Reviews

காட்டாளன் ; விமர்சனம்


காட்டில் இருக்கும் யானைகளைக் கொன்று, அதன் தந்தங்களை மிகப்பெரிய அளவில் கடத்தித் தனது சொந்த சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வாழ்கிறார் வில்லன் ‘புஷ்பா’ சுனில். அங்குள்ள பழங்குடியின மக்களைத் தனது அடிமைகளாக மாற்றித் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அவருக்குப் போட்டியாக, மந்திரி ஒருவரின் அடியாளான கபீர் துகான் சிங் அதே தந்தக் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார்.

இந்த இருவருக்கும் இடையே தொழில் போட்டி நிலவ, ஒரு சட்டப் பிரச்சனையில் சுனிலை மாட்டிவிட்டுத் தானே காட்டிற்கு ராஜாவாக மாற கபீர் திட்டமிடுகிறார். இந்தச் சூழலில், சுனிலின் கடத்தல் குழுவில் இணையும் நாயகன் ஆண்டனி வர்கீஸ், தனது புத்திசாலித்தனத்தால் பல கடத்தல்களைச் சாத்தியமாக்குகிறார்.

ஆனால், ஒரு கட்டத்தில் சுனிலின் அநியாயங்களை எதிர்த்து, அங்குள்ள அடிமை மக்களின் விடுதலைக்காக அவர் களம் இறங்கும்போது, இரண்டு வில்லன்களும் ஒன்று சேர்ந்து நாயகனைத் துரத்தத் தொடங்குகின்றனர். இறுதியாக அந்தக் காடும், தந்தக் கடத்தல் தொழிலும் யார் கைக்குச் செல்கிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

பிரபல படங்களான ‘புஷ்பா’ மற்றும் ‘கேஜிஎஃப்’ ஆகியவற்றின் பாணியைப் பின்பற்றி, அதே தீவிரமான டோனில் இந்தத் திரைப்படத்தை இயக்குனர் உருவாக்கியுள்ளார். செம்மரக் கடத்தலுக்குப் பதிலாக இங்கு யானைத் தந்தக் கடத்தல் பின்னணியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

யானைகளைக் கொன்று, அதன் தந்தங்களை ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்குக் கடத்தும் விறுவிறுப்பான பயணமே படத்தின் முதன்மையான பலமாக அமைந்துள்ளது. வில்லன் கதாபாத்திரத்தில் சுனில் மிகச்சிறப்பான மற்றும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நாயகனாக வரும் ஆண்டனி வர்கீஸ் படம் முழுக்க மிகவும் அமைதியான, கோபமான முகபாவனையோடு வலம் வந்தாலும், சண்டைக்காட்சிகளில் தனது அதிரடியான ஆக்ஷன் திறமையால் ரசிகர்களைக் கவராமல் விடவில்லை.

இடைவேளைக்குப் பிறகு அதிரடியான சண்டைக்காரியாக அறிமுகமாகும் துஷாரா விஜயன், தனது சிறப்பான கெட்டப் மற்றும் ஆக்ஷன் காட்சிகளால் மலையாளத் திரையுலகில் ஒரு அழுத்தமான பதிவை ஏற்படுத்தியுள்ளார்.

இவர்களுடன் ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா மற்றும் ஹிப்ஸ்டெர் போன்றோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை நிறைவாகச் செய்துள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாக, ஒளிப்பதிவாளர் ரெனடைவ் காட்டின் அடர்த்தியையும், ஆக்ஷன் காட்சிகளின் தீவிரத்தையும் தனது கேமரா மூலம் நேர்த்தியாகவும் பிரம்மாண்டமாகவும் காட்சிப்படுத்தியுள்ளார்.

கேஜிஎஃப் படப் பாணியில் ரவி பஸ்ரூர் அமைத்துள்ள பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளுக்குப் பெரும் பலம் சேர்த்திருந்தாலும், பல இடங்களில் ஓவர் சத்தமாகவும் பில்டப்பாகவும் அமைந்து சற்று அயர்வை ஏற்படுத்துகிறது.

ஸ்டண்ட் மாஸ்டர் கேச்சாவின் அதிரடியான, கொடூரமான சண்டை வடிவமைப்பு மற்றும் யானைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்திற்குப் பெரும் தூணாக அமைந்துள்ளன.

படத்தின் இறுதி நிமிடங்களில் ஒரு தாதா கதாபாத்திரத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கௌரவத் தோற்றத்தில் வந்து அடுத்த பாகத்திற்கான பில்டப்பைக் கொடுத்துச் செல்கிறார்.

இருப்பினும், படம் முழுக்கத் தொடர்ந்து வரும் அதீத வன்முறை, கொலைகள், ரத்தம் மற்றும் பழிவாங்கல் போன்ற விஷயங்கள் சாதாரண ரசிகர்களுக்குச் சற்று அயர்வைத் தருகின்றன. பல படங்களில் பார்த்துப் பழகிய ஒரு வழக்கமான கதையாக இது இருப்பது படத்தின் தொய்வாக மாறுகின்றன. இவ்வளவு கொலைகளும் வக்கிரங்களும் எதற்காக என்ற கேள்வி பல இடங்களில் எழுகிறது. மேலும், ஒரு சிலரைத் தவிர மற்ற கதாபாத்திரங்களின் முகங்கள் மனதில் பதியவில்லை.

மலையாள டப்பிங் படம் என்பதால் தமிழ் ரசிகர்களுக்கான பிரத்யேக ஈர்ப்பு இதில் சற்று குறைவாகவே உள்ளது. ஒட்டுமொத்தமாக, தீவிரமான ஆக்ஷன் மற்றும் வன்முறைக் காட்சிகளை மட்டுமே விரும்பும் ரசிகர்களுக்கு இந்த ‘காட்டாளன்’ ஒரு புதிய அனுபவமாக இருந்தாலும், குடும்பத்துடன் ரசித்துப் பார்க்கும் அளவிற்கான சுவாரஸ்யம் இதில் குறைவாகவே உள்ளது.