Reviews

இறுதி முயற்சி ; விமர்சனம்


கடன் பட்டவர்களின் வாழ்க்கை பற்றி பல படங்கள் வந்திருக்கின்றது. அந்த வகையில் இந்த இறுதி முயற்சி திரைப்படம் கடன் வாங்கியவர்களின் மனநிலையை சித்தரிக்கும் விதமாக உருவாகியுள்ளது.

ஜவுளிக்கடை நடத்தி வரும் ரஞ்சித் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவும் மகனின் மருத்துவ சிகிச்சை காரணமாகவும் விட்டல் ராவ் என்பவரிடம் ஒரு கோடி கடனாக வாங்குகிறார். ஆனால் தொழில் சரியாக போகாததால் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவிக்கிறார். இதனால் ஒரு கட்டத்தில் ஒரு வாரத்திற்குள் பணம் தர வேண்டும் என்றும் இல்லையென்றால் மனைவி, மகளை இழுத்துக் கொண்டு சென்று விடுவேன் என்றும் மிரட்டல் விடும் விட்டல் ராவ்.

அவரது குடும்பத்தை கண்காணிக்க இரண்டு அடியாட்களையும் நியமிக்கிறார். ஏற்கனவே ஒரு முறை தற்கொலைக்கு முயன்ற ரஞ்சித் இந்த முறை குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறார். இந்த சமயத்தில் நகரெங்கும் பரபரப்பு ஏற்படுத்தும் ஒரு சைக்கோ கொலைகாரன் ரஞ்சித் வீட்டில் அவர்களுக்கு தெரியாமலேயே மாடியில் ஒளிந்து கொள்கிறான்.

இந்த சமயத்தில் தான் இவர்கள் தற்கொலை முயற்சி எடுக்கிறார்கள். இவர்களது தற்கொலை முயற்சி தடுக்கப்பட்டதா ? ஒளிந்து கொண்ட அந்த சைக்கோ கொலைகாரனால் இவர்களுக்கு என்ன நேர்ந்தது ? இந்த பிரச்சனையிலிருந்து இவர்களால் மீள முடிந்ததா என்பது மீதி கதை.

கடன் பிரச்சனையில் சிக்கியதால் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் அவதிப்படும் நஷ்டப்பட்ட தொழிலதிபர் ரவிச்சந்திரனாக ரஞ்சித் படம் முழுவதும் கடனால் தத்தளிக்கும் குடும்பத் தலைவனின் மன வலியை முழுவதுமாக பிரதிபலித்து இருக்கிறார்.

கணவன் நிலை மற்றும் சூழல் அறிந்து நடக்கும் மனைவியாக எதார்த்தமாக நடித்திருக்கிறார் ரஞ்சித்தின் மனைவியாக நடித்திருக்கும் மெஹாலி மீனாட்சி. இயல்பான நடிப்பில் படத்தை தனது தோளில் சுமக்கிறார்.

கந்துவட்டி தலைவன் ராஜப்பாவாக விட்டல் ராவ், அவரது தம்பி காத்தவராயனாக புதுபேட்டை சுரேஷ், இருவருமே பொருத்தமான தேர்வு. விட்டல் ராவின் அந்த வில்லத்தனம் நிச்சயம் நாம் எதிர்பாராதது என்றாலும் ஆகறது வசனங்களை கொஞ்சம் சென்சார் செய்திருக்கலாம்.

காவல்துறை அதிகாரியாக நடித்தவர்கள் அனைவருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சுனில் லாசரின் பின்னணி இசை காட்சிகளின் சோகத்தை தீவிரப்படுத்துகிறது. சூர்யகாந்தியின் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும் உணர்ச்சி பூர்வமாக காட்சிகளை பதிவு செய்கிறது

கடனாளியாக இருப்பவர்களை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் ஜனா. கடனில் சிக்கி கொண்டு வலியாலும், அவமானத்தாலும் தவித்து வரும் பல குடும்பங்களின் பரிதாப நிலையை தரூபமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.. ஒரே வீட்டுக்குள் கதையை நகர்த்தியும், அதற்குள் இருக்கும் மன அழுத்தம், பயம், நம்பிக்கை ஆகிய உணர்ச்சிகளை மிக நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படம் கந்துவட்டியின் கொடுமை குறித்து மக்களுக்கு ஒரு சிறிய அளவிலான விழிப்புணர்வை கொடுத்தால் அதுவே இந்தப்படத்தின் வெற்றி