
ஆதிரன் சுரேஷ், சி.ஆர்.ராகுல், ராஜசிவன் மூவரும் ஒரு மருந்தகத்தில் வேலை செய்கிறார்கள். சொந்தமாக மருந்தகம் வைக்கும் முயற்சியில் இருக்கும் இவர்கள், அதற்காக ரூ.6 லட்சம் பணம் சேர்க்கிறார்கள். ஆனால், அந்த பணம் திருட்டு போய் விடுகிறது. போலீசில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் ஆதித்யா தன் தந்தையிடம் பணம் கேட்க, நிலத்தை விற்று தருவதாகவும் ஊருக்கு கிளம்பி வருமாறும் தந்தை சொல்கிறார்.
முதலில் இரண்டு நண்பர்கள் பைக்கில் புறப்பட்டுச் செல்ல, மூன்றாவது நண்பர் பின்னர் வந்து இணைந்து கொள்வதாக ஏற்பாடு. ஊருக்கு செல்லும் வழியில் பயணத்தின்போது, அவர்களின் வாகனத்தின் டயர் பஞ்சராக, ஒரு தனிமையான காட்டுப்பகுதியில் உள்ள பஞ்சர் கடைக்கு செல்கின்றனர். அங்கு, அந்நியர்களுடன் ஏற்படும் மோதல், அவர்களை ஆபத்தான சூழலில் சிக்க வைக்கிறது.. இந்த சிக்கலில் இருந்து அவர்கள் எவ்வாறு விடுபடுகிறார்கள், ஆதித்யாவின் பின்னணி என்ன, மற்றும் மருந்தகத்தை வாங்கும் அவர்களின் முயற்சி வெற்றியடைந்ததா என்பதே மீதிக்கதை.
மூன்று நண்பர்களாக ஆதிரன் சுரேஷ், சி.ஆர். ராகுல், ராஜசிவன் ஆகியோர் யதார்த்தமாக திரைக்கதையில் தங்களின் உணர்;வுகளின் வெளிப்பாட்டை நேர்த்தியாக கொடுத்துள்ளனர். நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்திருக்கும் வின்சென்ட், சதிஷ்ராமதாஸ், மைக்கேல், பஞ்சர் கடை சிறுவன் என அனைவரும் சிறந்த நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். படத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்திருப்பவர்கள் கூட அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் லியோ வி.ராஜா, பொட்டல் காட்டையும், அமைதியான அந்த பஞ்சர் கடை இடத்தையும் பயமுறுத்தும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.. இசையமைப்பாளர் சாந்தன் அன்பழகனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
முழுக்க முழுக்க ஆண்களே நடித்து வெளியான படம் என்கிற சிறப்புடன் இது உருவாகி இருப்பதால், மருந்துக் கடை சம்பந்தப்பட்ட இந்தப் படத்தில் மருந்துக்குக் கூட ஒரு பெண் பாத்திரத்தை பயன்படுத்தாததில் மிகப்பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை..
மிகவும் எளிமையாகவும் அழுத்தமாகவும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை யதார்த்தமாகத் தந்திருக்கும் அறிமுக இயக்குநர் தர்மா, மேக்கிங்கில் ஆச்சரியப்படுத்துகிறார். அடுத்து என்ன நடக்கும் என்பதை யாரும் யூகிக்க முடியா வண்ணம் இயக்குனர் தர்மா, கதையின் போக்கை நகர்த்திச் சென்றது படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம். நேரடியாகவே கதை சொல்லி, கடைசிவரை த்ரில் உணர்வைப் பார்வையாளர்களுக்குத் தருவதில் வெற்றி பெறுகிறது படம்.









