
தனது மாமாவின் அச்சகத்தில் வேலை செய்பவர் ஜி.வி. பிரகாஷ் குமார். திடீரென அவரது அறையை காலிசெய்ய நேரிட, அப்போது, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இளம்பெண் கயாடு லோஹர் ஷேரிங் முறையில், தன் வீட்டிற்கு வந்து தங்குமாறு விடுக்கிற அழைப்பு அவருக்குக் கிடைக்கிறது. உடனே அந்த இடத்தையும், அந்தப் பெண்ணையும் பார்த்துவிட்டு சம்மதிக்கிறார் ஜிவி.
ஆனால், அந்த வீட்டில் சாதாரண விஷயங்களிலும் ஏதோ தவறு இருப்பதை அவர் தாமதமாகவே உணர்கிறார். அவர் மாட்டிக்கொண்ட பொறி என்ன? காடு லோஹர் உண்மையில் யார்? 1000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு போன்ற கேள்விகளுக்கு படம் பதிலளிக்கிறது.
ஜி.வி. பிரகாஷ் இயல்பான நடிப்பால் பலம் சேர்க்கிறார்; தொடக்கத்தில் சாதாரணமான தோற்றத்தில் வந்து குழப்பமடைவதும், பின்னர் கயாடுவை கண்டு பயப்படுவதும் என தனது பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்.
கயாடு லோஹர் மென்மையான தோற்றத்தில் தொடங்கி, படத்தின் போக்குக்கேற்ப தனது மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்த மர்ம கதாபாத்திரத்தில் அருமையாகப் பொருந்திப் போகிறார்.
இவர்களுடன் டி.எம். கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்கள் பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளனர். குறிப்பாக கயாடுவிடம் சிக்கிக்கொண்டவராக வரும் டி.எம். கார்த்திக் குறிப்பிடத்தக்க முத்திரையைப் பதித்துள்ளார்.
அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்திற்குத் தேவையான இருண்ட மற்றும் மிஸ்ட்ரி மூடைத் துல்லியமாகக் கொண்டு சேர்த்துள்ளது. சாம் சி.எஸ்-ன் இசையும் பின்னணி இசையும் முக்கிய காட்சிகளில் தேவையான பதற்றத்தை உருவாக்குகிறது.
இயக்குநர் மாரியப்பன் சின்னாவின் ‘இம்மார்டல்’ படம், வழக்கமான பேய் படங்களின் ஃபார்முலாவை அடிப்படையாகக் கொண்டதுதான்— ஆனால், இதில் இயக்குனர் கையாண்டுள்ள பேண்டஸி கோணம் இதை சற்று வித்தியாசப்படுத்த முயல்கிறது. தமிழ் சினிமாவில் அரிதாக வரக்கூடிய மிஸ்ட்ரி மற்றும் சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளிவந்துள்ள இம்மார்டல் படம் திரையரங்கில் ஒருமுறை தாராளமாகப் பார்க்கக்கூடிய சுவாரஸ்யமான படமாக அமைந்துள்ளது









