
சினிமாவை மையப்படுத்தி உருவாகும் சினிமா தமிழில் வருடத்திற்கு இரண்டு படங்கள் வந்தால் அது ஆச்சரியம். அப்படி ஒரு படமாக அதிலும் சுதந்திர காலகட்டத்திற்கு முன்பாக தமிழ் சினிமாவில் நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருக்கிறது, காந்தாவின் கதை என்ன ?
40களில் பிரபல இயக்குனரான சமுத்திரக்கனி, துல்கர் சல்மானை மிகப்பெரிய ஹீரோவாக தனது படங்கள் மூலம் வளர்த்து விடுகிறார். ஆனால் வளர்ந்த பின் தன்னை வளர்த்து விட்ட இயக்குனரிடம் பாராமுகம் காட்டி ஒதுங்குகிறார் துல்கர் சல்மான். ஆனால் சமுத்திரக்கனிக்கோ தனது கனவு படத்தை துல்கர் சல்மானை வைத்து இயக்க வேண்டும் என்பது ஆசை.
ஒரு வழியாக துல்கர் சல்மான் நடிக்க சம்மதித்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் தான் வளர்த்து விட்ட நபராக இல்லாமல் தன்னையே எதிர்த்து தனது படைப்பு சுதந்திரத்தில் குறுக்கீடு செய்யும் ஒரு ஹீரோவாக மாறி இருப்பதை சமுத்திரக்கனி உணர்கிறார். படம் எடுப்பதில் அவ்வப்போது பிரச்சனை வந்து ஒருவழியாக படமும் நிறைவுக்கு வருகிறது.
ஆனால் கிளைமாக்ஸில் இதுதான் எடுக்க வேண்டும் என உறுதியாக நிற்கிறார் சமுத்திரக்கனி. அதை மாற்ற வேண்டும் என கொடி பிடிக்கிறார் ஹீரோ. இதனால் படப்பிடிப்பு நிற்கிறது. இதன்பிறகு படம் வளர்ந்ததா “ வெளியானதா ? யாருடைய முடிவுப்படி கிளைமாக்ஸ் தீர்மானிக்கப்பட்டது ? இதற்கிடையே நடைபெறும் சில அதிர்ச்சிகரமான சம்பவங்கள் இவை தான் காந்தா படத்தின் கதை..
படத்தில் கொடுக்கப்பட்டது போல நடிப்பு சக்கரவர்த்தி என்கிற பெயருக்கேற்ப நடித்திருக்கும் துல்கர் சல்மான், தான் ஒரு நடிப்பு சக்கரவர்த்தி என்பதை காட்சிக்கு காட்சி நிரூபித்திருக்கிறார். நாளுக்கு நாள் நடிப்பு மோகம் கொண்ட ஒரு நடிகர் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் அவர் நிரூபிக்கிறார் துல்கர் சல்மான். கர்வம், கோபம், காதல், ஏக்கம் ஏமாற்றம், அவமானம் என அனைத்துவிதமான உணர்வுகளையும் விதவிதமாக வெளிப்படுத்தி உள்ளார்.
நாயகியாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீ போர்ஸ் அந்த காலகட்டத்து ராஜகுமாரி சரோஜாதேவி சாவித்திரி போன்றவர்களை ஞாபகப்படுத்தும் வகையில் பிரதியெடுத்தது போலவே இருக்கிறார். நடிப்பிலும் வியக்க வைத்திருக்கிறார்.
வழக்கமான சமுத்திரகனி தானே என அலட்சியத்துடன் பார்க்க ஆரம்பித்தால் இதில் படைப்புத்திறனும் கர்வமும் கொண்ட அந்த இயக்குநர் கதாபாத்திரத்தில் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டியிருக்கிறார். துல்கருடனான மோதலில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்ற கேள்வியை இறுதிக்காட்சி வரை கொண்டு செல்கிறது படம்..
போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வரும் ராணா டகுபதி இரண்டாம் பாதி படம் முழுவதையும் தனது அதிரடிப்பால் விறுவிறுப்பாக்குகிறார்.
உதவி இயக்குநர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கஜேஷ் நாகேஷ், துல்கர் சல்மானின் மனைவியாக நடித்திருக்கும் காயத்ரி, நாயகனின் மாமனராக நடித்திருக்கும் நிழல்கள் ரவி, ஸ்டுடியோ உரிமையாளராக நடித்திருக்கும் ரவீந்திர விஜய், காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், வையாபுரி, பக்ஸ் ஆகியோர் கிடைக்கும் கொஞ்ச நேர வாய்ப்பையும் பயன்படுத்தி ஸ்கோர் செய்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜானு சந்தர், பாடல்களுக்கான இனிய இசை மற்றும் பின்னணி இசை மூலம் அந்த காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார். அவர் மட்டுமா ? ஒளிப்பதிவாளர் டானி சஞ்செஸ் லோபெஸின் கேமரா கறுப்பு வெள்ளைக் காலத்திற்குள் நம்மைக் கொண்டு நிறுத்துகிறது. கலை இயக்குனர் ராமலிங்கத்தின் உழைப்பும் அந்தக் கால சினிமா செட்டுகளை கண்முன் நிறுத்தியுள்ளார்.
கதையை மிகவும் நேர்த்தியாக எழுதியிருக்கிறார் இயக்குனர் செல்வமணி செல்வராஜ். ஒரு இயக்குனருக்கு அவரால் வளர்ந்து வாழ்க்கை பெற்ற நடிகருக்குமான ஈகோ மோதலை படம் முழுக்க சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார். படத்தின் வசனங்கள் எல்லாம் ரசிக்கும் வகையில் இருக்கிறது. வழக்கமான நேரத்தை விட படம் சற்று நீளமாக இருந்தாலும், பார்வையாளர்களுக்கு அந்த உணர்வே ஏற்படாத வகையில் படத்தை தொய்வில் இருந்து மீட்டு விடுகிறார் இயக்குநர் செல்வமணி செல்வராஜ்.
.









