சன் செய்துள்ளார் பார்க்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது. இப்படம் பெரிய வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள். மஞ்சும்மள் பாய்ஸ் மலையாளத்தை விட இங்கு தான் அதிகம் ஓடுகிறது. அடுத்த ஊரில் எடுக்கும் படங்கள் ஓடுகிறது மக்கள் ரசிப்பதால் தான் ஓடுகிறது நம்மூர் எழுத்தாளர் அதைக் காட்டமாக விமர்சித்துள்ளார். அதிலும் படத்தை மட்டுமின்றி கேரள மக்களை விமர்சித்து விட்டார். பெரிய எழுத்தாளர் இப்படிப் பேசியது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. இதை இப்போது சொல்லக்காரணம் தமிழர்கள் யாரும் கண்டிக்கவில்லையே எனக் கேரள மக்கள் நினைத்து விடக்கூடாது. ” என்றார்.