
ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் இறந்து போனபின் அவர் எழுதி வைத்த உயிலின்படி அவரது சொத்துக்கள் சரி பாதியாக அவரது இரண்டு மகன்களுக்கும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சென்னையில் உள்ள ஒரு பிளாட் மட்டும் யாரோ ஒரு முகம் தெரியாத பெண் மீது எழுதப்பட்டுள்ளதாக வக்கீல் கூறுகிறார்.
அதனால் கோபமான மகன்கள் பொய்யாக அப்படி ஒரு பெண்ணை ஜோடித்து நீதிமன்றத்தில் நிறுத்தி அந்த பிளாட்டை தங்களுக்கே சொந்தமாக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் நீதிபதி சோனியா அகர்வாலுக்கு இதில் சந்தேகம் ஏற்பட நீதிமன்ற வழக்குகளை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் விக்ராந்தை அழைத்து இதன் பின்னணி குறித்து விசாரிக்க சொல்கிறார்.
விக்ராந்த்தின் விசாரணையில் சென்னையைச் சேர்ந்த பிரபல தனியார் நிறுவன ஊழியரான பிர்லா போஸின் மகள் இலக்கியா தான் அந்த பெண் என்பதும் தற்போது கோத்தகிரியில் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார் என்பதும் விக்ராந்துக்கு பெரிய வருகிறது. கோத்தகிரி சென்று அவரை சென்னைக்கு அழைத்து வருகிறார் விக்ராந்த்.
வரும் வழியில், சம்பந்தமே இல்லாமல் அந்த ஆந்திராக்காரர் இந்த பெண் மீது அந்த சொத்தை ஏன் எழுதி வைத்தார் என்கிற விவரம் அந்த பெண் மூலமாகவே தெரிய விக்ராந்த்துக்கு வருகிறது. இறுதியில் நீதிமன்றத்திற்கு வரும் அந்த பெண் தனக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்து யாருக்கு சேர வேண்டும் என ஒரு அதிர்ச்சிகரமான உண்மையை வெளிப்படுத்துகிறார். அது என்ன என்பது கிளைமாக்ஸ்.
ஆரம்பத்தில் இது ஏதோ சொத்து பத்திரம் சம்பந்தமான சிக்கல், அது குறித்த வழக்கு என்பது போல ஆரம்பித்து தான் படம் நகர்கிறது. ஆனால் போகப் போகத்தான் அதற்குள் ஒளிந்திருக்கும் வேறு விதமான உண்மைகள் வெளிப்பட்டு இது ஒரு அடல்ட் படம் என்பது போல ரூட் மாறுகிறது.
சோனியா அகர்வால் ஆகட்டும் அல்லது விக்ராந்த் ஆகட்டும்.. இருவரிடமும் இரண்டு அல்லது மூன்று நாள் கால்சீட் வாங்கி அவர்களது மொத்த காட்சிகளையும் எடுத்து முடித்து விட்டார்கள் போல் தெரிகிறது. அந்த அளவுக்குத்தான் அவர்கள் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கொடுக்கப்பட்டவரை மிகச் சிறப்பாகவே தங்களது கதாபாத்திரத்தை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த கதையை நகர்த்திச் செல்லும் இளம்பெண்ணாக நடிகை அலக்கியா.. பார்ப்பதற்கு யாரோ சாதாரண மிடில் கிளாஸ் அப்பாவி பெண் போல இருந்தாலும் அவருக்கு பின்னால் ஒளிந்திருக்கும் நிகழ்வுகள், அதை அவர் கையாண்ட விதம் என எனது நடிப்பால் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்.
இவர்களை எல்லாம் தாண்டி தொழிலதிபராக வரும் பதம் வேணுகுமார் யார்யா இந்த ஆள், இத்தனை நாளா எங்கய்யா இருந்தார் என்று கேட்கும் அளவிற்கு மிக இயல்பான, சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக அலக்கியாவுக்கும் அவருக்குமான உறவு ஏற்படுவதும் அதை அவர் டீலிங் செய்வதும் ரொம்பவே பக்குவப்பட்ட மனிதராக அவரது கதாபாத்திரத்தை சித்தரிக்கிறது.
இலக்கியாவின் தந்தையாக பிர்லா போஸ் தேவையற்ற ஒரு சிக்கலில் தெரியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்ப தலைவரை மிக சரியாக பிரதிபலிக்கிறார்.
படத்தின் ஒளிப்பதிவாளர் டி.எஸ் பிரசன்னா கோத்தகிரி சம்பந்தப்பட்ட காட்சிகளை அழகாக படமாக்க முயற்சி செய்தாலும் விக்ராந்த், அலக்கியா இருவரின் பயணத்தை இன்னும் அழகுற படமாக்கி இருக்கலாம். சவுரப் அகர்வாலின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலம்.
படத்திற்கு வில் அதாவது உயில் என்று பெயர் வைத்தாலும் படம் சொல்ல வரும் கருத்து ஒரு சொத்து யாருக்கு எழுதி வைக்கப்பட்டுள்ளது அது அவருக்கே சென்று சேர வேண்டும் என்பதுதான். ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் அதைத்தான் சொல்கிறதா என்று இயக்குனர் எஸ்.சிவராமனுக்கு மட்டுமே வெளிச்சம்.









