Reviews

குபேரா ; விமர்சனம்


கடலுக்கு அடியில் ஏராளமான எரிபொருள் வளம் இருப்பதை ஆய்வுக் குழு ஒன்று கண்டுபிடிக்கிறது. இந்தத் துறை சம்பந்தமான மத்திய அமைச்சரை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு தன் சுய லாபத்துக்கு இந்த எரிபொருள் வளத்தை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார் தொழிலதிபர் ஜிம் சர்ப்). அதற்கான லஞ்சப் பணமான ஒரு லட்சம் கோடியை, சம்பந்தப்பட்டவர்களுக்கு பிரித்தளிக்க முடிவு செய்து

இந்த வேலையை நேர்மையாக இருந்ததால், பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் சி.பி.ஐ அதிகாரி நாகர்ஜுனாசிடம் ஒப்படைக்கிறார்கள். அவரும் லஞ்சப் பணத்தை வெள்ளைப் பணமாக்க, போலியாகச் சில பினாமிகளை உருவாக்க முடிவெடுக்கிறார்.

அதற்காக பிச்சைக்காரர்கள் பெயரில் நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் பண பறிமாற்றத்தை மேற்கொண்டு, வேலை முடிந்ததும் அவர்களை கொலை செய்ய முடிவு செய்கிறார். அதன்படி, திருப்பதியில் பிச்சை எடுக்கும் தனுஷ் உள்ளிட்ட நான்கு பேரை தேர்வு செய்கிறார்கள்.

பிச்சைக்காரராக இருந்த தனுஷ் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதியாகிறார். அதே சமயம், வேலை முடிந்த பிறகு ஒவ்வொருவராக கொலை செய்யப்படுகிறார்கள். என்ன நடக்கிறது என்பதை அறியாத தனுஷ், ஆபத்தில் இருந்து தப்பித்தாரா? இல்லையா? என்பதை சுவாரஸ்யமாக சொல்வதே ‘குபேரா..

தனுஷா இது? என்று வியக்கவைக்கும் வண்ணம் அறிமுகமாகிறார். பிச்சைக்காரர் வேடத்துக்கு தோற்றத்தில் மட்டுமின்றி உடல்மொழியிலும் நியாயம் செய்திருக்கிறார். கோடீசுவரர் ஆன பின்பு அவருடைய நடை உடை பாவனைகளில் மாற்றத்தைக் காட்டி இரசிக்க வைக்கிறார்.

கதையின் நாயகியாக, சமீராவாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். வழக்கமாக ஆடல், பாடல், கவர்ச்சி என எந்த அம்சங்கங்களும் இல்லாமல், முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமாக நடித்திருகிறார். தனுஷை திட்டிக்கொண்டே ராஷ்மிகா மந்தனா உதவிகளை செய்வதெல்லாம் ரசிக்கும்படியான காட்சிகள்.

நேர்மையான அதிகாரியாக இருந்து, தவறானவர்களுடன் இணைந்து தடம் மாறும் பாத்திரத்தில் நாகர்ஜுனா பளிச்சிடுகிறார். படத்தின் ஆரம்பத்தில் இருந்து கிளைமாக்ஸ் வரை தனுஷுக்கு இணையாக இப்படத்தை தனது தோளில் சுமந்து செல்கிறார் நாகர்ஜுனா.

பெரும் கோடீஸ்வர தொழிலதிபராகவும், அரசாங்கத்தையே தன் பண பலத்தால் ஆட்டிப் படைக்கும் வில்லனாக ஜிம் சர்ப் தன்னுடைய கதாபத்திரத்தை உணர்ந்து மிரட்டலுடன் தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார். சுனைனா, சாயாஜி ஷிண்டே, தலிப் தஹில், பாக்யராஜ் மற்றும் ஹரிஷ் பேரடி மற்றும் பலர் படத்திற்கேற்ற பங்களிப்பை கொடுத்து திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை மூன்று மணி நேரம் திரைப்படத்தை அலுப்பு தெரியாமல் பார்க்க வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி ரெட்டியின் கேமரா திரைப்படங்களில் பார்த்திராத லொக்கேஷன்கள் மூலம் கண்களுக்கு விருந்துபடைத்திருக்கிறது.
.
இரண்டு ஹீரோக்கள் இருக்கும் படத்தில் முதல் அரைமணி நேரம் யாருமே இல்லாமல் கதை சொல்கிற இயக்குனர் சேகர் கம்முலாவின் கெத்து பாராட்டுக்குரியது. நீண்ட திரைக்கதையை, திரைப்படங்களில் சொல்லப்படாத பல விசயங்களை மிக விரிவாக முடிந்தளவிற்குச் சுவாரஸ்யம் குறையாமல் சொல்லியிருக்கிறார்..