Reviews

பேட் கேர்ள் ; விமர்சனம்


இன்றைய காலகட்டத்தில் இளம் பெண்கள் குறிப்பாக, பள்ளி செல்லும் காலங்களிலேயே தங்கள் பெற்றோரின் பேச்சை ஒதுக்கி தள்ளி விட்டு அல்லது அவர்கள் அடக்குமுறை பிடிக்காமல் தங்கள் விருப்பம் போல செயல்பட விரும்புகிறார்கள். இந்த படத்தின் கதாநாயகியும் கட்டுப்பாடான பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். பள்ளிக்கூடத்தில் காதல் வரும்போது பெற்றோர்கள் கண்டித்து வேறு பள்ளிக்கு மாற்றுகிறார்கள்.

இதனால் கடுப்பான நாயகி பள்ளி செல்லும் வரை தான் உங்கள் கட்டுப்பாடு, கல்லூரிக்கு சென்ற பின் என் இஷ்டத்திற்கு தான் நான் நடப்பேன் என்று சொல்வதுடன் கல்லூரியில் ஆண் நண்பர்களின் நட்பு, சக மாணவனுடன் காதல், அவனுடன் உடலுறவு என கொஞ்சம் அதீத எல்லைக்கு செல்கிறார். ஒரு கட்டத்தில் நாயகியை ருசித்த சக மாணவன் விலகிப் போக அதிர்ந்து போய் நிற்கிறார் நாயகி.

அதன் பிறகு அவருக்கு வாழ்க்கையின் பல நிதர்சனங்கள் புரிய வருகிறது. அதன் போக்கிலேயே நாயகி பயணிக்கிறாரா ? இல்லை இதுதான் வாழ்க்கை என பெரியவர்கள் வகுத்துக் கொடுத்த பாதைக்கு மாறுகிறாரா என்பது மீதி கதை.

படத்தின் நாயகி அஞ்சலி சிவராமன் அந்த கதாபாத்திரத்தை தாங்கிப் பிடித்து உயிர் கொடுத்திருக்கிறார். காதல், மோதல், ஏமாற்றம், வலி என அனைத்தையும் அழகாக வெளிப்படுத்துகிறார். இன்று நாம் கடந்து செல்லும் பல இளம் பெண்களின் வாழ்வியலை அழகாக பிரதிபலித்திருக்கிறார்.

அதேபோல அம்மா கதாபாத்திரத்தில் ஒரு ஆசிரியராக பொறுப்பாளர் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சாந்தி பிரியா. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரது வரவு நல்வரவு. சரண்யா ரவிச்சந்திரன், ஹிர்து ஹாரூன், டிஜே உள்ளிட்ட பலரும் தங்களுக்கு கொடுத்த வேலையை செவ்வனே செய்து இருக்கிறார்கள்.

இயக்குனர் வெற்றிமாறனின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம். வர்ஷா பரத் என்கிற பெண் இயக்குனர் இதை இயக்கி இருக்கிறார். அதனால் பெண்களின் மன ஓட்டத்தில் இருந்து இந்த படத்தை அணுகி இருக்கிறார் என்று எடுத்துக் கொண்டாலும் கூட குறிப்பாக பொத்தாம் பொதுவாக ஒரு பெண் என்று சொல்லாமல் ஒரு பிராமண பெண் என்பது போன்று உருவகப்படுத்தியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வேண்டுமென்றே ஒரு குறிப்பிட்ட ஜாதியின் மீது துவேசத்துடன் எடுக்கப்பட்ட படம் போலவே இருக்கிறது.

இந்த வயதில் இது தேவையா? இது தவறு என்று எல்லாம் சொல்லி பெண்களை கட்டுப்படுத்த நினைப்பதை விட அவர்களை சுதந்திரமாக விட்டாலே அவர்களாகவே எது தவறு, சரி என்பதை உணர்ந்து கொள்வார்கள் என்பது போன்று கதையை கொண்டு சென்று இருக்கிறார்கள். அதே சமயம் அதில் சரி பங்கு நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது என்பதையும் சொல்லி இருக்கலாம்..

நாட்டில் எடுக்கப்பட வேண்டிய, சொல்லப்பட வேண்டிய சமூக விழிப்புணர்வு விஷயங்கள் எவ்வளவோ இருக்க, சர்ச்சையாக ஒரு விஷயத்தை வேண்டுமென்றே கையில் எடுத்துக் கொண்டு அதை படமாக்க துணிந்திருப்பது எந்த விதமான மனநிலை என்பது தயாரிப்பாளர் வெற்றிமாறனுக்கும் இயக்குனர் வர்ஷா பரத்துக்கும் மட்டுமே வெளிச்சம்..