
தமிழகத்திற்குள் துப்பாக்கி கலாச்சாரத்தை உருவாக்க ஐந்து கண்டெய்னர் லாரிகளில் துப்பாக்கிகளை கொண்டு வருகிறது தீவிரவாத கும்பல். அதை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட தன்னுடைய குழுவுடன் முயற்சிக்கிறார் என்ஐஏ அதிகாரியான பிஜுமேனன். அவரது கட்டுப்பாட்டையும் மீறி நகரத்தில் உள்ள மிகப்பெரிய கேஸ் கம்பெனி ஒன்றுக்குள் அந்த ஐந்து கண்டெய்னர்களையும் பதுக்குகிறார்கள்.
அங்கேயே அவற்றைத் தாக்கி அழிக்க வேண்டும் என்றால் அது தற்கொலை படையினரால்தான் முடியும் என முடிவுக்கு வருகிறார் பிஜுமேனன். அந்த சமயத்தில் தான். நன்றாக காதலித்துக் கொண்டிருந்த காதலி தன்னை விட்டு விலகிச் சென்று விட்டாள் என கூறி தற்கொலைக்கு முயற்சிக்கிறார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து அவர் தற்கொலைக்கு சில முறை முயற்சிப்பதால் பேசாமல் அவரையே அந்த கேஸ் குடோனில் உள்ள கண்டெய்னர்களை அழிப்பதற்கு தற்கொலை படையாக அனுப்பலாம் என்று முடிவு செய்கிறார் பிஜுமேனன்.
சிவகார்த்திகேயனும் அதை ஏற்றுக்கொண்டு அங்கே செல்கிறார். அதே நேரத்தில் அவரது காதலி ருக்மிணி வசந்த், சிவகார்த்திகேயனை தேடி வந்து பிஜுமேனன் முனால் நிற்கிறார். சிவகார்த்திகேயன் என்ன ஆனார் ? இந்த துப்பாக்கி கலாச்சாரத்தை பரவ விடாமல் தடுப்பதற்கு சிவகார்த்திகேயன் எந்த வகையில் உதவியாக இருக்கிறார் ? இதனால் அவர் சந்திக்கும் இழப்புகள் என்ன என்பது மீதிக்கதை.
படம் என்னவோ காதல் கதை என்றாலும் அதை மையப்படுத்திய ஆக்சன் கதை என்பதால் சாக்லேட் பாய் சிவகார்த்திகேயனை எங்கும் பார்க்க முடியவில்லை.. படம் முழுவதிலும் தாடி வளர்த்துக் கொண்டு ஆக்சன் ஹீரோ மோடியிலேயே வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். இதுவும் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது. குறிப்பாக அடிதடி ஆக்ஷனில் இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு மிரட்டி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இன்னொரு பக்கம் ருக்மணியுடன் காதலும் பிஜு மேனன் குழுவினர் உடனான காமெடியும் கூட சிவகார்த்திகேயன் ரசிகர்களை எதிர்பார்த்தது போல் திருப்தி படுத்துகிறது.
கதாநாயகி ருக்மிணி வசந்த் அழகு பதுமையாக வந்து போகிறார். மற்றவர்களுக்கு உதவி செய்தால் அதை காரணம் காட்டி கதாநாயகனை விட்டுப் போகும் காதலிகளை தான் நாம் பார்த்திருக்கிறோம். மற்றவர்களுக்கு உதவி செய்யாததால் காதலை முறித்துக் கொண்டு போகும் இந்த கதாநாயகி கதாபாத்திரம் தமிழுக்கு புதுசு தான். அதில் அழகாக பொருந்தி இருக்கிறார் ருக்மிணி வசந்த்.
நீண்ட நாளைக்கு பிறகு மலையாள நடிகர் பிஜு மேனன். அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்திற்குள் எந்த அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என அவர் தனது உயிரை கூட துச்சமாக நினைத்து போராடும் அந்த கதாபாத்திரம் அவர் மீதான மரியாதையை பல மடங்கு உயர்த்துகிறது.
அவரது மகனாக விக்ராந்த் படம் முழுவதும் வருகிறார். விக்ராந்த் ஹீரோவாக நடிப்பதை விட இது போன்ற நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ் சினிமாவில் இன்னும் தொடர்ந்து பல வருடம் பயணிக்கலாம்.
வில்லன்களாக துப்பாக்கி புகழ் வித்யூத் ஜாம்வால் மற்றும் நம்ம டான்சிங் ரோஸ் சபீர் கல்லரக்கல் இருவருமே அசத்துகிறார்கள். சண்டைக் காட்சிகளில் வித்யூத் கைதட்டல் அள்ளுகிறார். சபீரும் தன் பங்கிற்கு மிரட்டி இருக்கிறார். இவர்கள் தவிர மற்றவர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
அனிருத்தின் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்புக்கு துணை நின்று இருக்கிறது. கண்டெய்னர் சேசிங் மற்றும் என்ஐஏ ஆபீஸ் சண்டைக் காட்சிகளில் சுதீப்பின் ஒளிப்பதிவு மிரட்டல்.
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸின் படங்களில் நிச்சயம் சமூகத்திற்கு தேவையான ஒரு கருத்து இருக்கும். இந்த படத்திலும் அது இருக்கிறது. எங்கோ எப்போதோ கொஞ்சமாக இருந்த மது, போதைப்பொருள் எல்லாம் இப்போது பள்ளி மாணவர்களுக்கு கூட கைக்கெட்டும் தூரத்தில் வந்து விட்டதால் என்னென்ன நிகழ்கிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.. அப்படி துப்பாக்கிகளும் இன்றைய சமூகத்திற்கு கிடைத்துவிட்டால் எவ்வளவு பேரழிவு என்பதை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ஆக்சன் காட்சிகளை, அதை வடிவமைத்த விதத்தில் எப்போதும் தான் நம்பர் ஒன் என்பதை முருகதாஸ் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். அந்தவகையில் மதராஸி திரைப்படத்தை பெருமையாக காலரை தூக்கி விட்டுக் கொள்ளும்படி கொடுத்திருக்கிறது முருகதாஸ்-சிவகார்த்திகேயன் கூட்டணி.
மதராஸி – சல்யூட்









