
ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கற்பனைகளும் கலந்து சொல்லும் படம்தான் டீசல். 2014-க்கு முந்தைய காலக்கட்டத்தில் கதை நடக்கிறது.
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என அங்குள்ள பாதிக்கும் என அங்குள்ள மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்குகின்றனர்.
இன்னொரு பக்கம் வாழ்வாதாரங்களை இழந்த மீனவர்களில் ஒருசிலர் அந்த எண்ணையையே திருடி கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்ய ஆரம்பிக்கிறார்கள் சாய்குமார் தலைமையிலான கும்பல். அவருடைய வளர்ப்பு மகனாக கெமிக்கல் இஞ்சினீரிங் படித்த ஹரிஷ் கல்யாண் இருக்கிறார்.
இந்தநிலையில் வட சென்னை பகுதியில் துறைமுகம் கட்ட சாய் குமாரின் உதவியை கேட்கிறார் கார்பரேட் முதலாளியான சச்சின் கெடேகர். ஆனால் சாய் குமார் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறி மறுத்துவிடுகிறார்.
அதேசமயம் வடமாநிலத்தில் இருந்து வரும் சாய்குமார் உடைய பெட்ரோல், டீசல் லாரிகளிலிருந்து பாதியை திருடி கலப்படமாக மாற்றி இவர்களுக்கு தொழில் ரீதியாக பிரச்சனை செய்கிறார் விவேக் பிரசன்னா.. இதற்கு போலீஸ் அதிகாரியான வினய்யும் துணையாக இருக்கிறார்..
அந்தவிதமாக தொழில் போட்டியையும், தன்னுடைய சுயலாபத்துக்காக மீனவ மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த துடிக்கும் கார்ப்பரேட் முதலாளியையும் ஹரிஷ் கல்யாண் எப்படி சமாளித்தார் என்பது மீதிக்கதை.
ஓபனிங் பாடல், சண்டைக் காட்சிகள், ஹீரோ வில்லன் மாஸ் மோதல் என ‘டீசல்’ படம் ஹரிஷ் கல்யாண் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார். ஆனால் சாக்லட் பாய் கேரக்டரில் நடித்து வந்த ஹரிஷ் கல்யாண் இப்படி ஆக்சன் அவதாரம் எடுத்திருப்பது பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை.
கதைக்கு எந்த வகையிலும் உதவாத ஒப்புக்கு சப்பாணி கதாபாத்திரத்தில் அதுல்யா ரவி நடிப்பு, ஆக்ஷன், நடனம் என நடித்து தள்ளி இருக்கிறார்.
சாய்குமார் நல்ல நடிப்பை தந்துள்ளார். மாயவேல் எனும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் வினய் ராய் கச்சிதமாக பொருந்தி வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். கார்ப்பரேட் வில்லன் சச்சின் கடேகரின் செயல்பாடுகளும் திட்டங்களும் தற்போதைய தொழிலதிபர்களை நினைவுபடுத்துகிறது.
விவேக் பிரசன்னா, கருணாஸ், ரமேஷ் திலக் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர். மாறன், தங்கதுரை ஆகியோரது டைமிங் காமெடி சிரிக்க வைக்கிறது. கேபிஒய் தீனா நாயகனின் நண்பராக கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
திபு நினன் தாமஸ் இசையில் பாடல்கள் ஒகே.. பின்னணி இசையிலும் குறைவில்லை. எம்.எஸ்.பிரபு, ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது
மீனவ மக்களின் வாழ்வில் அரசாங்கம் கொண்டு வந்த குருடாயில் வாங்கும் திட்டம் என்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை சொல்ல முயற்சித்திருக்கிறார். நல்ல கதையை தேர்ந்தெடுத்த இயக்குனருக்கு அதன் திரைக்கதையை சரியாக அமைக்க தெரியாமல் குழம்பி இருக்கிறார். மேலும் விறுவிறுப்பாக செல்லும் முதல் பாதி திரைக்கதையில் காதல் காட்சிகள் அவசியமில்லாமல் வலிந்து திணித்திருப்பது ரசிகர்களை சோர்வடையச் செய்கிறது. அதேசமயம் வட சென்னையில் உள்ள மீனவ கிராமங்களும், மீனவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை பற்றி அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சண்முகம் முத்துசாமி..
. .









