Reviews

லோகா சாப்டர் 1 : சந்திரா ;விமர்சனம்


சூப்பர்மேன் கதை அம்சத்துடன் எத்தனையோ படங்கள் ஹாலிவுட் வந்திருக்கின்றன. தென்னிந்திய மற்றும் பாலிவுட்டிலும் கூட அப்படி படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் முதன்முதலாக சூப்பர் உமன் கதைய அம்சத்துடன் வெளியாகி இருக்கும் படம் இது. கல்யாணி பிரியதர்ஷன் இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். படம் எப்படி இருக்கிறது பார்க்கலாம்.

நண்பர்களுடன் சேர்ந்து வேலைக்காக முயற்சி செய்து வருகிறார் ஹீரோ நஸ்லேன். அவரது எதிர் வீட்டில் தனி பெண்ணாக குடி வருகிறார் கல்யாணி பிரியதர்ஷன். பகலில் எங்கும் செல்லாமல் இரவில் மட்டுமே வேலைக்கு சென்று வருகிறார். அவர் மீது ஹீரோவுக்கு ஈர்ப்பு ஏற்பட அவரை பின்தொடர்கிறார்.

மனித உறுப்புகளை கடத்தும் கும்பலுடன் ஒருமுறை கல்யாணிக்கு பிரச்சனை ஏற்பட அதன் காரணமாக அவரையும் கடத்திச் செல்ல முயற்சிக்கிறது அந்த கும்பல். ஹீரோவும் அவரை காப்பாற்ற பின் தொடர்கிறார். ஆனால் தன்னை கடத்தியவர்களை அசால்டாக கொலை செய்கிறார் கல்யாணி. அப்போதுதான் கல்யாணி பற்றிய பல அதிர்ச்சிகரமான உண்மைகள் அவருக்கு தெரிய வருகின்றன.

இதற்கிடையே இந்த கொலைகள் பற்றி விசாரிக்கும் போலீஸ் அதிகாரி சாண்டிக்கு கல்யாணி மீது சந்தேகம் ஏற்பட அவருக்கு செக் வைக்கிறார் சாண்டி.கல்யாணி யார், அவர் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மம் என்ன, இந்த பிரச்சனைகளில் இருந்து அவரால் தப்பிக்க முடிந்ததா என்பது மீதி கதை

சூப்பர் ஹீரோ சந்திரா கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அந்த கதாபாத்திரத்தை பார்வையாளர்களிடம் தன்னுடைய அசத்தலான கண் அசைவாலும் …அளவான உச்சரிப்பாலும்… நேர்த்தியான உடல் மொழியாலும்…எளிதாக கடத்துகிறார்.

சன்னி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பிரேமலு’ புகழ் நாயகன் நஸ்லன் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். இவருடைய நண்பர்களாக வரும் நடிகர் சந்து சலீம் குமார் ரசிகர்களை எளிதில் கவர்கிறார்.

நாச்சியப்ப கவுடா என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாண்டி மாஸ்டர் அற்புதமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை நடிப்பால் மிரட்டுகிறார்

சிறப்பு தோற்றத்தில் வரும் டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் மற்றும் திரையில் தோன்றாத பெரியவர் கதாபாத்திரங்கள் எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில் திரைக்கதையில் கையாளப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை, ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் கோணங்கள் மற்றும் வண்ணங்கள் படத்தை பிரமாண்டமானதாக மட்டும் இன்றி தரமானதாகவும் கொடுத்திருக்கிறது.

படம் முழுவதும் ஆக்சன் திரில்லர் என பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருப்பதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரசித்துப் பார்க்கலாம்.