
செக்யூரிட்டி வேலை பார்த்து வரும் பாலாஜி சக்திவேல். அவரது மனைவி அர்ச்சனா. நகரத்தில் இருந்தாலும் அறுபதாம் கல்யாணத்தை விமர்சையாக நடத்த நினைக்கிறார். அதற்காக இது போன்ற நிகழ்வுகளை நடத்தித் தரும் கேபிஒய் பாலாவிடம் எவ்வளவு செலவாகும் என கேட்க அவர் சில பல லட்சங்களை சொல்கிறார்.
பார்க்க சாதாரணமாக இருக்கும் பாலாஜி சக்திவேலுக்கு சொந்த ஊரில் பெரிய இடம் இருக்கிறது. அதில் ஒன்றை 60 லட்சம் ரூபாய்க்கு வெற்றி படத்தை எடுத்து வருகிறார். இந்த நிலையில் தான் மத்திய அரசு அறிவிக்கும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமலுக்கு வருகிறது.
இதனைத் தொடர்ந்து கையில் இருக்கும் பணத்தை புதிய நோட்டுகளாக மாற்ற பாலாஜி சக்திவேல் படும் சிரமமும் அதை வெவ்வேறு வழிகளில் எப்படியாவது பணமாக மாற்றி விடலாம் என கேபிஒய் பாலா பண்ணும் முயற்சிகளும் தான் மீதி படம். பாலாஜி சக்திவேலின் அறுபதாம் கல்யாணம் நடந்ததா இல்லையா என்பது மீதி கதை.
கதையில் நாயகன் பாலாஜி சக்திவேலா, கேபிஒய் பாலாவா என்று கேட்கும் அளவிற்கு இரண்டு பேருக்கும் சரிசம முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஷெரீப். பாலாஜி சக்திவேல், அர்ச்சனா இருவரின் அன்பும் பாசமும் உயிர்ப்புடன் இருக்கும் காதலும் பார்ப்பதற்கே கொள்ளை அழகாக இருக்கிறது. மனைவி மீது ஒருவர் இவ்வளவு பேரன்பு வைக்க முடியுமா என ஆச்சரியப்படுத்துகிறார் பாலாஜி சக்திவேல். அதற்கு பிளாஷ் பேக்கில் ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.
அவரது மனைவியாக அர்ச்சனா நாளைக்கு பிறகு திரையுலகில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். பொருத்தமான தேர்வு தான்.
முதல்முறையாக கதாநாயகன் என்கிற அந்தஸ்துடன் களம் இறங்கி இருக்கிறார் கேபிஒய் பாலா. ஆனால் அவரது ட்ரேட்மார்க்கான காமெடியில் அதகளம் பண்ணாமல் கொஞ்சம் அடக்கி வாசித்து சென்டிமென்டில் ஸ்கோர் பண்ண முயற்சித்து இருக்கிறார். ஓரளவுக்கு நடிப்பும் நன்றாகவே வருகிறது.
கதாநாயகியாக நமீதா கிருஷ்ணமூர்த்தி கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இவர்கள் தவிர மற்ற கதாபாத்திரங்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து பங்களிப்பு செய்திருக்கின்றனர்.
பாடல்களை விட பின்னணி இசை அதிக கவனம் ஈர்க்கிறது. காந்தி கண்ணாடி என டைட்டில் வைத்ததற்கு இறுதியில் விளக்கம் தெரிய வரும்போது அட என ஆச்சரியப்பட வைக்கிறார் இயக்குனர்.. அதே சமயம் பல காட்சிகள் அழுத்தம் இல்லாமல் இருப்பதால் மனதில் தங்காமல் போய் விடுவதும் கொஞ்சம் பலவீனமே..
மற்றபடி குறை சொல்லக் கூடிய படம் இல்லை.. குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் தான் என்பதில் சந்தேகம் இல்லை…









