
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு இயக்கத்தில் கும்கி படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அதே பெயரில் இரண்டாம் பாகமாக இந்த படம் வெளி வந்தாலும் அந்த படத்திற்கும் இந்த படத்திற்கும் கதை, கதாநாயகன் எல்லாமே வேறு வேறு, யானை மட்டும் தான் பொதுவான விஷயம்.
சிறுவயதில் யானை குட்டி ஒன்றை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறார் நாயகன் மதி. அண்ணன், தம்பி போல இவர்கள் இருவரும் பழகினாலும் ஒரு கட்டத்தில் திடீரென அந்த யானை குட்டி காணாமல் போகிறது. எங்கு தேடியும் கிடைக்காமல் சோர்ந்துபோய் விரக்தியாகிறார் மதி. பின்னர் அடுத்த ஐந்து வருடங்களில் படித்து கல்லூரி முடித்து இளைஞனாக வெளியே வருகிறார் மதி.
அப்போது காணாமல் போன தனது யானையைப் பற்றிய ஒரு தகவல் கிடைக்க மீண்டும் அதை தேடி கிளம்புகிறார் மதி. யானையையும் கண்டுபிடிக்கிறார். ஆனால் அதன் பின்னணியில் ஒரு மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. அதை தீர்த்து மீண்டும் யானையை கைப்பற்றினாரா ? அப்படி என்ன யானைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சிக்கல் ? இதற்கெல்லாம் மீதிக்கதை விடை சொல்கிறது.
அறிமுக நடிகர் மதி முதல் படத்திலேயே தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். குறிப்பாக யானைக்கும் அவருக்குமான பாச காட்சிகள் சிறப்பு.
நாயகியாக அல்லாமல் சில காட்சிகளில் மட்டுமே வந்து போகும் ஷ்ரிதா ராவ் ஸ்கோர் செய்தாலும் அதிக காட்சிகள் இல்லாதது ஏமாற்றமே.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஆண்ட்ரூஸ், வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், அரசியல்வாதியின் உதவியாளராக நடித்திருக்கும் ஆகாஷ், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்
காடு, மலை, யானை என்றாலே ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கு அல்வா சாப்பிடுவது போல.. இந்தப்படத்திலும் காடு மலை, அருவி என ஆரம்பக் காட்சியிலேயே நம்மை அந்த இயற்கை சூழலுக்குள் நம்மை கையைப் பிடித்து அழைத்து சென்று விடுகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.
நிவாஸ் கே.பிரசன்னா பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது என்றாலும் பாடல்களை கேட்கும்போது கும்கியுடன் ஒப்பிட்டால் ஏமாற்றமே…
குழந்தைகளுக்கான படங்கள் வருவதில்லை என்ற குறையை போக்கும் வகையில் குழந்தைகளும் பெரியவர்களும் ரசித்து பார்க்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதையை அமைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன்.. படத்தின் பிரதான நாயகனாக பெரிய யானை நடித்துள்ளதுடன் கதையோட்டத்தில் அதுவும் ஒரு பாத்திரமாக நம் மனதில் தங்கி விடுகிறது. ஆனால் முதல் பாகத்தில் இருந்தது போல நாயகனுக்கும், யானைக்கும் இடையே இருக்கும் பாசத்தை தாண்டி படத்தில் எதுவும் இல்லாதது பெரும் பலவீனம்.
காட்டையும் யானையையும் ரசிக்கும் சுற்றுலா என நினைத்துக்கொண்டு ஒருமுறை இந்தப்படத்திற்கு போய் வரலாம்.









