Reviews

ஆர்யன் : விமர்சனம்


தனியார் தொலைக்காட்சியில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடத்தி வரும் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஒருநாள் திடீரென்று பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எழுந்து வரும் செல்வராகவன், தான் மறைத்துக் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அனைவரையும் மிரட்டுவதுடன் அடுத்த ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு கொலையாக செய்யப் போவதாக அந்த நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகிறார்.

அதுமட்டுமல்ல போலீஸார் அவரை பிடிப்பதற்குள் செல்வராகவன் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்தும் கொள்கிறார். இறந்து போனவர் எப்படி கொலைசெய்வார் என நினைத்தால், ஆச்சர்யமாக தினமும் அது நடக்கிறது.

அவர் செய்யும் கொலைகளைத் தடுக்கும் முயற்சியில் முதல் நாளில் இருந்தே இறங்குகிறார் காவல்துறை அதிகாரியான விஷ்ணு. விஷால். அந்த முயற்சி பலித்ததா? கொலைகளைத் தடுக்க முடிந்ததா ? எதற்காக இந்த கொலைகள் என்கிற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிப்படம்..

காவல்துறை சீருடையில் மிடுக்கான தோற்றத்துடன் கம்பீரமாக வலம் வரும் விஷ்ணு விஷால் கெட்டப், உடல்மொழி என்று எல்லா அம்சங்களிலும் இன்னொரு முகம் காட்டி இருக்கிறார்.. செல்வராகவன் தினம் தோறும் டிவியில் அவரை சுற்றலில் விடும் காட்சிகளிலும் வேலை முக்கியமா குடும்ப முக்கியமா என்று பார்க்க வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலைகளில் விஷ்ணு விஷால் அழகாக நடித்திருக்கிறார். அந்த வகையில் விஷ்ணு விஷாலின் நடிப்பு பெரும்பலமாக அமைந்திருக்கிறது.

நல்லவரா கெட்டவரா என சந்தேகத்தை எழுப்பும் அளவுக்கு செல்வராகன் படத்தில் இன்னொரு நாயகன் என்றே சொல்லலாம் கொலை செய்வதற்காக போடும் திட்டங்கள், அதை கச்சிதமாக திட்டமிட்டு நிறைவேற்றும் இடத்தில் அதிர வைத்துள்ளார் அவரது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து கைதட்டல் பெறுகிறார்..

தொலைக்காட்சி நிருபராக நடித்துள்ள ஷ்ரத்தா ஸ்ரீநாத், தன்னுடைய வலுவான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.. விஷ்ணு விஷாலின் மனைவியாக நடித்திருக்கும் மானசா செளத்ரி, கருணாகரன், அவினாஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள்.

ஜிப்ரான் வைபோதாவின் பின்னணி இசை, ஒரு தூண் போல் படத்தை தாங்கி நிற்கிறது. ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு நேர்த்தியாக இருக்கிறது.

கொலையாளி இவர் தான் என்பது தெரிந்து விட்டாலும், அவர் செய்யப் போகும் கொலைகள் மற்றும் அதனை தடுக்க முயற்சிக்கும் ஹீரோவின் பயணத்தை படு சுவாரஸ்யமாக இதுவரை சொல்லப்படாத ஒரு கோணத்தில் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் பிரவீன்.கே. த்ரில்லர் படமாக மட்டுமல்லாமல், படத்தில் சமூக கருத்து ஒன்றையும் அழுத்தமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பிரவீன்.கே.

இந்தப் படம் கடைசியாக பேசி இருக்கும் விஷயம் புதுமையானது என்றாலும் மிகப்பெரிய சமூகப் பிரச்சனையை சொல்லியிருந்தாலும் இந்தப்படத்தில் அதற்காக நடக்கும் கொலைகள் குறித்து பார்க்கும்போது, இப்படியா செய்வது என்ற கேள்வியையும் படம் எழுப்புகிறது.