Reviews

மரியா ; விமர்சனம்


கன்னியாஸ்திரி பயிற்சியில் இருக்கும் இளம்பெண் மரியா ஒரு தொலைபேசி கூட தன் கைவசம் இல்லாதவர். நான்கு வருட பயிற்சியில் அதிகம் விடுமுறை எடுக்காததால் சில நாட்கள் தனக்குத் தெரிந்த உறவுக்கார பெண் நகரத்தில் வேலை பார்க்கிறாள் என்பதால் அங்கே தங்கிச் போகலாம் என வருகிறார். மரியாவின் உறவினர் பெண்ணும் அவளுடைய தோழியும் இரு ஆண் நண்பர்களுடன் லிவ்விங் டுகதர் முறையில் அங்கே வசிக்கின்றனர்.

ஆரம்பத்தில் தன்னுடைய மத கோட்பாடுகளை கண்டிப்புடன் கடைபிடிக்கும் மரியாவுக்கு போக போக அந்த இளைஞர்களின் நடவடிக்கைகள் சலனத்தை ஏற்படுத்துகின்றன. இடையில் ஊருக்குச் சென்று தனது தாயிடம் தான் திருமண வாழ்க்கையில் நுழையை விரும்புவதை தெரிவிக்கிறார். தாய் எதிர்க்கவே வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் நகரத்திற்கு வந்து உறவுக்கார பெண் வீட்டில் தங்குகிறார்.

ஒரு பக்கம் கிறிஸ்தவ மத கோட்பாடுகளை எதிர்த்து சாத்தானின் கோட்பாடுகளை ஆதரிக்கும் பாவல் நவகீதனின் குழுவில் இணைகிறார். இன்னொரு பக்கம் தான் தங்கியிருக்கும் வீட்டில் தனது உறவுக்கார பெண்ணின் காதலன் மீது மரியாவுக்கு ஈர்ப்பு வருகிறது. இதற்குப் பிறகு எதிர்பாராத சிக்கல்கள் தேடி வருகின்றன. அதை மரியா சமாளித்தார். இறுதியில் என்ன ஆனது என்பது கிளைமாக்ஸ்.

கதாநாயகி மரியாவாக நடித்திருக்கும் சாய்ஸ்ரீ பிரபாகரன் அந்த கன்னியாஸ்திரி கதாபாத்திரமாகவே தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். இளம் வயதிற்கு உரிய அந்த ஏக்கம், விரக்தி, கோபம் ஆகியவற்றை தேவையான இடங்களில் சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் பாதை மாற முடிவு எடுத்தது சரி.. ஆனால் அதை சரியான பாதையாக தேர்ந்தெடுக்காமல் தடம் மாறும்போது தான் அந்த கதாபாத்திரம் மீது மதிப்பு குறைந்து விடுகிறது.

அதேபோல அவரது உறவுக்கார பெண்ணாக வரும் சித்து குமரேசனும் துணிச்சலான இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக தனது காதலனின் அறுவருக்கத்தக்க செயல் ஒன்றை பார்த்துவிட்டு அவர் சொல்லும் அந்த ஒற்றை வார்த்தை தியேட்டரையே அதிர வைக்கிறது.

சாத்தானின் தீவிர பக்தராக வரும் பாவல் நவகீதன் என்ன என்னவோ பேசுகிறார். அதெல்லாம் நமக்கு புரியவில்லை. இளம் பெண்களின் லிவ்விங் டுகெதர் காதலர்களாக வருபவர்கள் ஜொள்ளு விடுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.

இந்தப் படம் கிறிஸ்துவ மத பின்னணியில் எடுக்கப்பட்டிருந்தாலும் கிறிஸ்தவ மதத்தை தூக்கிப் பிடிப்பது போல எடுக்கப்படவும் இல்லை.. பல நேரங்களில் கிறிஸ்துவ மத குறைபாடுகளை சுட்டிக் காட்டுவது போலவும் சாத்தானின் வேதங்களை தூக்கிப் பிடிப்பது போலவும் இருப்பதால் எதை நோக்கிப் படம் பயணிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. கன்னியாஸ்திரி ஆக இருப்பவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு வர விரும்புவதை யாரும் தடுக்க மாட்டார்கள். ஆனால் அதற்காக இப்படி ஒரு பாதையில் செல்ல வேண்டுமென இயக்குனர் கோடிட்டு காட்டியிருப்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.