Reviews

மாண்புமிகு பறை ; விமர்சனம்


பறை இசைக்கலைஞர்களான லியோ சிவகுமார் தனது நண்பர்களுடன் ஒரு குழுவை நடத்தி, அழிந்து வரும் பறையிசையை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுத்து உயிர்ப்பிக்க நினைக்கிற நினைக்கிறார். இது ஊரிலுள்ள ஆதிக்க சக்திகளுக்கு பிடிக்கவில்லை. பறை ஒலிக்கவும் கூடாது, கற்றுக்கொடுக்கவும் கூடாது என்று தடை விதிக்கின்றனர்.

இந்த நிலையில் அருகில் உள்ள கிராமத்துக்கு இருவரும் பறை இசை நிகழ்ச்சிக்கு செல்லும்போது ஆர்யன் உயிரிழக்கிறார். சில தினங்களில் சிவகுமாரும் கொலை செய்யப்படுகிறார். இருவரையும் கொலை செய்தது யார்? கொலைக்கான பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதி கதை.

நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவகுமார் வெற்றி என்ற கேரக்டரில் வருகிறார். பேதம் பார்க்கும் மேல் தட்டு மக்களிடமிருந்து வரும் இடையூறுகளை பொருட்படுத்தாமல் அந்த கேரக்டரில் வாழ்ந்து காட்டி இருக்கிறார். கோவில் திருவிழாவுக்கு சென்ற தனது நண்பனின் உயிருக்கு ஆபத்து என தெரிய வந்ததும் அவரது துடிப்பும் தவிப்பும் நடிப்பில் தேர்ந்த நடிகராக அவரை முன்னிறுத்துகிறது

கதாநாயகனுக்கு கொஞ்சமும் குறைவில்லாத கதாபாத்திரம்தான் ஆரியனுக்கும். ஆனால் பறை இசைக் கலைஞனுக்கான உணர்வுகள் அவரது நடிப்பில் கொஞ்சம் பலவீனமாகவே செளிப்பட்டுள்ளன.

கணவர் லியோ சிவகுமாருடன் ரொமான்ஸ் மட்டுமின்றி அவர் கொலை செய்யப்பட்டதும் இறுதி காட்சியில் ஆக்ரோசத்தில் காயத்ரி ரெமா விஸ்வரூபம் எடுப்பது மிரள வைக்கிறது.

மேலும் கஜராஜ், ரமா, அசோக் ராஜா, சரண்ராஜ், காதல் சுகுமார், ஜெயக்குமார், பொன் சுரேஷ், அரங்கா குணசேகரன் நடித்திருக்கிறார்கள்.

தேவாவின் இசை ஆட்டம் போட வைக்கும் வகையில இருந்தாலும், பறை இசையின் ஆத்மாவை முழுசா உணர வைக்கிற அளவுக்கு இல்லை. கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவு வழக்கமான ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் குரல்களை மனதுக்குள் பதிய வைக்கிறது.

பாரம்பரிய பறை இசைக்கருவியை முன்னிலைப்படுத்தும் நல்ல எண்ணத்தில் எழுதி இயக்கியுள்ள எஸ்.விஜய் சுகுமார் அதை திரை வடிவத்தில் சொல்வதற்கு சற்று தடுமாறி இருக்கிறார் பெரும்பாலான காட்சிகளில் சாதி பிரச்சினையையும், ஆணவ கொலைகளையும் அடிக்கடி காட்டுவது சலிப்பை உண்டாக்குகிறது. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.. அதேசமயம் பறை கலைக்கு மரியாதை கோரும் குரலாகவும், ஒடுக்குமுறைக்கு எதிரான சிந்தனையாகவும் இந்த படம் பார்க்கத் தகுந்த முயற்சியாக நிற்கிறது

..