
மீனவ குப்பத்தில் பெரிய மனிதராக வலம் வருபவர் மதுசூதனன். அவரின் தங்கை மகன் லிங்கேஷ். சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்த நாயகன் லிங்கேஷை, மாமன் மகளான நாயகி திவ்யா, திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். லிங்கேஷும் அவர் மீது அக்கறையும், அன்பும் கொண்டவராக இருக்கிறார்.
இந்நிலையில் மீனவ சமுதாயத்தை பற்றி ஆய்வு செய்து தெரிந்து கொள்ள லண்டனிலிருந்து லியா மற்றும் அவரது நண்பர்கள் காரைக்காலுக்கு வருகின்றனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்யுமாறும், ஊரை சுற்றிக் காட்டி அவர்களின் வாழ்வியலை புரிகிறமாதிரி சொல்லும்படி மாமன் லிங்கேஷிடம் கூறுகிறார். வெளிநாட்டவர்களுக்கு வழிகாட்டியாகவும், தமிழக கலாச்சாரத்தை பற்றி சொல்ல லிங்கேஷ் இவர்களுடன் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இந்நிலையில் லியாவும் லிங்கேஷும் நெருங்கி பழகுகிறார்கள். இருவருக்கும் காதல் மலர்ந்து விடுகிறது. விரைவில் திருமணம் முடிந்து தனது மாமா லிங்கேஷுடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்ற கனவில் இருந்த திவ்யாவிற்கு பேரியாக விழுந்தது லியா – லிங்கேஷின் காதல். அடுத்த நடக்கும் எதிர்பாராத திருப்பங்களே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக வரும் லிங்கேஷ் எல்லை தாண்டாத அந்த நடிப்பு ரசிக்கவே வைக்கிறது. மாமா மகளை தன்மீது அன்பு காட்டும் தாய் ஸ்தானத்தில் தான் வைத்து பார்த்தேன் என்று நாயகன் சொல்லும் இடத்தில் லிங்கேஷ் அந்த கேரக்டரை நம் மனதுக்குள் பதிய வை த்து விடுகிறார்.
லிங்கேஷை காதலிக்கும் முறை பெண்ணாக வரும் திவ்யாவும் உணர்வு பொங்க நடித்திருக்கிறார். லிங்கேஷுக்கு முத்தம் கொடுத்த காரணத்திற்காக ஆறு வயது குழந்தையை கூட கிள்ளி தண்டனை கொடுத்து விடுவது திவ்யாவின் காதலுக்குச் சான்று..
நாயகனின் காதல் ஜோடியாக, வெளிநாட்டுப் பெண் ஹெலனாக, லண்டனைச் சேர்ந்த லியா நடித்திருக்கிறார். பார்வையாளர்களைச் சொக்க வைக்கும் அழகு மற்றும் இளமையுடன் திரையில் உலா வரும் அவர், அழகாகவும், சிறப்பாகவும் நடிக்கவும் செய்திருக்கிறார்.
மீனவ தலைவராக மதுசூதனன், வில்லனாக காட்பாடி ராஜன், தர்ஷன், மாறன், கஞ்சா கருப்பு ஆகியோர் படத்தின் முக்கிய காட்சிகளுக்கு தங்களது பங்களிப்பை கொடுத்து விறுவிறுப்பாக்கியுள்ளனர்.
இசையமைப்பாளர் சாண்டி சாண்டல்லோ இசையில் மெலொடி பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர்கள் டோனிசென் மற்றும் வெங்கடேஷ், கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கும் ஜெயலட்சுமி, முக்கோண காதல் கதையை அழகியலோடு சொல்ல முயற்சித்திருக்கிறார். ஒரு புதுமுக இயக்குனர் என்பது போல் அல்லாமல், அனுபவ இயக்குனரின் திறமையுடன் படத்தினை காட்சிப்படுத்திய விதத்திற்காகவே இயக்குனரை பெரிதாக பாராட்ட வேண்டும்









