
வனப்பகுதியில் இருந்து வழித்தவறி வந்த குட்டி யானை ஒன்றை நாயகன் சண்முக பாண்டியனின் தாயார் தனது வயிற்றில் பிறக்காத பிள்ளையாக நினைத்து வளர்க்கிறார். அம்மாவின் மறைவுக்குப் பிறகு அவர் பாசமாக வளர்த்த யானையை நாயகன் சண்முக பாண்டியன் சகோதரனைப் போல் பார்த்துக் கொள்கிறார்.
குடும்ப கடனை அடைப்பதற்காக யானையை திருவிழாக்கள் கல்யாண வீடுகளுக்கு வாடகைக்கு விட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் கடனை அடைக்க நினைக்கிறது சண்முக பாண்டியன் குடும்பம்.ஆனால் ஒரு கட்டத்தில் அந்த யானை தொலைந்து போக, அதை சண்முக பாண்டியன் தேடிக் கண்டுபிடித்தாரா யானையை மீட்டு வர நாயகன் மேற்கொள்ளும் அடுத்தடுத்த போராட்டங்கள் வெற்றி பெற்றதா என்பதுதான் கதை.
கோபம், ஆக்ரோஷம், அதிரடியில் விஜயகாந்தை அப்படியே உரித்து வைத்தார் போல, களமிறங்கி அசத்தியிருக்கிறார் சண்முக பாண்டியன். முந்தைய படங்களை ஒப்பிடும்போது அவரது நடிப்பு மெருகேறி இருக்கிறது என்றாலும் நடிப்பில் தேர்ச்சி பெறவும் கொஞ்சம் உழைத்தால் நல்லது. யானையுடனான பாச காட்சிகள் புல்லரிக்க வைக்கிறது.
பழங்குடியின பெண்ணாக நடித்திருக்கும் யாமினி சந்தரரை நாயகியாக சொல்ல முடியுமா என்று தெரியவில்லை ஏனென்றால் நாயகனுடன் எந்த தொடர்பும் இல்லாமல் வருகிறார் அவர்..
விஜயகாந்த் வரும் இந்தக் காட்சியில் திரையரங்கமே விசில் சத்தத்திலும் கைதட்டல்களிலும் அதிர்கிறது. அப்பாவாக நடித்திருக்கும் கஸ்தூரி ராஜா பாத்திரம் உணர்ந்து உருக்கமாக நடித்திருக்கிறார்.
குணச்சித்திர கேரக்டர்களில் முனிஷ்காந்த், அருள் தாஸ், யூகிசேது, காக்கா கோபால், ஏ.வெங்கடேஷ் சீரான கதையோட்டத்துக்கு உதவுகிறார்கள்.
இளையராஜா இசை படத்துக்கு ஆனை பலம். இரண்டு பாடல்கள் மனதை வருடுகின்றன. எஸ்.ஆர் சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது யானைகள் வரும் காட்சிகள், அடர்ந்த காடுகளில் நடக்கும் சண்டைக் காட்சிகளில் அவரது உழைப்பு தெரிகிறது
தனது யானையை காப்பாற்ற போராடும் ஒரு நாயகனின் பயணத்தை, ஆக்ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் யு.அன்பு விஜயகாந்தை ஏஐ மூலம் மீண்டும் திரையில் தோன்ற வைத்திருப்பதும், அதனை திரைக்கதையோடு சரியான முறையில் பயணிக்க வைத்திருப்பதும் பாராட்டத்தக்கதாக இருக்கிறது திரைக்கதை நன்றாக இருந்தாலும் அதை இயக்குனர் கொண்டு சென்ற விதத்தில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கொடுத்திருக்கலாம்.
.









