
கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும் புரட்சியாளருமான பி. கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்க்கைக் கதையும், அரசியல், பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமூக நீதிப் போராட்டங்கள் ஆகியவற்றில் கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான ஒற்றுமையும் தான் படத்தின் கதை.
கிராமம் ஒன்றில் கம்யூனிசவாதியாக வாழ்ந்து வருகிறார் பரத். இவர் தொடர்ச்சியாக ஏழை எளிய மக்களுக்காக குரல் கொடுத்து வருபவர். பக்கத்து ஊரில் ஒரு பிரச்சனை ஏற்பட, அங்கு செல்லும் பரத் அம்மக்களிடத்தில் அனைத்தையும் எடுத்துக் கூறி, அம்மக்களில் சிலரை 96 வயதுடைய கம்யூனிச போராளி பி கே மேதினியிடம் அழைத்துச் செல்கிறார் பரத். அவர் தன் வாழ்க்கையில் கிருஷ்ணபிள்ளை எங்கு சந்தித்தேன்.. அவரின் போராட்ட வரையறை குறித்து அம்மக்களிடத்தில் கூறுகிறார்.
பரத்துடன் சென்றவர்கள், ஃபிளாஷ்பேக்கில் சொல்லப்படும் தோழர் பி.கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கைக் கதையைக் கேட்டு, கற்றதும் பெற்றதும் என்ன? சீனியர் மாணவரை ஒருதலையாய் காதலித்த பரத்தின் மகளது காதல் கைகூடியதா? என்பன போன்ற கேள்விகளுக்கு நெஞ்சுரத்துடன் விடை அளிக்கிறது ‘வீர வணக்கம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
பி.கிருஷ்ண பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, மக்களுக்காக போராடிய தலைவர்களின் தியாகங்களை நினைவுப்படுத்தும் விதமாக ஆக்ரோஷமாகவும் புரட்சிகரமான வசனங்களை உணர்வுப்பூர்வமாகவும் பேசி நடித்திருப்பது, அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது.,
பரத் பெரிய மீசையோடு கம்பீரமான தோற்றத்தில்,அந்த தாராள குணம் உள்ள பொதுவுடமை இயக்க வீரராக வருகிறார். அவருக்கு அது வயது தாண்டிய பாத்திரம் என்றாலும் அதில் அவர் பொருந்துகிறார். சிறப்பாகவே செய்திருக்கிறார்.
கம்யூனிஸ்ட் போராளியாக நடிக்கும் ரித்தேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கும் பிரேம் குமார், மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள ரமேஷ் பிஷாரோடி, சுரபி லட்சுமி, புரட்சிகர பாடகி பி.கே. மேதினி, ஆதர்ஷ், ஐஷ்விகா ஆகியோர் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான தேர்வுகள்.
கவியரசுவின் ஒளிப்பதிவில் பிரமாண்டம் இல்லை என்றாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்தும் வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர்கள் எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஆகியோரது இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாக பயணித்திருக்கிறது.
கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட விவசாய தொழிலாளர்களை மீட்டெடுக்கும் இந்த புரட்சி வேந்தனின் கதைக்குள் புதிய மக்கள் புரட்சியை கம்யூனிசம் எப்படி உருவாக்கியது, என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் அனில் வி.நாகேந்திரன்.
சமத்துவம், செயல்பாடு, நீதி போன்ற கருப்பொருள்களை எதிரொலித்து ஒடுக்கப்பட்ட சமூகங்களின் சிந்தனையை தூண்டி தைரியத்தை கொடுத்து திரைக்கதையால் சக்தி வாய்ந்ததாக கொடுத்திருப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார் இயக்குனர் அனில் வி.நாகேந்திரன். மிகப்பெரிய பொருட்செலவு, பிரமாண்டமான காட்சியமைப்புகள், பிரமிக்க வைக்கும் மேக்கிங் போன்ற மாயாஜாலங்கள் இல்லை என்றாலும், ஒரு புரட்சிகரமான தலைவரைப் பற்றிய புத்தகம் படித்த அனுபவத்தை படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் அனில் வி.நாகேந்திரன்









