
வேலூர் பகுதியில் தன் தந்தையின் பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்துகொண்டு மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகிறார் விதார்த். மகனின் படப்பிடிப்புக்காக அருள்தாஸிடம் நிலத்தை அடகு வைத்து மூன்று லட்சம் கடன் வாங்குகிறார். திடீரென ஒரு நாள் அவரது நிலத்தை சில பேர் வந்து வேலி போட்டு ஆக்கிரமிக்கிறார்கள்.
அதிர்ச்சியான விதார்த் அது குறித்து விசாரிக்க, வங்கி ஏலம் மூலமாக இந்த நிலம் வாங்கப்பட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள். வங்கிக்கு சென்று விசாரித்தால் உங்கள் தந்தை இறப்பதற்கு முன் வாங்கிய கடனுக்கு தவணை சரியாக கட்டாததால் நிலத்தை ஏலம் விட்டதாக கூறுகின்றனர்.
ஆனால், தன் தந்தை கடனே வாங்கவில்லை என்கிற நிலையில் எப்படி ஏலம் விட்டிருப்பார்கள் என்று அதிர்ச்சியான விதார்த், நீதிமன்றத்தை நாடுகிறார். அதனைத் தொடர்ந்து நடக்கும் வாத பிரதிவாதங்களும் விதார்த் தனது நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டாரா என்பதும் மீதி கதை.
கன்னியப்பன் கதாபாத்திரத்தில் நடிகர் விதார்த் விவசாயியாகவே வாழ்ந்திருக்கிறார். நிலத்தை இழந்துவிட்டு வருந்துவது, அதே நிலத்தை மீட்க சட்ட ரீதியிலான போராட்டம் என்று பாதிக்கப்பட்டவர்களை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.
பாந்தமான கிராமத்து மனைவியாக, ஒரு குழந்தைக்கு அம்மா யதார்த்தமான கிராமத்து பெண்ணாக வளைய வருகிறார் ரக்ஷனா.
வழக்கறிஞராக இயக்குனர் தினந்தோறும் நாகராஜ்’ ஒரு அற்புதமான பாத்திரத்தில் இதில் நடித்திருக்கிறார். வட்டிக்கு கடன் கொடுத்தாலும் வில்லத்தனம் காட்டாத புதிய முகத்தில் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார் அருள்தாஸ்.. லொள்ளு சபா மாறன் சில காட்சிகளே வந்தாலும் நம்மளை சிரிக்கவும் வைக்கிறார். கண் கலங்கவும் வைக்கிறார். வங்கி மேலாளர் வேடத்தில் நடித்திருக்கும் சரவண சுப்பையா, ஒரு சில காட்சிகளில் வந்தாலும் சிறப்பான நடிப்பு.
இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் கதாபாத்திரங்களின் உணர்வுகளை தனது பின்னணி இசையின் மூலம் பார்வையாளர்களின் மனதில் எளிதாக கடத்துகிறார். ஒளிப்பதிவாளர் அருள் கே.சோமசுந்தரம், கிராமத்தின் இயல்பான அழகையும், இயல்பான கிராம மக்களின் முகங்களையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி ஒரு சாமானிய மனிதனின் கையகல நிலத்தை கூட அபகரிக்க இங்கே சுற்றி தெரியும் ஒரு ஓநாய் கூட்டத்தை பற்றி வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். பேங்க் மோசடி பல விதங்கள் அதில் உரியவருக்கே தெரியாமல் அவரது இடத்தையே வங்கி ஏலத்தில் விடுவது நிச்சயமாக அதிர்ச்சி தரக்கூடிய விஷயம். அந்தவகையில் நிலா மோசடியில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஒரு விழிப்புணர்வு பாடமாக இதை கொடுத்திருக்கிறார் இயக்குனர் வி.கஜேந்திரன்.









