
நாயகன் விஜித் பச்சான் ஒரு அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்கிறார். அந்த மருத்துவமனையின் அவலங்கள் பற்றி அவ்வப்போது அவர் வெளிப்படுத்துவதால் அது சாதிய உணர்வுள்ள மக்கள் நல வாழ்வுத் துறை அமைச்சர் மைம் கோபிக்கு பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. அந்த மருத்துவமனையில் குழந்தைக் கடத்தலும் நடைபெறுவது மாநிலம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்துகிறது.
டிஎஸ்பி சாய் வினோத் விஜித் பச்சானைக் கைது செய்து ரகசியமாக விசாரணை நடத்துதிய வகையில் அதில் அமைச்சரின் கடந்தகால வாழ்க்கை பற்றியும் அவரது குடும்பம் பற்றியும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவருகிறது. அமைச்சருக்கும் விஜித் பச்சானுக்கும் இடையே என்ன பிரச்சனை, முடிவு என்ன ஆனது என்பது மீதிக்கதை.
நாற்பதுகளில் இருப்பது போன்ற தோற்றத்தில், ஒரு சோர்வையும், அனைத்தையும் இழந்து பழிவாங்கும் வெறியை மட்டும் தக்க வைத்திருக்கும் பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார் விஜித் பச்சான். இளைஞர், வயதான தோற்றம் என்று மூன்று விதமான கெட்டப்புகளில் கச்சிதமாக பொருந்துவதோடு, பொருத்தமான நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்
சாராவாக ஷாலி நிவேகாஸ் அழகான காதலியாக, படத்தில் ஃபிளாஷ்பேக் காட்சிகள் தான் என்றாலும் முக்கியத்துவம் வாய்ந்து, உணர்ச்சிகரமான நடிப்பில் மிளர்கிறார், இறுதிக் காட்சியில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் தருகிறார்.
வில்லன்களாக மைம் கோபி, அருள்தாஸ் மற்றும் சாதி சங்கத் தலைவராக வரும் லோகு என இவர்கள் சரியான தேர்வு தான் தங்களது கதாபாத்திரத்தை மிகவும் சரியாக செய்து முடித்திருக்கின்றனர். இப்படியும் ஒரு அம்மா இருப்பார்களா என்று கூறும் அளவிற்கான நடிப்பைக் கொடுத்து வியக்க வைத்திருக்கிறார் சுபத்ரா.
இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் கொடூரத்தையும், அதனால் ஏற்படும் பெருங்கோபத்தையும் பார்வையாளர்களிடம் கடத்தும் வகையில் பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஜே.பி.தினேஷ்குமாரின் கேமரா காட்சிகளை அழகாக மட்டும் இன்றி கதாபாத்திரங்களின் மன உணர்வுகளையும், அவர்களிடத்தில் மண்டி கிடக்கும் வன்மத்தையும் திரையில் தெரிய வைத்திருக்கிறது
எழுதி இயக்கியிருக்கும் சிவபிரகாஷ், பல்வேறு காலக்கட்டங்களில் நடந்த சாதி வன்கொடுமை சம்பவங்களை திரைக்கதையில் பயணிக்க வைத்து மனதை பதற வைக்கிறார். சாதி வெறி பிடித்த ஊரில் ஊருக்கு நடுவே பல கொலைகளைப் பார்த்தும், தன் அம்மாவே சாதி வெறி பிடித்தவராக இருந்தும், காதலியை கேரளாவில் இருந்து கூட்டிக்கொண்டு நேரே தன் ஊருக்கு விஜித் வருவதில் எந்த லாஜிக்கும் இல்லை.
இன்றளவும் பல கிராமங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆணவக்கொலைகள் பற்றி பேசினாலும் திரைக்கதையின் வேகம் எந்த இடத்திலும் தொய்வடையவில்லை. . மனதை தொடும் உணர்ச்சிகளுடன் ஃபிளாஷ்பேக், க்ளைமேக்ஸ் காட்சிகள் திருப்பங்கள் நிறைந்து சிறப்பாக கொடுத்துள்ளார் இயக்குனர் சிவபிரகாஷ்.
.
.









