Reviews

இட்லி கடை ; விமர்சனம்


தேனி பக்கம் உள்ள கிராமம் ஒன்றில் சிறிதாக இட்லி கடை ஒன்று நடத்தி வருகிறார் ராஜ்கிரண். படிக்கும் காலங்களில் தந்தைக்கு உதவியாக இருந்தாலும் அவரது மகனான தனுஷ், படித்த பிறகு அதை பல இடங்களில் விரிவுபடுத்த நினைக்கிறார். ஆனால் அதற்கு தந்தை ராஜ்கிரண் தரம் குறைந்து விடும் என தடை போடுகிறார். இதனால் வெளிநாட்டு வேலைக்கு செல்லும் தனுஷ், சத்யராஜின் நிறுவனத்தில் சேர அவரது மகளான ஷாலினி பாண்டே அவரை காதலித்து, அது திருமணம் வரை செல்கிறது.

திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தந்தை இறந்த செய்தி வர சொந்த ஊர் திரும்புகிறார் தனுஷ். இங்கே வந்தபிறகு மீண்டும் வெளிநாட்டுக்கு செல்லும் எண்ணத்தையும் அங்கே தனது திருமணத்திற்காக காத்திருக்கும் காதலியையும் கைவிட வேண்டிய சூழல் தனுசுக்கு ஏற்படுகிறது. அது எதனால் ? இதனால் கோபம் கொண்ட சத்யராஜ், அவரது மகன் அருண் விஜய் ஆகியோர் தனுஷுக்கு எதிராக களத்தில் இறங்க என்ன நடக்கிறது ? தனது தந்தையின் பாரம்பரிய இட்லி கடையில் தனுஷ் என்ன செய்தார் என்பது மீதி கதை.

வேட்டி சட்டை, தோளில் துண்டு, நெற்றியில் விபூதி என்று எளிமையின் மறு உருவமாக வலம் வருகிறார். தன் தந்தை, தாய் இறப்பிற்கு பிறகு அவர்களை நினைத்து ஏங்குவதும், அவர்கள் உயிரோடு இருக்கும் போதே கூட இருந்து கவனித்து கொள்ள முடியாமல் போனதை நினைத்து வருந்துவது என அவர் நடிப்பில் ஸ்கோர் செய்யும் காட்சிகள் ஏராளம். ஆக்சனிலும் குறைவைக்கவில்லை.

நாயகனின் அப்பாவாக, இட்லி கடை நடத்தும் சிவனேசனாக ராஜ்கிரண் நடித்திருக்கிறார். இவர் படத்தில் வருவது சிறிது நேரம் தான்; என்றாலும் அந்த குறை தெரியாதபடி படம் முழுதும் வருவது போல, கதையை தாங்கி பிடிப்பதே இவரது கதாபாத்திரம் தான்.

தேசிய விருது வாங்கிய நித்யா மேனன் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? கிராமத்து பெண்ணாக, அதட்டல், உருட்டல், காதல் என்று தன்னுடைய பங்களிப்பை அளவாக கொடுத்து நேர்த்தியாக செய்துள்ளார்.

அருண்விஜய் அந்த பணக்காரத் திமிரும் ஈகோவும் கொண்ட கதா பாத்திரத்தில் இறுதிவரை விளத்தனம் காட்டி அசர வைக்கிறார்.கிளைமாக்ஸில் அவருக்கான தண்டனை செம.

தனுஷை திருமணம் செய்யும் அளவிற்கு சென்று விட்டு பின் அந்த காதலும் திருமணமும் கைவிடாமல் போவதை வேறு வழியின்றி விரக்தியுடன் ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரத்தில் ஷாலினி பாண்டேவும் நிறைவாக நடித்துள்ளார்

ஒரு பக்கம் மகனுக்கு செல்லம் கொடுத்து விட்டு அவனை கண்டிக்க முடியாமல், அதே சமயம் நேர்மையாகவும் இருக்க முயற்சிக்கும் பிசினஸ்மேன் கதாபாத்திரத்தில் சத்யராஜ் சரியாக பொருந்தி இருக்கிறார்.

பார்த்திபன் தான் நிறைய எதிர்பார்க்க வைத்து ஏமாற்றி விட்டார். இந்த கதாபாத்திரத்திற்கு பார்த்திபன் எதற்கு என்று கேட்கும் அளவிற்கு அவரது வழக்கமான பாணி நடிப்பு இதில் மிஸ்ஸிங். தனுஷுக்கு அடுத்தபடியாக படம் முழுவதும் வரும் விதமாக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அழகாக ஸ்கோர் செய்கிறார் இளவரசு.

சமுத்திரக்கனி இனிமேல் வில்லனாக நடிப்பதை நிறுத்திக் கொள்ளலாம். அவரை ஒரு நேர்மையான மனிதராக பார்த்துவிட்டு வில்லனாக பார்க்க மனது ஒப்பவில்லை.

தனுஷின் அம்மாவாக கீதா கைலாசம், இட்லி கடையில் தினசரி வந்து ருசியை செக் பண்ணும் அந்த பெரியவர், சத்யராஜின் உதவியாளராக வரும் ஆடுகளம் நரேன் என பலரும் படத்திற்கு பக்க பலமாக துணை நின்றுள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கிரண் கெளசிக் கிராமத்தையும், வெளிநாட்டையும் ரசிக்கும் விதத்தில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

நம் சொந்த மண் மற்றும் மக்களுடன் பயணிக்கும் போது கிடைக்கும் நிம்மதி வேறு எதிலும் கிடைக்காது, என்ற கருத்தை ஒரு இட்லி கடையை மையமாக வைத்துக் கொண்டு அழகாக கதை சொல்லி இருக்கிறார். அதில் காதல், குடும்ப செண்மெண்ட், பகை கலந்த திரைக்கதையாக உணர்ச்சிகர உரையாடல்கள், தருணங்கள் மூலம் மெருகேற்றி ஒரு வெற்றி மாலையாக தொடுத்து கொடுத்துள்ளார் இயக்குனர் தனுஷ்.