Reviews

குமார சம்பவம் ; விமர்சனம்


தொலைக்காட்சியில் பிரபலமான’ பாண்டியன் ஸ்டோர் ‘கதாநாயகன் குமரன் சினிமா கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள படம் இது

சினிமாவில் இயக்குனராக முயற்சிக்கிறார் நாயகன் குமரன் தங்கராஜன். தங்கை, அம்மா, தாத்தா என கூட்டுக்குடும்பமாக சொந்த வீட்டில் வசிக்கிறார்கள். அவர்களது மாடியில் சமூக செயல்பாட்டாளர் குமரவேல், தாத்தாவின் அன்புக்கு பாத்திரமானவர் என்பதால் வாடகை கொடுக்காமலேயே குடியிருந்து வருகிறார். படம் எடுப்பதற்கு தயாரிப்பாளர் கிடைக்காத நிலையில் சொந்தமாக படம் எடுக்க வீட்டை விற்க முடிவு செய்யும் குமரன், தாத்தா ஜி.எம் குமாரிடம் அது குறித்து வலியுறுத்துகிறார்.

இதன் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தில் உயில் எழுதி வைத்துவிட்டு தாத்தா மரணிக்கிறார். இன்னொரு பக்கம் நல்ல விலைக்கு அந்த வீட்டை வாங்க ஒருவர் முன் வருகிறார். ஒரு மாத காலத்திற்குள் குமரவேலை அந்த வீட்டிலிருந்து காலி செய்தால்தான் வீட்டை விற்க முடியும் என்கிற நிலை உருவாகிறது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக தனது அறையில் குமரவேல் இறந்து கிடக்கிறார்..

அவரது மரணத்தில் உள்ள மர்மம் அந்த வீட்டை விற்க தடையாக நிற்கிறது. இதனை அடுத்து அவரது மரணம் இயற்கை தானா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பதை கண்டுபிடிக்க நாயகன் மற்றும் அவரது நண்பர் குழு திட்டமிடுகிறது. குமாரவேல் மரணத்தில் உள்ள மர்மம் துலங்கியதா ? நாயகனால் வீட்டை விற்க முடிந்ததா ? இதனால் என்ன புதிய பிரச்சனைகள் கிளம்பின என்பது மீதி கதை

நாயகனாக நடித்திருக்கும் குமரன் தியாகராஜன், கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருப்பதோடு, அனைத்து விதமான உணர்வுகளையும் மிகச்சரியாக வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். நல்ல கதைகளை தேர்வு செய்தால் நிச்சயம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வரலாம்

நாயகியாக நடித்திருக்கும் பாயல் ராதாகிருஷ்ணாவுக்கு குறைவான வேலை என்றாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.

டிராபிக் ராமசாமி போல் ஒரு சமூக சேவகராக வருகிறார் குமாரவேல், .கதையும் அவரை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளதால் அதை உணர்ந்து குமாரவேலும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

தாத்தாவாக வரும் ஜி.எம் குமார் கம்பீரமான தேர்வு. தன் நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை தாங்கி நிற்கிறார். கொஞ்சம் சீரியஸ் ஆக செல்கிறதோ என நினைக்கும் வேளையில் எல்லாம் நடிகர் பால சரவணன் அதை கலகலப்பாக மாற்றி தனது ஒன் லைனர் காமெடிகளால் ரசிகர்களை சிரிக்க வைக்கும் வேலையை செவ்வனே செய்திருக்கிறார்.

இடைவேளைக்குப் பிறகு குறிப்பாக கிளைமாக்ஸ் நெருங்கும் சமயத்தில் அரை மணி நேரம் காமெடியால் அதகளம் பண்ணுகிறார் நடிகர் வினோத் சாகர். மூன்று வில்லன்கள் இடத்திற்கே நேரில் சென்று அவர்களைப் பற்றிய உண்மையை அறிய இவர் நடத்தும் கூத்து இருக்கிறதே, செம கலாட்டா..

அதேபோல முக்கிய கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சிவா அரவிந்த் கொஞ்சம் டெரர், கொஞ்சம் காமெடி எனக்கு கலந்து கட்டி கலகலப்பூட்டுகிறார். அம்மா மற்றும் தங்கை கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் பொருத்தமான தேர்வு.

அச்சு ராஜாமணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்டு மகிழும்படி உள்ளது. பின்னணி இசை காட்சிகள் மற்றும் கதபாத்திரங்களின் உணர்வுகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவில் காட்சிகள் கதைக்களத்தின் தன்மையை கண்களில் கொண்டு சேர்க்கின்றன.

படம் முடியும் வரை ஏதோ ஒன்று நடக்கிறது.. நடந்திருக்கிறது.. அது என்ன என்று தான் பார்த்து விடுவோமே என்கிற ஆவலை படம் முழுவதும் ரசிகர்களிடம் தக்க வைத்து விடுகிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால். சிறிய பட்ஜெட்டில் ரசிகர்களை கட்டிப்போடும் விதமாக ஒரு படத்தை எப்படி கொடுக்க வேண்டும் என்கிற வித்தையை இதில் சரியாக கையாண்டு இருக்கிறார். அவரது முக்கிய பலமே வசனம். அதை பயன்படுத்தி இருக்கும் சூழலும் இடமும் கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறது.