
கிராமத்தில் சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த சண்முக பாண்டியனை ஆதரவு கொடுத்து வளர்க்கிறார் அந்த ஊர் தாதாவான சரத்குமார். சிறுவயதிலேயே படிப்பை விட்டுவிட்டு சரத்குமாருக்கு உதவியாக ஒரு அடியாள் போல மாறுகிறார் சண்முக பாண்டியன். இவர்கள் இருக்கும் பகுதி வைகை அணையை சுற்றியது என்பதாலும் வைகை அணை கட்டிய போது இவர்கள் கிராமங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியதால் அதற்கு இழப்பீடாக தற்போது வைகையில் மீன் பிடிக்கும் பணியை அவர்களே கையில் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் டெண்டர் நடைமுறை கொண்டுவரப்படுகிறது.
இதில் அடிக்கடி பிரச்சினை நடந்தாலும் சரத்குமார் கையே ஓங்கி இருக்கிறது. மீன்பிடி தொழில் இல்லாத சமயத்தில் கஞ்சா கடத்தும் வேலையை இருவரும் செய்கின்றனர். இந்த நிலையில் அந்த ஊருக்கு புதிதாக வரும் இன்ஸ்பெக்டர் தார்ணிகா, எஸ்பி சுஜித் சங்கர் ஆகியோர் இவர்கள் இருவரது கொட்டத்தை அடக்க நினைக்கிறார்கள். அதிலிருந்து அவ்வப்போது லாவகமாக இவர்கள் இருவரும் தப்பிக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் கன மழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்க விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்காக மிகப்பெரிய அளவில் ஒரு லாரி லோடு கஞ்சாவை ஆந்திராவுக்கு கடத்தும் வேலையை சரத்குமாரும் சண்முக பாண்டியன் ஏற்கின்றனர். இந்த தகவல் போலீஸ் அதிகாரிகள் இருவருக்கும் தெரிய வருகிறது.
சரத்குமார் அண்ட் கோ இந்த கடத்தலை திறம்பட செய்தார்களா ? என்ன பிரச்சனையை எதிர் கொண்டார்கள் ? இவர்களை கையும் களவுமாக போலீஸ் அதிகாரிகளால் பிடிக்க முடிந்ததா என்பது மீதிக்கதை.
நாம் கதையைச் சொல்லிக் கொண்டு வரும்போது எங்கேயுமே சண்முக பாண்டியனை தனியாக சொல்லவில்லை கவனித்தீர்களா ? அதற்கு காரணம் இவர்கள் இருவருமே படம் முழுவதும் 90% காட்சிகளில் இணைந்து தான் வருகிறார்கள். நாயகிக்கும் நாயகனுக்குமான பாடல் காட்சியில் மட்டும் தான் சரத்குமார் இல்லை என்று சொல்லலாம்.
சரத்குமாருக்கு எதற்காக நரைத்த முடி கெட்டப் போட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால் கெட்டப்பை மாற்றினாலும் அவரது நக்கல் நையாண்டி கெத்து எல்லாமே வழக்கம் போல இருக்கிறது.
சண்முக பாண்டியனும் நாளுக்கு நாள் நடிப்பில் கொஞ்சம் மெருகேறி வருகிறார். இந்த படத்திற்காக தனது தோற்றத்தை கூட மாற்றிக் கொண்டு நடித்துள்ளார். இன்னும் நடிப்பில் கொஞ்சம் கூடுதல் பயிற்சி எடுத்தால் அடுத்தடுத்த கட்டத்திற்கு சீக்கிரம் முன்னேறலாம்.
அறிமுக நாயகி என்றாலும் கூட மிடுக்கான போலீஸ் அதிகாரியாக தாரணிகா பல காட்சிகளில் மிரள வைக்கிறார். குறிப்பாக அவர் ஜீப்பிலிருந்து ஸ்டைலாக இறங்கும் அழகே தனி. அதே போல சிடுசிடு போலீஸ் உயரதிகாரியாக சுஜித் சங்கரும் ஒரு சைக்கோ போலீஸ் போல காட்சி அளித்தாலும் அவருக்கு பின்னால் இருக்கும் நேர்மையும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
காளி வெங்கட், ஜார்ஜ் மரியான் என இரண்டு நகைச்சுவை நடிகர்களை போலீஸ் பக்கம் வைத்து விட்டு காமெடியை வீணடித்திருக்கிறார்கள். அதேசமயம் யாரோ ஒரு கல்கி ராஜா என்பவரை படம் முழுக்க நாயகன் கூட்டணியுடன் பயணிக்க வைத்து காமெடி என்கிற பெயரில் கதற வைக்கிறார்கள். கொஞ்சம் மாற்றி யோசித்து இருக்கலாம்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் உள்ளிட்ட கிராமத்து மண்மனம் சார்ந்த கதைகளை படமாக இயக்கிய இயக்குனர் பொன்ராம் என்பதால் மீண்டும் அவர் மீதான நம்பிக்கையில் இந்த படத்திற்கு சென்றால் அந்த முந்தைய படங்களில் இருந்த வீரியம் விறுவிறுப்பு இதில் சற்று குறைவு. அது சண்முக பாண்டியன் போன்ற வளர்ந்து வரும் பிரபல வாரிசு நடிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை கொடுக்காது.
சண்முக பாண்டியன் கதை தேர்வில் மட்டுமல்ல, இயக்குனர் தேர்விலும் கவனம் செலுத்தி தந்தையைப் போல ஒரு நல்ல இடத்தை அடைய வேண்டும் என்பதே நம்முடைய எண்ணம்.









