
காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறார் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக். அந்த சமயத்தில் அவருக்கு நீங்கள் தற்கொலை செய்ய வேண்டாம் என ஒரு பெண் அனுப்பிய மெசேஜ் வருகிறது. அதனால் அவர் தற்கொலை எண்ணத்தை கை விடுகிறார். அதன்பிறகு அவருக்கு தினசரி அந்த பெண்ணிடம் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் மெசேஜ் வருகிறது.
அதன் பிறகு தான் தெரிய வருகிறது. அந்தப் பெண் ஏற்கனவே இரண்டு மாதத்திற்கு முன்பு இறந்து போனவர் என்று. அது மட்டுமல்ல இறந்து போன அந்த பெண் தன்னை ஒருதலையாக காதலித்தவள் என்பதும் தெரிய வருகிறது. இப்போது உண்மையிலேயே ஆவியாக திரியும் அந்த பெண் மீது காதல் ஸ்ரீராம் கார்த்திக் காதல் வயப்படுகிறார்.. இந்த காதல் கைகூடியதா ? அதன் பிறகு என்ன நடந்தது என்பது மீதிக்கதை.
சக்திவேலன் கதாபாத்திரத்தில் மிகவும் பொருத்தமாக பொருந்தியிருந்தார் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக். தனது உடல் இல்லா தனது காதலியுடனான காதலை வெளிப்படுத்தும் இடத்தில் படம் பார்ப்பவர்களின் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்திருக்கிறார்.
நாயகியாக பாத்திமா (ஆனந்தி பாத்திரம்) அமைதியான நடிப்பிலும், முன்னாள் காதலியாக வரும் மனிஷா, எளிய தோற்றத்திலும் நன்றாக நடித்திருக்கிறார். அதுமட்டுமல்ல பாத்திமாவின் தோழியாக நடித்திருக்கும் நடிகை வைஷாலியும் தனது பாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்..
நாயகனின் தாயாக பிரியதர்ஷினி ராஜ்குமார்,கிராமத்து நாயகியின் தந்தையாக ‘ஜீவா’ ரவி மற்றும் இன்ஸ்பெக்டராக லிவிங்ஸ்டன் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை நிறைவுடன் செய்துள்ளனர்.
பாலகணேசன் ஒளிப்பதிவும், அபுபக்கர் இசையும் படத்துக்கு பக்கபலமாக துணை நிற்கின்றன..
கிளைமாக்ஸை யோசித்து விட்டு அதற்கு ஒரு கதையை எழுதி இருக்கிறாரோ என யோசிக்க வைத்தாலும் ஒரு திகில் கதையை இதுவரை சொல்லாத கோணத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர். ரமேஷ் இளங்கமணி. நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்றாக இருந்தாலும், அதை திரை மொழியில் கொஞ்சம் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.. இது ஒரு திகில் காதல் கதை என்றாலும் கூட வழக்கமான பயமும், காமெடியும் இல்லை என்பது புதுசு..









