
பிறப்பதற்கு முன்பே தந்தையையும், வளரும் வயதில் தாயையும் இழந்த ரங்கராஜ், கஷ்டப்பட்டு படித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிறார். நேர்மையான அதிகாரியாக ஜொலிக்கிறார். அழகான மனைவி, அன்பான மகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அவரது மனைவி நான்சி கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்
மனைவியின் மரணத்திற்குப் பிறகு தன்னை தானே அழித்துக் கொண்டு வாழும் நாயகனுக்கு, அவரது மனைவியை கொலை செய்தது யார்? என்ற உண்மை தெரிய வருகிறது. அதன்பிறகு அவர் என்ன செய்தார்? அவரது மனைவி எதற்காக கொலை செய்யப்பட்டார்?, கொலை செய்தது யார்? ஆகிய கேள்விகளுக்கான பதிலை, நாயகனின் தந்தை கொலையின் பின்னணியோடு சேர்த்து சொல்வது தான் ‘கட்ஸ்.
கிராமத்து விவசாயி தந்தையாக பெத்தனசாமி மற்றும் மகன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் என முதல் படத்திலேயே இரு வேறு கெட்டப்களில் யதார்த்தமான நடிப்பில் அசத்தியுள்ளார் ரங்கராஜ். .தந்தையின் முரட்டுத்தனத்தையும், மகனின் அதிகார தோரணையையும் வௌ;வேறு காலகட்டத்திற்கேற்றவாறு பிரதிபலித்துள்ளார்.
பெத்தனசாமி கர்ப்பிணி மனைவியாக ஸ்ருதி நாராயணன் சில காட்சிகள் தான் என்றாலும் உணர்ச்சிகள் நிறைந்து நிறைவாக செய்துள்ளார். போலீஸை எதிர்க்கும் போது துணிச்சலான பெண்ணாக, தைரியத்துடன் பழி வாங்கும் காட்சிகளில் மிளிர்கிறார்.
.
மற்றொரு நாயகியான நான்ஸி, மலையாள பேச்சில் நம்மை வெகுவாகவே கவர்ந்திருக்கிறார். தனது கணவன் மீது வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்தும் இடம் அழகு.
சாய் தீனாவின் மிரட்டல் நடிப்பு வலு சேர்க்கிறது. டெல்லி கணேஷ், பிர்லா போஸ், ஸ்ரீலேகா, அறந்தாங்கி நிஷா என அனைவருமே தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர்
ஜோஸ் பிராங்கிளின் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கும் வண்ணம் பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் மனோஜ் கதைக்களத்திற்கு ஏற்றவாறும், பட்ஜெட்டுக்கு ஏற்றவாறும் பணியாற்றியிருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் ரங்கராஜ், கதை எழுதி இயக்கவும் செய்திருக்கிறார். முதல் படத்திலேயே இயக்குநர், நாயகன் என்று இரட்டை குதிரை சவாரி செய்திருக்கும் ரங்கராஜ் நடிகராக மெனக்கெட்டது போல் திரைக்கதையிலும் சற்று கவனம் செலுத்தியிருந்தால் இயக்குநராகவும் ஸ்கோர் செய்திருப்பார். ஆனாலும் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், தமிழ் பெண்களின் வீரத்தையும் பறைசாற்றிய நல்ல படைப்பாக இப்படத்தைக் காணலாம்.
.









